search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sameer rizvi"

    • தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
    • பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப், சாம் கர்ரன், ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.

    தவான் கடைசி 2 லீக் ஆட்டங்களில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த ஆட்டத்தில் ஆடிய அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் வெற்றி கூட்டணியை தொடரவே விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

    சென்னை அணி

    நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 509 ரன்), ஷிவம் துபே (350) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி கணிசமான பங்களிப்பை அளித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

    சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் நாடு திரும்பி விட்டதால் எஞ்சிய ஆட்டங்களில் ஆடமாட்டார். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கடினம் தான். இது சென்னை அணிக்கு பின்னடைவாகும். காய்ச்சல் காரணமாக முந்தைய ஆட்டத்தில்

    ஆடாத துஷர் தேஷ்பாண்டேவும், உலகக் கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றதால் கடந்த ஆட்டத்தை தவறவிட்ட பதிரானாவும் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழி தீர்க்குமா?

    பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும்.

    அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.

    எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 14 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங் அல்லது ராகுல் சாஹர்.

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஷர்துல் தாக்குர் அல்லது முகேஷ் சவுத்ரி, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பதிரானா.

    மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த அதிரடி இன்னும் வெளியாகவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா மிரட்டக்கூடியவர்கள். ஆல்-ரவுண்டராக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அசத்துகிறார்கள்.

    நேரடி ஒளிபரப்பு

    லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்ற கொல்கத்தா அணி அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டும். இதேபோல் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • 12 சிக்சர்கள், 33 பவுண்டரிகளுடன் 312 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    23 வயதுக்குட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத் - சவுராஸ்டிரா அணிகள் இடையேயான போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. காலிறுதி ஆட்டமான இந்த போட்டியில் டாஸ் வென்ற சவுராஸ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய உத்திரபிரதேசம் அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 426 ரன்கள் சேர்த்தது.

    இதனை தொடர்ந்து 2-வது நாள் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் ரிஸ்வி முச்சதம் அடித்து (312) அவுட் ஆனார். இதில் 33 பவுண்டரிகளும் 12 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடி வரும் உத்திர பிரதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 730 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ரிஸ்வியின் முச்சதத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஏனென்றால் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி இடம் பெற்றுள்ளார். அவரை கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. டோனி தலைமையில் இளம் வயதான ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.

    துபாயில் 17-வது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது. இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர்களது வரிசையில் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

    பெரிய வீரர்களுக்கு மத்தியில் 20 வயதான உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த வீரர் உள்ளூர் தொடரிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை ஏலம் எடுத்தது.

    இந்நிலையில் சமீர் ரிஸ்வி எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் 12 ஆண்டுக்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் நடப்பு ஆண்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு, எனக்கு 7-8 வயது இருக்கும் போது, ரெய்னா ரஞ்சி கோப்பை விளையாடிக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டில் நான் ஒரு பால்பாய். ரெய்னா பேட்டிங் செய்த போது, என்னை அவருக்கு பந்துவீச சொன்னார்.

    மேலும் ஒரு இன்னிங்சுக்குப் பிறகு, அவர் ஸ்லிப் கேட்ச்சிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் என்னை அழைத்து அவருடன் என்னையும் ஸ்லிப்பில் சேர்த்துவிட்டார். அங்கு நான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அவர் தனது சன்கிளாஸை எனக்கு பரிசளித்தார். அதுவே எனது முதல் சந்திப்பு.

    இவ்வாறு ரிஸ்வி கூறினார்.

    • சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டியில் 2 சதங்கள் அடித்து அசத்தியவர்.

    துபாயில் 17-வது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.

    இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூரை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பக்கம் இழுத்துக் கொண்டது. அவர் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர்களது வரிசையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் 20 வயதான இளம் வீரர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. யார் அந்த 20 வயது வீரர் என்று பார்த்தால், உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டியில் 2 சதங்கள் அடித்து அசத்தியவர். டிஎன்பிஎல் தொடர் போன்று நடந்த இந்த தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக சமீர் ரிஸ்வி விளையாடினார். இதில், அவர் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஆனால், அப்போது 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உத்தரப்பிரதேச அணி தேர்வு நடந்தது. இதில், சமீர் ரிஸ்வி பங்கேற்றார். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஒரு நாள் போட்டியில் உத்தரப்பிரதேச அணி சார்பில் விளையாடிய சமீர் ரிஸ்வி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 65 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதே போன்று ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

    இந்த தொடரில் மட்டுமே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலமாக இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்டு பேட்டருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிர்ணயித்ததோ ரூ.20 லட்சம் தான். இவரை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியாக சிஎஸ்கே ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    ×