search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget session"

    • இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
    • ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

    2019-ம் ஆண்டு அருண் ஜெட்லி மறைவுக்கு பிறகு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனுடன் இதுவரை 6 பேர் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள்.

    முதல் தமிழ் மந்திரி

    சுதந்திரம் பெற்றதும் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இந்தியரின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

    கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்தான் இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆவார்.

    டி.டி.கிருஷ்ணமாச்சாரி

    மத்திய மந்திரியாக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய 4 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில் பொருளியல் துறையில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

    சி.சுப்பிரமணியம்

    1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 3 முறை இந்திராகாந்தி ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரது பூர்வீகம் பொள்ளாச்சி.

    ஆர்.வெங்கட்ராமன்

    இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1950-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்தவர். தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றியவர்.

    இந்தியாவின் 8-வது ஜனாதிபதியாக 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இந்திய அரசியலில் இலங்கை சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் படுகொலை, பங்கு சந்தை ஊழல் என நெருக்கடியான கால கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று வந்த முதல் ஜனாதிபதியும் இவர்தான்.

    ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர்களில் அதிக தடவை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் மட்டுமே.

    இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 75 பட்ஜெட்டுகளில் 6 தமிழர்கள் 23 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள்.

    • இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும்.
    • நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    புதுடெல்லி :

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.

    ஜனாதிபதி உரையைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். மடிக்கணினி மூலம்தான் இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுதான் அவர் தாக்கல் செய்கிற முழுமையான கடைசி பட்ஜெட், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.

    இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    அவை பற்றிய ஒரு பார்வை:-

    * புதிய வரி விதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

    * மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம்.

    * வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின்கீழ் வழங்கப்படுகிற வரி விலக்கு சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்.

    * வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் வரலாம்.

    * மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம்.

    * உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    * விவசாயிகளுக்கு கூடுதல் கடன்கள் வழங்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படலாம்.

    * பெண்களை கவரும் விதத்தில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதாவது வரக்கூடும்.

    * இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

    இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

    சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ந் தேதி முடிவு அடைய இருந்தது. அதை முன்கூட்டியே 10-ந் தேதி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன. 11-ந் தேதி, 12-ந் தேதி சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 10-ந் தேதியே முதல் அமர்வை முடிக்கலாம் என்று கட்சிகள் கேட்டுள்ளன.

    அலுவல் ஆய்வு குழு முன் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி உள்ளார் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    • ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது.
    • பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும்.

    பாராளுமன்றத்தில் உரையாற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். குதிரைப்படையினர் புடை சூழ பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    பாராளுமன்றத்துக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

    புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும்.

    வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

    9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.

    நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது.

    நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது.

    நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது.

    கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது.

    கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும். கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம்.

    குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

    நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது. முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

    நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர்.

    கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர்.

    2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம். தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது.

    இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும்.

    பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    • டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
    • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.

    * ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமே இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது

    * பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது

    * பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி.

    * அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.

    * பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

    * விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

    * உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
    • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இதில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது.
    • முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு இன்று தொடர்ங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு பூஜ்ய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில் இரு சபைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார்.

    இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் பழைய கட்டடத்திலேயே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது.
    • 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.கேசவராவ் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    • தந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
    • தியாகிகள் போரடியதால்தான் 75 ஆண்டாக சுதந்திரமாக வாழ்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை செய்தி விளம்பரத்துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    விழாவுக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பழங்கள் அடங்கிய தொகுப்பு, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தியாகிகள் போரடியதால்தான் 75 ஆண்டாக சுதந்திரமாக வாழ்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    உலகம் வியக்கும் அளவுக்கு நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நம் எண்ணம். புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவம், பொறியியல் பட்டங்களை மாணவர்கள் பெறுகின்றனர். பலர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.

    கல்வி, மருத்துவத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விரிவாக ஆலோசனை நடத்தி ஓய்வூதியம் உயர்த்துவது உட்பட பல முடிவுகள் எடுக்கப்படும்.

    தியாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கலெக்டர் வல்லவன், செ ய்தித்துறை இயக்குனர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் 10 தியாகிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரத்து 418 தியாகிகள் பயனடைவர்.

    காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்கோவிந்த் தெரிவித்தார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) பியூஸ்கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது.

    தற்போது நாம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எனவே 2019-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.

    மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    2014-ம் ஆண்டு இந்தியாவில் கழிவறை வசதியுடன் சுமார் 40 சதவீதம் வீடுகள் தான் இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 98 சதவீதம் பேர் கழிவறை பெற்றுள்ளனர்.

    ஏழைகளுக்கு அதிக பணம் கொடுத்து மருந்துகள் வாங்கும் சக்தி இல்லை என்பதால் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் குறைந்த விலை மருந்து கடைகள் 700-க்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 4 ஆயிரத்து 900 மருந்து வகைகள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    ஏழை பெண்கள் நலனுக்காக மானிய விலையில் கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 6 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழைகள் விறகு அடுப்பு புகை தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

    13 கோடி பேருக்கு மானியம் விலையில் சமையல் கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.

    முத்தலாக் பிரச்சனை காரணமாக முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் அச்சமின்றி வாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கடந்த 4½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

    ஏழை எளியவர்களுக்காக முத்ரா கடன் பெறும் வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பலன் பெற்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. முன்பு 3.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். தற்போது 6.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பணக்காரர்கள் பல்வேறு வெளிநாடுகளில் தங்களது பணத்தை சட்ட விரோதமாக கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்தனர். அதை தடுக்கும் விதத்தில் அந்த நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.



    ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.

    சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும்.

    எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு வி‌ஷயத்தில் இந்த புதிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

    இந்திய விமான படையில் விரைவில் அதிநவீன ரபேல் போர் விமானம் சேர்க்கப்படும். இது நமது விமானப் படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.

    காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தேசிய சுகாதார காப்பீடு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் 50 கோடி பேருக்கு மேல் பலன் அடைவார்கள்.

    சுகாதாரத்துக்காக நாட்டின் நான்கு புறமும் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையிலும், காஷ்மீரில் குல்காம் நகரிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

    சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தார். அவரது வழியில் தற்போது சாலைகள் இணைப்பு மேம்பாடு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இளைஞர்களின் திறமையை மேம்படுத்த “ஸ்டாண்டு ஆப்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கல்வி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி., 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.

    நாடு முழுவதும் கேந்திர வித்யா பள்ளிகள் அதிகளவில் திறக்கப்படும். முதல் கட்டமாக 103 கேந்திர வித்யா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருவாய் 1½ மடங்கு அதிகரித்துள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தக்க உதவிகள் செய்வதால் தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதால் மேலும் பல ஏழைகள் சம அளவில் முன்னேற்றம் பெறுவார்கள்.

    மகளிருக்கு பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வளர்ந்து உள்ளது.

    இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையாக நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.

    இதேபோல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    பிப்ரவரி 13-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், மக்களைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் கடைசியாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 31-ந் தேதி தொடங்குகிறது. 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சபையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #Parliament #Budgetsession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர், பிப்ரவரி 13-ந் தேதி வரை நீடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும்.

    இந்த ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

    எனவே, பிப்ரவரி 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், இடைக்காலமாக அப்பொறுப்பை கவனிக்கும் பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் இரு அவைகளின் தலைவர்களும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 30-ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, பட்ஜெட் தொடர் தொடங்கு வதற்கு முன்பு, 31-ந் தேதி காலையில், சபையில் உள்ள கட்சிகளின் குழு தலைவர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.

    அதுபோல், மத்திய அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் என்று தெரிகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். #Parliament #Budgetsession
    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி)13-ந்தேதி வரை நடைபெறுகிறது. #BudgetSession #Parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி)13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந்தேதி காலை 11 மணி அளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் உரையாற்றுகிறார்.

    பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான (2019-2020) இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திரமோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும். மேலும் இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரும் இதுவாகும். #BudgetSession #Parliament 
    ×