search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
    X

    குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    Next Story
    ×