search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget 2023"

    • நீங்கள் எவ்வளவு சேற்றை நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும்.
    • முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது, பிரதமர் மோடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். விவாதம் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். பதிலுரையின்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.

    இந்த அமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். பிரதமர் மோடி பேசியதாவது:-

    விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சேறு அவரிடத்தில் இருந்தது, என்னிடத்தில் நன்னீர் இருந்தது. யாரிடம் என்ன இருந்ததோ, அதுதான் மேலெழும்பி வந்தது. நீங்கள் எவ்வளவு சேற்றை அந்த நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும். தாமரை மலர்வதற்கு தாங்கள் செய்யும் இந்த சேவைக்காக நான் உங்களுக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.

    நேற்று எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது, 60 ஆண்டுகளாக நாங்கள் வலுவான அடித்தளம் அமைத்து வைத்திருந்தோம் என்று சொன்னார். 2014ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை என்ன? என்பதை அறிய முயற்சி செய்தேன். காங்கிரஸ் குடும்பத்தின் எண்ணம் வலுவான அடித்தளம் அமைப்பதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கு பார்த்தாலும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் சிறிய சிறிய நாடுகள்கூட முன்னேறி வந்துகொண்டிருந்தன.

    அவர்களின் காலம் நன்றாக இருந்தது. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை எல்லாம் அவர்களின் ஆட்சிதான். ஆனால் அவர்கள் செய்த பணிகள் எல்லாம், எப்படி இருந்தது என்றால், நாடு ஒரு பிரச்சனையைக்கூட தீர்த்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. பிரச்சனையை தீர்க்கவேண்டியது அவர்களின் கடமை. பிரச்சனைகளில் உழன்று நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் வேறு, அவர்களின் திட்டம் வேறு. இதனால் அவர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு துறை வாரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் குறிப்பிட்டு அதற்கு நிதி எதுவும் ஒதுக்காதது ஏமாற்றம் தான்.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை குறைந்தது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்ல மாநிலங்களுக்கு கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் வரையரைக்கப்பட்டு உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருவாய் உயரும். இது 2022-23-ம் ஆண்டுக்கான மாநிலத்தின் பட்ஜெட் ரூ.33,311 கோடியை விட அதிகமாகும்.

    2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 0.5 சதவீதம் மின்துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    2023-24-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ரூ.41,664.86 கோடியாக இருக்கும் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

    தோல் மற்றும் தோல் அல்லாத பாதணிகள் மற்றும் எலக்ட்ரோ லைசர் உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம் மற்றும் மரப்பொருட்கள் துறையில் முதலீட்டை ஈர்க்க இறக்குமதி செய்யப்படும் மரத்தின் மீதான வரியை குறைக்கவும் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கர்நாடகா மாநிலத்துக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிஒதுக்கப்பட்டது போன்று தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி வருவாய் தான் நமக்கு முக்கியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை.
    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மீது தேசிய பேரிடர் தொகுப்பு வரி போடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிகரெட்டின் விலை 5 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரையில் உள்ளது. 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் 10 ரூபாய் சிகரெட்டின் விலை ஒரு ரூபாய் 60 காசு அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் 5 ரூபாய் சிகரெட் 80 காசுகள் உயர்ந்து ரூ.5.80 ஆகும். இதேபோன்று 20 ரூபாய் மதிப்பிலான சிகரெட்டின் விலை 3 ரூபாய் 20 காசு உயர்கிறது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருவதால் சிகரெட் பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    செல்போன், டி.வி. ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலைகள் குறையும். தொலைக்காட்சி பாகங்களுக்கான சுங்கவரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டி.வி. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.வி.யின் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், பேட்டரி மீதான இறக்குமதி மீதான வரியும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன் விலை ரூ.500 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக பிரியதர்ஷினி செல் யூனிவர்ஸ் நிறுவனர் எம்.ஜி.சுரேஷ் குமார் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் செல்போன்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களின் விலை இனி குறைய வாய்ப்பு உள்ளது.

    இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை. இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    இருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள் விலை 5 சதவீதம் வரை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களின் விலை ரூ.500 வரை குறையும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டிவி பாகங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
    • எல்இடி டிவிக்களின் 60 முதல் 70 சதவீத உற்பத்தி செலவை ஒபன் செல் பேனல்கள் எடுத்துக் கொள்கின்றன.

    உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

    ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

    "தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்," என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார்.

    பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை ஐந்து சதவீதம் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பல்வேறு டிவி உற்பத்தியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார். 

    • அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
    • விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பு என்று நாம் போற்றும் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    அதாவது விவசாயத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 468 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை, அறிவியலுக்கு மாறான பயிர் காப்பீட்டு திட்டம், வெள்ளம், வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை.

    பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு ரூ.5,300 கோடி வழங்குவதாக கூறியுள்ளது. இதில் 40 சதவீத கமிஷனை கழித்தால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கிடைக்கும். மேலும் பத்ரா திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை இந்த நிதியை செலவு செய்ய முடியாது. உணவு மானியம், நரேகா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.மத்திய அரசு கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது.

    நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது இந்த பட்ஜெட் காட்டுகிறது. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை. ஆதரவு விலை பற்றி கூறவில்லை. சிறுதானியங்களில் ராகியும் ஒன்று என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கத்தில் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறுகையில், "பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேசிய திட்டமாக அறிவித்து விரைவாக பணிகளை தொடங்க வேண்டும். இப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அது தேர்தலுக்கு பிறகே அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் அடுத்து கர்நாடகத்தில் புதிதாக அமையும் அரசின் பங்கும் முக்கியமானது. சில ரெயில்வே திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. அதை நிறைவேற்ற மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அறிவிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் வைத்தும், ரூ.380 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
    • உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மும்பை :

    மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியதாவது:-

    விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

    ரூ.7 லட்சம் வரையிலான வருமானவரி விலக்கு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். நடுத்தர மற்றும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் உதவும்.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், "பா.ஜனதா தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் அதையே செய்கிறது" என்றார்.

    • காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.
    • ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பழமையான, காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.

    'மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் கொள்கை' என்று கூற நினைத்த அவர், 'பழமையான அரசியலை (கட்சியை) மாற்றுவது' என்று தொடங்கினார்.

    உடனே ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. பழமையான அரசியல் கட்சியான காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜனதா வலிமையான கட்சியாக உருவெடுத்து இருப்பதாக அவர் உள்ளர்த்தத்துடன் பேசியதாக கருதி, ஆளுங்கட்சியினர் சிரித்தனர்.

    நிர்மலா சீதாராமன் உடனே சுதாரித்துக்கொண்டு, ''மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ச்சியான கொள்கை'' என்று திருத்திக்கொண்டார்.

    மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.
    • கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது

    புதுடெல்லி :

    நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் வங்கி கணக்குகளை கையாளும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் திட்டம் குறித்தும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது' என தெரிவித்தார்.

    பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்கவும், பசுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் இந்த தொற்றுநோய் காலத்தில் யாரும் பசியாக இருக்கவில்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

    பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜனவரி 1 முதல் அரசு செயல்படுத்துகிறது.

    பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கான விளை பொருட்களுக்கு விலை ஆதரவு மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உற்சாகமாக உள்ளது.

    வேளாண் துறையில் தனியார் முதலீடு நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை.
    • இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை மத்திய அரசு அமிர்த காலம் என அழைத்து வருகிறது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் பட்ஜெட் நாட்டை வளர்ந்த நாடாக்குவதற்கு அடித்தளமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    ஆனால் மத்திய அரசு தனது கார்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக குற்றம் சாட்டி இந்த காலத்தை 'நண்பர்கள் காலம்' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில் இந்த பட்ஜெட்டை 'நண்பர்கள் கால பட்ஜெட்' என அவர் குறைகூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த திட்டமில்லை. சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை.

    1 சதவீத பணக்காரர்களுக்கு 40 சதவீத செல்வம் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஊதியத்தின் 64 சதவீதத்தை ஜி.எஸ்.டி.யாக செலுத்துகிறார்கள். 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

    இருந்தாலும் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை.

    இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை.
    • பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற ஜி.எஸ்.டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத பல கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்களில் எந்தக் குறைப்பும் இல்லை' என குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், 'இந்த பட்ஜெட்டால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஏழைகளுக்கு அல்ல. வேலை தேடும் இளைஞர்கள், வேலை இழந்தவர்கள், பெரும்பகுதி வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கும் அல்ல. மொத்தத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கானது அல்ல' என தெரிவித்தார்.

    • பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

    மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.

    மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ். உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

    மத்திய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில் மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

    நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×