search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry CM"

    • அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார்.
    • விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முருக பக்தர். அவர் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார். மேல் சட்டையின்றி துண்டு மட்டும் அணிந்து இருந்த நிலையில் விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    இதை ஏற்கும் வகையில் அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் வணக்கம் செலுத்தினார். மேல் சட்டையின்றி துண்டு-வேட்டியுடன் முதல்வர் போலீஸ் மரியாதை ஏற்ற வீடியோ எளிமையான போலீஸ் மரியாதை என குறிப்பிட்டு வைரலாகி வருகிறது.

    மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்தவுடன் நேரு கையில் நாடு இருந்தால்தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை ஒப்படைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு நேரு முக்கியத்துவம் அளித்தார்.

    பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அணைகள், மின்நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகங்களும், பத்திரிகைகளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பலவிதமான செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை. யாரும் முன்வரவில்லை. பலமான எதிரணி என்பதால் வெற்றி அவர்களுக்குத்தான் என கூறினர்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தேர்தலில் நிறுத்தினோம். அவரும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதற்காக வேறு ஒரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சித்தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்து வேட்பாளராகினார்.

    காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு, பகலாக பாடுபட்டீர்கள். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தீர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார் என கூறி வந்தேன். ஆனால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி புதுவையில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் கொடுத்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றிக்கு 6 நாள் போராட்டமும், போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம்தான்.

    வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினருக்கும் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீதமுள்ள காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதோடு தொண்டர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். இதை நன்றிக் கடனாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.



    மோடி 2-வது முறை பிரதமராக வெற்றி பெற்றவுடன் பாகுபாடின்றி அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப்பெறவுள்ளோம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் அமைச்சரவை பங்கேற்கும்.

    புதுவை, காரைக்கால் பகுதியில் எரிபொருள் எடுக்க ஆய்வு மையம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதுவை அரசு எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.

    மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் நான் உறுதியளித்துள்ளேன். புதுவைக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கம்பன் விழா நேற்று 3-வது நாளாக நடந்தது. விழாவில் நடந்த பாராட்டரங்கம் நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். பின்னணி பாடகி பி.சுசீலாவை பாராட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரபல பாடகியான பி.சுசீலா பாடலை கேட்கும்போது நாம் மெய்மறப்போம். அவருக்கு இப்போது நாம் பாராட்டு செய்கிறோம். விதி என்பது எல்லோரையும் விடுவதில்லை. என்னையும் விடுவதில்லை. விதியிடம் சிக்காதவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் அதை சிறிது சிறிதாக மதியால் வெல்லுகிறோம்.

    அறம் எப்போதுமே வெல்லும். இடையில் அதர்மம் தழைப்பதுபோல் தெரியும். இறுதியில் தர்மமே வெல்லும். இதைத்தான் நான் எனது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பார்த்துள்ளேன். அறவாழ்க்கை வாழ்ந்தால்தான் எப்போதும் வெற்றிபெற முடியும். இதைத்தான் கம்பராமாயணமும் சொல்கிறது. புதுவையில் எந்த அரசாக இருந்தாலும் புலவர்கள், எழுத்தாளர்களை கவுரவித்து வருகிறோம்.

    இப்போது நமது கலாசாரம் மாறி வருகிறது. நாம் நமது மொழி, கலாசாரத்தை காக்கவேண்டும். நான் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திக்கும்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழகம் அல்லது புதுச்சேரியில்தான் படிக்க வைக்க விரும்புகின்றனர்.



    பின்னணி பாடகி சுசீலா பெருமை மிக்கவர். அவர் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர்களது பாட்டுகளை கேட்பதால் நமது குழப்பங்கள் போகிறது. நோய்களுக்கான சிகிச்சையில் இசை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் மியூசிக் தெரபி என்ற முறையை ஆரம்பித்து உள்ளனர்.

    அதேபோன்ற ஒரு மையத்தை புதுவையில் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா புதுவை அரசை அணுகினார். அதற்கு தேவையான நிலத்தை தரவும் புதுவை அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், செல்வகணபதி எம்.எல்.ஏ. மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



    அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
    புதுவை அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. #Narayanasamy
    பாகூர்:

    அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு வசந்த் (வயது 19) என்ற மகனும், சந்தியா (17) மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு ராஜா வெளியே சென்றிருந்தார். விஜயா தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே விஜயா எழுந்து விளக்கை போட்டு பார்த்தார்.

    அப்போது அங்கே 5 அடி நீளம் கொண்ட கருப்பு நிற பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயும், குழந்தைகளும் தவித்தனர். அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

    இதனால் அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டனர். அவர்கள் வனத்துறை போன் எண்ணை கொடுத்து அங்கு பேசும்படி கூறினார்கள். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.

    அந்த நேரத்தில் பாம்பு அவர்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அப்போது வசந்த் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அரசு டைரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

    டைரியை திறந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போன் எண் அதில் இருந்தது. உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். இரவு தூக்கத்தில் இருந்த நாராயணசாமி போனை எடுத்து பேசினார். அப்போது வசந்த் எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது. அதை பிடிப்பதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை உதவியை நாடினோம். யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறினார்.


    உடனே நாராயணசாமி யாரும் பயப்படாதீர்கள். பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். நாராயணசாமி வனத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக அங்கு ஆட்களை அனுப்பி பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

    அதன்படி விடுமுறையில் இருந்த 2 ஊழியர்களை இரவோடு இரவாக எழுப்பி அங்கு அனுப்பி வைத்தனர். கோபி, தாமரைச்செல்வன் ஆகிய ஊழியர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது கருநாகப் பாம்பு ஆகும். கடுமையான வி‌ஷத்தன்மை கொண்டது. பாம்பு பிடிபட்ட பிறகு தான் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள்.

    இன்று காலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு மீண்டும் போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள். அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.

    அதன்பின்னர் நாராயணசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமனிடம் தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதனால் அனந்தராமன் இன்று காலை அங்கு சென்று அங்குள்ள புதர்களை பார்வையிட்டார். அவற்றை அகற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார்.  #Narayanasamy
    மக்கள் விருப்பங்களை நிறைவேற்றவிடாமல் அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #Narayanasamy Kiranbedi
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் துறையில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு எங்கள் அரசு முடிவு எடுத்தது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு போலீஸ் தேர்வு நடந்தபோது, அதிகபட்ச வயது வரம்பு 24 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல இப்போதும் 24 வயது உச்சவரம்பு நிர்ணயித்து தேர்வுக்கு ஏற்பாடுகளை செய்தோம். இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளதால் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வின் அதிகபட்ச வயது 22 என சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக்காட்டி 24 வயதுக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் வயது வரம்பு 24 ஆக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும், குரூப்-சி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்யும் விதிகளை உருவாக்குவதில் மாநில அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறி மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் போலீஸ் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். கோர்ட்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடும்படி உத்தரவிட்டுள்ளது.


    இதனால் புதுவையில் போலீஸ் தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி உள்ளது.

    வயது வரம்பு 24 ஆக இருக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. ஆனால் அதை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு வயது வரம்பு 22 என சிபாரிசு தான் செய்திருக்கிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல மாநிலங்களில் பல்வேறு வயது வரம்பு நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தபோது அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் பிரநிதியாக செயல்பட வேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். அவருடைய செயல்பாட்டால் மக்கள் விரக்திக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy Kiranbedi
    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என மாணவி சோபியாவுக்கு ஆதரவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.


    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    சுயதொழில் தொடங்க 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் சுய தொழில் தொடங்கும் விதமாக கடன் உதவி வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

    81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன் மற்றும் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆலிஸ்வாஸ், மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநில அரசை எதிர்பார்க்க தேவையில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒரு போதும் புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×