search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு
    X

    அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு

    மக்கள் விருப்பங்களை நிறைவேற்றவிடாமல் அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #Narayanasamy Kiranbedi
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் துறையில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு எங்கள் அரசு முடிவு எடுத்தது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு போலீஸ் தேர்வு நடந்தபோது, அதிகபட்ச வயது வரம்பு 24 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல இப்போதும் 24 வயது உச்சவரம்பு நிர்ணயித்து தேர்வுக்கு ஏற்பாடுகளை செய்தோம். இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளதால் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வின் அதிகபட்ச வயது 22 என சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக்காட்டி 24 வயதுக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் வயது வரம்பு 24 ஆக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும், குரூப்-சி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்யும் விதிகளை உருவாக்குவதில் மாநில அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறி மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் போலீஸ் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். கோர்ட்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடும்படி உத்தரவிட்டுள்ளது.


    இதனால் புதுவையில் போலீஸ் தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி உள்ளது.

    வயது வரம்பு 24 ஆக இருக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. ஆனால் அதை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு வயது வரம்பு 22 என சிபாரிசு தான் செய்திருக்கிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல மாநிலங்களில் பல்வேறு வயது வரம்பு நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தபோது அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் பிரநிதியாக செயல்பட வேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். அவருடைய செயல்பாட்டால் மக்கள் விரக்திக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy Kiranbedi
    Next Story
    ×