search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi amavasai"

    • கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.

    கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

    ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.

    குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    திருச்சி:

    இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

    அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரிகரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.

    இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • நாளை ஆடி அமாவாசை தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ந வபாஷாணத்திற்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், நாளை (16-ந்தேதி) ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்து உள்ள கடல் பகுதி வரை கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையாக பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    • இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள்.
    • இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.

    நாளை மறுநாள் காலை எழுந்து, அருகில்இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாக நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் 12 பேர்.
    • அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்..

    ஜோதிடத்தில் சூரியனை பிதுர்காரகன் என்பர். பிதுர் என்பது, தந்தையை குறிக்கும். சந்திரனை மாத்ருகாரகன் என்பர். மாத்ரு என்றால் தாய் என்று அர்த்தம். சூரியனும், சந்திரனும் அமாவாசைகளில்தான் சேரும். எனவே தந்தை மற்றும் தாய்க்குரிய கிரகம் ஒன்றாகக் கூடி வரும் நாளில், இவர்களை நினைப்பது பொருத்தமாக இருக்கும். அதனால்தான் அமாவாசையை முன்னோர் வழிபாட்டு நாளாக கருதுகின்றனர்.

    பிதுர்லோகம் எனப்படும் முன்னோர் உலகத்தில் இருப்பவர்களுக்கு, நாம் கொடுக்கும் தர்ப்பண பொருளான எள்ளும், நீரையும் சூரிய பகவானே அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

    இன்னொரு விசேஷ தகவல். செவ்வாய்க்கிழமையன்று அமாவாசை வருமானால், அதை பவுமாதி அமாவாசை என்பர். பவுமன் என்றால் செவ்வாய் என பொருள். செவ்வாயை பூமிகாரகன் என்பர்.

    இந்நாளில், நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட பேச்சை ஆரம்பித்தல், கடனை அடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலாம். இந்நாளில் கடன் தீர்க்கப்பட்டால், மீண்டும் கடன் தொல்லை வராது என்பர்.

    இவ்வாண்டு ஆடி அமாவாசை நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.55 மணிக்கே தொடங்கி விடுகிறது. இதில் இருந்து மாலை சூரியன் மறையும் நேரமான மாலை 6.33 மணிக்குள் மேற்கண்ட பணிகளைச் செய்யலாம். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தர்ப்பணம் செய்யலாம்.

    அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் புனிதமானது. சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது நிகழும் அமாவாசை ஆடி அமாவாசை.

    இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பொதுவாக ஆடி அமாவாசை நாளில்தான் பித்ருக்கள் பூமியை நோக்கிய தம் பயணத்தை தொடங்குவர். எனவே ஆடி அமாவாசை தர்ப்பணம் என்பது பித்ருக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.

    பொதுவாக நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் 12 பேர். தந்தை வழியில் தந்தை, பாட்டனார், பாட்டனாரின் தகப்பனார், தாயார், தகப்பனாரின் தாயார் மற்றும் பாட்டனாரின் தாயார் ஆகிய அறுவருக்குத் தர்ப்பணம் வழங்க வேண்டும். அதே போல் தாய் வழியிலும் தாயாரின் தகப்பனார், தாயின் தகப்பனாரின் தகப்பனார், தாயின் பாட்டனாருக்குத் தகப்பனார், தாய்க்குத் தாய், தாய்ப் பாட்டனாருக்கு மனைவி, தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி ஆகிய அறுவருக்கும் கட்டாயம் தர்ப்பணம் வழங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவர்கள் தாய் தந்தையரின் இரண்டு தலைமுறை பித்ருக்கள். இவர்கள் தவிர சகாருணீகர்கள் எனப்படும் பங்காளிகள், உறவினர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

    அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.

    அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் அத்தகைய சிறப்பான தினங்களாகும். நாளை மறுநாள் புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

    எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் முன்னோர்களின் படங்கள் முன்னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயாசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும்.

    இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள். அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.

    அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்..

    திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.

    இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.

    பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய்.. ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்.. அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

    எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.
    • மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப் படுகிறது. நாளை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் நாளை மறுநாள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்புமிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    அடுத்து, தானம்...

    நாளை மறுநாள் உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்பட அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    இதையடுத்து தர்ப்பணம்...

    நாளை மறுநாள் நாம் ஒவ்வொ ருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்?

    இந்த பாவ மூட்டைகளை நீக்க நாளை மறுநாள் மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    • நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது.
    • குடிபோதையில் வரும் நபர்கள் ரோட்டில் அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    உள்ளூர் விடுமுறை

    நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. எனவே அந்த நாளில் தென் மாவட்ட மக்கள் வழிபாடு செய்வ தற்கும், குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கும் வாய்ப்பாக அன்றைய தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் திருவிழா காலம் முடியும் வரை வழக்கம் போல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்குவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சமத்துவ மக்கள்கட்சி

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வரும் நபர்கள் ஆபாசமாக ரோட்டில் சுற்றி திரிவதும், ஆபாச வார்த்தைகளால் பேசித் திரிவதும், அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி செல்லும் நபர்கள் சாலையில் வைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி மது அருந்தி விட்டு அந்த பாட்டில்களை நயினார்குளத்தில் வீசுகின்றனர்.

    ஒரு சிலர் போதையில் அந்த பாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. மேலும் அவர்கள் சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டுவதும், ஆபாசமாக திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தனர்.

    பாரதிய ஜனதா

    பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில்,நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 0462-2576878 ஆகும். இந்த தொலைபேசி எண்ணானது கடந்த ஒரு மாதமாக செயல்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தொலைபேசியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • ஆடி அமாவாசை திருவிழாவிற்காக இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்லலாம்.
    • தனியார் வாகனங்கள் இன்று மாலைக்கு பிறகு, நாளை முதலும் கட்டாயம் அனுமதிக்கப்படாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனுமதி நீட்டிப்பு

    சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை மட்டும் தனியார் வாகனங்களில் பொது மக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    எக்காரணம் கொண்டும் இன்று மாலைக்கு பிறகும், நாளை (திங்கட்கிழமை) முதல் தனியார் வாகனங்கள் கட்டாயம் அனுமதிக்கப் படாது. பொதுமக்கள் அனைவரும் அகஸ்தியர் பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். பொதுமக்கள் அனைவரும் அரசு துறை களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சூரியன் உதயமாகி சற்று வடக்கு திசை நோக்கி பயணம் செய்வது உத்தராயணம் ஆகும்.
    • உத்தராயண காலம் எல்லாவிதமான சுபசெயல்களுக்கும் ஏற்றதாகும்.

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும். அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்டவேண்டும். மூன்று முறை சென்றால் மூன்று ஆற்றல்களான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்.

    மனிதரை பிடித்த கெட்ட ஆவிகள் யாவும் அங்காள பரமேசுவரி பார்வை பட்டவுடன் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து அழிந்து ஒழிந்துவிடும்.

    சீமந்த வழிபாடு

    அங்காள பரமேஸ்வரியின் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடத்தப்படுவதற்கு முன்பு, அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துவதை மரபாக வைத்துள்ளனர். 5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் 7 வித சாதம் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்

    திதி கொடுக்க ஏற்ற நாள்

    சூரியனின் பயணத்தை வைத்து உத்தராயணம்', தட்சணாயனம்' என ஒரு ஆண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அயனம்' என்றால் பயணம் என்று பொருளாகும்.

    சூரியன் மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமாகிய தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயணம்'' என அழைக்கப்படுகிறது.

    சூரியன் கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, ஆகிய ஆறு மாதங்கள் தட்சணாயனம் என்று அழைக்கப்படுகிறது.

    சூரியன் உதயமாகி சற்று வடக்கு திசை நோக்கி பயணம் செய்வது உத்தராயணம்' ஆகும். சற்று தெற்கு நோக்கி பயணம் செய்வது தட்சணாயனம்' ஆகும்.

    அதாவது உத்தராயணத்தில் சூரியன் தென்கிழக்கில் உதயமாகி வடமேற்கில் மறைவது போன்றும், தட்சணாயனத்தில் வடகிழக்கில் உதயமாகி தென்மேற்கில் மறைவது போன்றும் தோற்றமளிக்கும். உத்தராயண காலம் தேவர்களுக்கு பகல் பொழுது என்றும், தட்சணாயனம் காலம் தேவர்களுக்கு இரவுக்காலம் என்றும் கூறப்படுகிறது. எனவே உத்தராயண காலம் எல்லாவிதமான சுபசெயல்களுக்கும் ஏற்றதாகும்.

    உத்தராயண காலத்தின் தொடக்கமான தைமாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறந்த பெற்றோர்கள் மற்றும் நம்முடைய முன்னோர்களை (பித்ருக்களை) இந்த அமாவாசையில் வணங்குவதன் மூலம் நலம் பெறுவதாக நம்பிக்கை.

    பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது பேணிப் பாதுகாக்க வேண்டும். இறந்த திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அவர்களுக்கு திதி தரவேண்டும்.

    இறந்த தேதியை பார்த்து திதி அளிக்க தெரியாதவர்கள் அல்லது மறந்தவர்கள் ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் நதிகள், கடற்கரையோரங்களில் புரோகிதர் மூலமாக திதி கொடுக்கலாம். கருடபுராணத்தில் மகனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

    இவ்வுலகத்திலும், மேல் உலகத்திலும் இன்பத்தை பெற நினைப்பவன் முன்னோர்களுக்கு திதியும், தர்மமும் செய்திருக்க வேண்டும். செய்ய தவறினால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து போய்விடும்.

    நல்லமகனை பெற்றவனே அனைத்து உலகங்களிலும் நன்மையை அடையலாம் என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் அவர்களுக்கு மேல் உலகிலும் நன்மை கிடைக்கும்.

    நீத்தார் கடன்களை செய்யாமல் விட்டு விடக்கூடாது. ஒவ்வொருவரும் பெற்றோர்களை பேணுதல் முக்கிய கடமை போன்று திதி செய்வதும் கடமையே ஆகும். மறைந்த நம் முன்னோர்களின் ஆசியை இதன் மூலம் பெறலாம். அதனால் மிகுந்த நன்மையுண்டாகும்.

    ஆடி அமாவாசை தினத்தன்று திருவையாறில் சிவபெருமான் கயிலை கோலமான அம்மையப்பரின் காட்சியை திருநாவுக்கரசருக்கு காண்பித்தார். இந்த காட்சி அப்பர் கயிலாயக்காட்சி என்று அழைக்கப்படுகிறது.

    • துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.
    • அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    அமாவாசை என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாசையாகும்.

    சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை.

    இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

    துவிதியை திதி

    துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாட்களில் இரண்டாவது நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    துவிதியை எனும் வடமொழிச் சொல் இரண்டாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் இரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் துவிதியையை சுக்கில பட்ச துவிதியை என்றும், பூரணையை அடுத்த துவிதியையை கிருட்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கின்றனர்.

    • சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும்.
    • தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.

    அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.

    சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    • அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
    • மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    கடல் கூடும் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.

    கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்சம் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பா காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.

    பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள் .

    திருமண தடை நீங்கும்

    பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

    முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில்தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே. காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

    ×