search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீராடல்"

    • ராமேசுவரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது.
    • திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமா வாசை மற்றும் மாதந்திர அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று பங்குனி மாத சர்வ அமா வாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் வருகை தந்தனர்.

    தம்மோடு வாழ்த்து மறைந்து முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது. அசம்பாவி தங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலிலும் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று மாசி மாத மறைநிலா அமாவாசை.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மாசி மாத மறைநிலா அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

    அக்னி தீர்த்தக் கடலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் நினைவாக அவர்களுக்கு திதி தர்பணம் மற்றும் பிண்ட பூஜை கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட நேரம் காத்திருந்து நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பின்னர் மதியம் 1.31 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த வாரி நடைபெற்றது. அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    • தீர்த்த யாத்திரை’ என்றாலே கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும்.
    • மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது.

    நீராடுதல் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமானது அல்ல. அது ஆன்மிகத்திலும் மிக விசேஷமாக பேசப்படுகிறது. பொதுவாக `தீர்த்த யாத்திரை' என்றாலே, புனிதமான இடங்களில் உள்ள கோவில்களைச் சார்ந்த கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும். உதாரணமாக `காசிக்கு தீர்த்த யாத்திரை செல்கிறோம்' என்று கூறினால், அங்கே கங்கை நதியில் நீராடுதல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

    அதேபோல் மகா மகம் என்று சொல்லும் பொழுது, அனைவரின் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது. கும்ப ராசியில் சூரியனும், குரு பகவானும் சஞ்சாரம் செய்யும் போது, சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் தினத்தையே `மகா மகம்' என்று கொண்டாடுகிறோம். அதைத்தவிர பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

    ஸர்வக்ஷேத்ர க்ருதம் பாபம் காசீக்ஷேத்ரே வினச்யதி

    வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி

    கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி

    எந்த இடத்தில் செய்யும் பாவங்களும் காசிக்கு வந்து கங்கை நதியில் குளிப்பதால் தீர்ந்து விடும். வாரணாசியில் செய்யும் பாவம் கும்பகோணத்தில் வந்து மகா மக குளத்தில் குளித்தால் நீங்கி விடும். ஆனால் கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள், வேறு எந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாலும் நீங்காது. அந்த பாவங்கள் நீங்க வேண்டுமானால், நாம் நிச்சயமாக கும்ப கோணத்தில் உள்ள மகா மக குளத்தில்தான் குளித்தாக வேண்டும் என்பதே, கும்பகோணம் மகா மக குளத்திற்கு உரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.

     சாபம் நீங்கிய வருணன்

    ஒரு சமயம் வருண பகவானுக்கு ஏற்பட்ட சாபமானது, மகாவிஷ்ணுவின் அருளால் நீங்கியது. அப்படி வருணனின் சாபம் நீங்கிய தினம் ஒரு மாசி மாத மகம் நட்சத்திரம் ஆகும். அவருக்கு சாபம் நீங்கிய தினத்தில் அனைத்து நீர் நிலைகளிலும், புனித நதியான கங்கை இருப்பதாக சொல்லப்படுகிறது.

    எனவே மாசி மகம் அன்று, நாம் கோவில்களில் உள்ள குளங்கள், புண்ணிய நதிகள், கடலில் நீராடுவதால், வருணனைப் போலவே, நம்முடைய சகல பாவங்களும் நீங்கும் என்பதாக ஐதீகம் உள்ளது.

    மாசி மகம் என்பது பெருமாள் கோவில்களில் மட்டுமல்லாது, சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள் என்று அனைத்து கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    `அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ ஹ்யவந்திகா, புரீத்வாரவதீ சைவ ஸப்தைதே மோக்ஷதாயிந' என்று சாஸ்திரங்களால் சொல்லப்பட்ட, முக்தியைத் தரும் ஏழு முக்கியமான திருத்தலங்களிலும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே இடம் காஞ்சிபுரம் ஆகும்.

    அந்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலிலும், வரதராஜப் பெருமாள் கோவிலிலும் மாசி மக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவதைக் காண முடியும்.

     தாட்சாயிணி அவதரித்த தினம்

    முன்பொரு முறை திருக்கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. சிவனின் கண்களை பார்வதி மூடியது சில நொடிகள்தான் என்றாலும், அது உலக உயிர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகும்.

    எனவே அத்தனை காலம் துன்பத்தை அனுபவித்த உயிர்களின் பாவங்கள், பார்வதியை அடைந்தது. தன் தவறை உணர்ந்த பார்வதி, "என் பாவங்கள் நீங்க என்ன வழி?" என்று ஈசனைக் கேட்டார். அதற்கு அவர், "நீ யமுனை நதிக் கரைக்குச் சென்று தவம் செய்" என்றார்.

    அதன்படியே யமுனை நதிக்கரைக்கு வந்த பார்வதிதேவி, தன்னை வலம்புரி சங்கின் வடிவமாக மாற்றிக் கொண்டு, தாமரைப் பூ ஒன்றில் அமர்ந்து தவம் செய்து வந்தாள். இந்த நிலையில் தட்சன் என்ற மன்னன், தனக்கு பார்வதியே மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.

    ஒரு முறை தட்சன் தன் மனைவியுடன் யமுனை நதியில் நீராட வந்தபோது, தாமரைப் பூவில் இருந்த வலம்புரி சங்கைக் கண்டான். அதை கையில் எடுத்தவுடன், அந்த சங்கு ஒரு அழகிய பெண் குழந்தையாக மாறியது. அதற்கு `தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாக கந்தபுராணம் எடுத்துரைக்கிறது. அப்படி அம்பிகையை தட்சன் கண்டெடுத்த தினம் `மாசி மகம்' என்கிறார்கள். அதன் காரணமாகவும் மாசி மகம் நட்சத்திரம் போற்றுதலுக்குரியதாக மாறியது.

    மாசி மகம் நாள் அன்று அருகில் உள்ள குளங்களிலோ, நதிகளிலோ, கடற்கரையிலோ, சுவாமி தீர்த்தவாரி செல்கின்ற இடத்திலோ `கங்கே ச யமுநே சைவ கோதாவரி சரஸ்வதி| நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு' என்ற மந்திரத்தைக் கூறி, வருண பகவானை தியானித்து நீராடுவது மிகுந்த புண்ணிய பலன்களை பெற்றுத் தரும்.

    ஓரிடத்தில் குளிக்கும்போது அந்த ஆலயத்தில் உள்ள தெய்வங்களின் நாமங்களைச் சொல்லி குளிக்க வேண்டும். தாமிரபரணி, காவிரி போன்ற இடத்தில் குளிக்கும்போது, அங்குள்ள நதிகளின் பெயரையும், சுவாமியின் பெயரையும் சொல்லி நீராட வேண்டும். புனித நதி, குளம், கடல் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது ஒற்றை துணி உடுத்தி குளிக்க வேண்டும். ஆடையின்றி குளிப்பது ஆகாது. சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதை தவிர்க்கவும். நீருக்குள் மலம், ஜலம் கழிப்பது பாவம்.

    முதலில் நீராடும் புனித தீர்த்தத்தின் நீரை கைகளால் தொட்டு தலையில் தெளிக்க வேண்டும். பின்னர்தான் கால்களை நீரில் நனைக்க வேண்டும். எடுத்தவுடன் கால்களை நீரில் நனைக்கக்கூடாது. நீராடும் போது முழுமையாக மூழ்கி எழ வேண்டும். நீராடியதும் ஈரமான துணிகளை குளத்தில், நதியில் விடுவதோ, கரையில் குவித்து போடுவதோ கூடாது.

     நீராடலின் வகைகள்

    நீராடுதல் என்றால், நாம் சாதாரணமாக குளிப்பது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர், நீராடுதல் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது, அதற்கு அதிபதியாக இருக்கக்கூடிய வருண பகவான் தான். நீராடுவதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    விபூதி ஸ்நானம்:-

    முறைப்படி தயார் செய்த விபூதியில், நீர் விட்டுக் குழைக்காமல் உடல் முழுவதும் பூசிக்கொள்வது. இதனை `பஸ்மோத்தூளனம்' என்றும் அழைப்பார்கள்.

    கோ தூளி ஸ்நானம்:-

    பசுக்கள் செல்லும் பொழுது அதன் காலடி குளம்புகளில் இருந்து வரக்கூடிய தூசி மிகப் புனிதமாக சொல்லப்பட்டுள்ளது. நிறைய பசுக்கள் செல்லும் பொழுது அவற்றின் குளம்புகளில் இருந்து மிக உயரமாக மண் துகள் கிளம்பும். அவை நம் உடலில் படுமாறு நிற்பதற்கு 'கோ தூளி' என்று பெயா்.

    திவ்ய ஸ்நானம்:-

    நன்றாக வெயில் அடித்துக் கொண்டிக்கும் நேரத்தில், சில சமயம் மழை பெய்யும். இது மிக விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நீரில் குளிப்பதற்கு `திவ்ய ஸ்நானம்' என்று பெயர்.

    மந்திர ஸ்நானம்:-

    குளிக்க முடியாத பொழுது, `ஆபோஹிஷ்டா' என்ற மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய தலையில் சிறிது நீரை தெளித்துக் கொள்ளும் முறை இது.

    பிராஹ்ம ஸ்நானம்:-

    இது மிகவும் சிறப்பான ஒரு குளியல். அதாவது நாம் சிறப்பான ஒரு பூஜையை முடித்திருக்கும் வேளையில், அந்த பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட கலசத்தில் மந்திர ஜெபங்களின் சக்தி நிரம்பியிருக்கும். இந்த கலச நீரை தலையில் விட்டு நீராடுவது 'பிராஹ்ம ஸ்நானம்' ஆகும்.

     மகரிஷிக்கு அருளிய பெருமாள்

    தல சயனப்பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம், `திருக்கடல்மல்லை' என்று அழைக்கப்படும் மகாபலிபுரம் ஆகும். ஒரு சமயம் புண்டரிகாட்சர் என்ற மகரிஷி இங்கு வாழ்ந்து வந்தார். அவர் இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது.

    அதாவது திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனை அடைவதற்காக, மல்லையில் உள்ள கடல் நீரை, கையால் இறைத்து வெளியேற்றி விட்டு, கடலுக்குள் செல்வது என்று முடிவெடுத்தார். அதன்படி தன் கைகளால் கடல் நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார்.

    இவரது பக்தியை கண்ட பெருமாள், ஒரு வயோதிக தோற்றத்தில் அங்கு வந்தார். பின்னர் புண்டரிகாட்சரிடம், ``நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். சாப்பிட்டுவிட்டு வாருங்கள். அதுவரை நான் கடல் நீரை இறைக்கிறேன்" என்றார். அதன்படியே முனிவரும் அங்கிருந்து சென்று, உணவருந்தி விட்டு திரும்பி வந்தார். அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. வயோதிகரைக் காணவில்லை.

     அப்போது அங்கே பெருமாள் திருவடியில் தான் வைத்து வழிபடும் தாமரைப் பூவையும், பள்ளிகொண்ட திருமாலையும் கண்டார். இதையடுத்து தனக்காக இறைவனே நேரில் வந்து கடல் நீரை இறைத்ததை உணர்ந்துகொண்டார். அந்த இடம் `அர்த்த சேது' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும் என்கிறார்கள்.

    • தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.
    • மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.

    * தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிவரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில் இந்நாளில் தெப்பத் திருவிழா நடக்கும்.

    * மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது சிறப்பு.

    * சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராணக்கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில் தான் நடந்தது.

    * மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

    * மாசி மகத்தன்று தான் மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    * மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால் மகாவிஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    * மாசி மகத்தன்று திருவண்ணாமலையார், `பள்ளி கொண்டாப்பட்டு' என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக்காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்தினார். வல்லாள மகாராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன், நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    * மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

    * மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பவுர்ணமியில்தான்.

    * மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    * குலசேகர ஆழ்வார், மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.

    * அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

    * மாசி மாத பூச நட்சத்திர தினத்தன்று தான் முருகப்பெருமான், சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசம் செய்தார்.

    * பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி, பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.

    * உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

    * அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில்தான்.

    * காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.

    * மாசி மகம் அன்றுதான் காம தகன விழா நடைபெறுகிறது.

    * மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

    * மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக்கொள்வது சிறப்பானது.

    * மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு `அப்பர் தெப்பம்' எனப் பெயர்.

    * மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

    * மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

    * மாசி மாத சுக்ல பட்ச பஞ்சமியில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    • தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

    பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

    இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.

    இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
    • அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது.

    இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது.

    இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.இன்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோன்று அமராவதி ஆற்றங்கரையோர பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசை தினமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். கோவில்களுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், தயிர்சாதம், தக்காளிசாதம், சுண்டல், துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லா ற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
    • பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    பவானி:

    தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.

    மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.

     தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

     திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

     மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.

    • இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள்.
    • இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.

    நாளை மறுநாள் காலை எழுந்து, அருகில்இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.
    • மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப் படுகிறது. நாளை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் நாளை மறுநாள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்புமிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    அடுத்து, தானம்...

    நாளை மறுநாள் உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்பட அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    இதையடுத்து தர்ப்பணம்...

    நாளை மறுநாள் நாம் ஒவ்வொ ருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்?

    இந்த பாவ மூட்டைகளை நீக்க நாளை மறுநாள் மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

    `கற்பகநாதர் குளம்' விநாயக தீர்த்தத்திற்கு `கடிக்குளம்' என்ற பெயரும் உண்டு. எனவே, இத்தலத்திற்கு `கடிக்குளம்' என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும். கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், `கற்பகநாதர் குளம்'என்றும், `கற்பகனார் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், `கற்பக நாதர், கற்பகேஸ்வரர்' என்றும், அம்பாள் பெயர், `சௌந்தரநாயகி, பால சௌந்தரி'என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது. இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய `விநாயக தீர்த்தம்' (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரிமன் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப்பூவாக மலர்ந்ததாம். அப்போது தான் தெரிந்தது.

    இந்த தலமும், தீர்த்தமும் முக்தி கரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    புனித நீராடல், தானம், தர்ப்பணம்

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்ததையும் ஒன்றுபடுத்தியதன் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    ×