search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காப்பீட்டு திட்டங்களால் 21 கோடி பேர் பலன்- ஜனாதிபதி உரையில் தகவல்
    X

    காப்பீட்டு திட்டங்களால் 21 கோடி பேர் பலன்- ஜனாதிபதி உரையில் தகவல்

    காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்கோவிந்த் தெரிவித்தார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) பியூஸ்கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது.

    தற்போது நாம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எனவே 2019-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.

    மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    2014-ம் ஆண்டு இந்தியாவில் கழிவறை வசதியுடன் சுமார் 40 சதவீதம் வீடுகள் தான் இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 98 சதவீதம் பேர் கழிவறை பெற்றுள்ளனர்.

    ஏழைகளுக்கு அதிக பணம் கொடுத்து மருந்துகள் வாங்கும் சக்தி இல்லை என்பதால் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் குறைந்த விலை மருந்து கடைகள் 700-க்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 4 ஆயிரத்து 900 மருந்து வகைகள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    ஏழை பெண்கள் நலனுக்காக மானிய விலையில் கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 6 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழைகள் விறகு அடுப்பு புகை தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

    13 கோடி பேருக்கு மானியம் விலையில் சமையல் கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.

    முத்தலாக் பிரச்சனை காரணமாக முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் அச்சமின்றி வாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கடந்த 4½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

    ஏழை எளியவர்களுக்காக முத்ரா கடன் பெறும் வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பலன் பெற்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. முன்பு 3.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். தற்போது 6.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பணக்காரர்கள் பல்வேறு வெளிநாடுகளில் தங்களது பணத்தை சட்ட விரோதமாக கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்தனர். அதை தடுக்கும் விதத்தில் அந்த நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.



    ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.

    சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும்.

    எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு வி‌ஷயத்தில் இந்த புதிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

    இந்திய விமான படையில் விரைவில் அதிநவீன ரபேல் போர் விமானம் சேர்க்கப்படும். இது நமது விமானப் படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.

    காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தேசிய சுகாதார காப்பீடு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் 50 கோடி பேருக்கு மேல் பலன் அடைவார்கள்.

    சுகாதாரத்துக்காக நாட்டின் நான்கு புறமும் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையிலும், காஷ்மீரில் குல்காம் நகரிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

    சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தார். அவரது வழியில் தற்போது சாலைகள் இணைப்பு மேம்பாடு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இளைஞர்களின் திறமையை மேம்படுத்த “ஸ்டாண்டு ஆப்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கல்வி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி., 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.

    நாடு முழுவதும் கேந்திர வித்யா பள்ளிகள் அதிகளவில் திறக்கப்படும். முதல் கட்டமாக 103 கேந்திர வித்யா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருவாய் 1½ மடங்கு அதிகரித்துள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தக்க உதவிகள் செய்வதால் தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதால் மேலும் பல ஏழைகள் சம அளவில் முன்னேற்றம் பெறுவார்கள்.

    மகளிருக்கு பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வளர்ந்து உள்ளது.

    இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையாக நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    Next Story
    ×