search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daryl Mitchell"

    • தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
    • பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப், சாம் கர்ரன், ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.

    தவான் கடைசி 2 லீக் ஆட்டங்களில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த ஆட்டத்தில் ஆடிய அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் வெற்றி கூட்டணியை தொடரவே விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

    சென்னை அணி

    நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 509 ரன்), ஷிவம் துபே (350) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி கணிசமான பங்களிப்பை அளித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

    சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் நாடு திரும்பி விட்டதால் எஞ்சிய ஆட்டங்களில் ஆடமாட்டார். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கடினம் தான். இது சென்னை அணிக்கு பின்னடைவாகும். காய்ச்சல் காரணமாக முந்தைய ஆட்டத்தில்

    ஆடாத துஷர் தேஷ்பாண்டேவும், உலகக் கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றதால் கடந்த ஆட்டத்தை தவறவிட்ட பதிரானாவும் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழி தீர்க்குமா?

    பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும்.

    அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.

    எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 14 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங் அல்லது ராகுல் சாஹர்.

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஷர்துல் தாக்குர் அல்லது முகேஷ் சவுத்ரி, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பதிரானா.

    மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த அதிரடி இன்னும் வெளியாகவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா மிரட்டக்கூடியவர்கள். ஆல்-ரவுண்டராக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அசத்துகிறார்கள்.

    நேரடி ஒளிபரப்பு

    லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்ற கொல்கத்தா அணி அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டும். இதேபோல் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
    • என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கவிருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

    ஐபிஎல் தொடரானது எப்போதும் பல வீரர்களின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பல இந்திய வீரர்கள் உட்பட, பல வெளிநாட்டு வீரர்களும் அவர்களுடைய கடினமான குடும்ப சூழலில் இருந்து மேலே வருவதற்கான சூழலை ஐபிஎல் தொடர் இதுவரை ஏற்படுத்தி தந்துள்ளது.

    அந்த வகையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செலை சுமார் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    இத்தனை கோடிக்கு ஏலம் எடுத்தது குறித்து நியூசிலாந்து வீரர் மிட்செல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது ஒரு குடும்பமாக எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இரவு என்று தான் சொல்லவேண்டும். என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட அன்று எனது பெரிய மகளுக்கு பிறந்தநாள்.

    என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெரிய தொகையின் மூலம் எனது இரு மகள்களும் அவர்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ்வார்கள். நாம் செய்வது அனைத்தும் நமது மகள்களுக்குத்தானே.

    இவ்வாறு மிட்செல் கூறினார்.

    • நியூசிலாந்தின் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    ஏற்கனவே, சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 273 ரன்களை எடுத்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • டேரில் மிட்செல் 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 23-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 360 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 326 ரன்கள் எடுத்தது. இதில் டேரில் மிட்செல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

    3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்த டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டேரில் மிட்செல் முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம். 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். 3-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.

    ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் 538 ரன்கள் எடுத்து டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மார்டின் டோனெல்லி 462 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
    • டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 81 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று மிட்செல், பிளெண்டல் இருவரும் தங்களது சதத்தை நிறைவு செய்தனர். அணியின் ஸ்கோர் 405-ஆக உயர்ந்த போது பிளன்டெல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன் நாதன் ஆஸ்டில், கிரேக் மெக்மில்லன் ஜோடி 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 222 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 190 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 49 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் லீசு 34 ரன்கள் மற்றும் ஒல்லி போப் 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்களை சேர்த்தது.
    • இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    நாட்டிங்காம்:

    நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் லாதம் 26 ரன்னிலும், டேவன் கான்வே 46 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்னும், பிளெண்டல் 67 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார். நிதானமாக ஆடிய பிளெண்டலும் சதமடித்து அசத்தினார். பிளெண்டல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிகை 5 விக்கெட் இழப்புக்கு 405 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், லீச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×