search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Gaja"

    கஜா புயல் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்ததால் இடுக்கியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. #GajaCyclone #KeralaRain
    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது.

    தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது.

    இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்தது.



    கஜா புயலின் கண் பகுதி கேரளாவிற்குள் நுழைந்ததும் இடுக்கியில் மிக கனத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு, மூணாறு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏற்கனவே இங்கு பெருமழை பெய்ததால் சேதமான பாலங்களுக்கு பதில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இந்த பாலங்களை கஜா புயல் துவம்சம் செய்தது. இதனால் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இடுக்கியில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது.

    தற்போது இப்புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அமித்தி தீவுகளை கடந்து மினிகாய் தீவு வழியாக வளைகுடா நாட்டுக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சபரிமலை, எரிமேலி, பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளைகுடா நாட்டிற்கு நகர்ந்த பின்னரே கேரளாவில் மழை குறையுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #GajaCyclone #KeralaRain



    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து உள்ளார். #GajaCyclone #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு. நமது நிவாரணப்பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.  #GajaCyclone #Rajinikanth
    கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல்-மழைக்கு 49 பேர் பலி ஆனார்கள். #GajaCyclone #Gajastorm
    சென்னை:

    தமிழகத்துக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுவிட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.



    கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

    சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின.

    புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.

    புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

    புயல்-மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

    புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். #GajaCyclone #Gajastorm

    தமிழகத்தில் பல மாவட்டங்களை பதம்பார்த்த கஜா புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது. #GajaCyclone #Gajastorm
    சென்னை:

    கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது.

    அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன் பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும் நாகைக்கும் இடையே புயல் கரையை கடந்தது.

    புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதியான கண் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

    இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்தது. புயலின் கடைசி பகுதி கரையைக் கடப்பதற்கு காலை 6 மணி வரை ஆனது. இந்த இடைப்பட்ட சுமார் 5.30 மணி நேரத்தில் சூறாவளி காற்று தாக்கு பிடிக்க முடியாதபடி இருந்தது.



    கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

    குறிப்பாக நாகை மாவட்டம் கஜா புயலால் கடும் நாசத்தை சந்தித்துள்ளது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை திரும்ப குறைந்தது 2 நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

    கஜா புயலின் சீற்றத்துக்கு 18 பேர் பலியாகி விட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அய்யம்மாள் (32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லையில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு படுத்திருந்த சதீஷ் (22), ரமேஷ் (21), தினேஷ் (19) மற்றும் இவர்களின் உறவினர் அய்யாதுரை (19) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 4 பேர் உடலையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள் பிரியதர்ஷினி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.

    இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடி பாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 50), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    அறந்தாங்கி பகுதியில் ‘கஜா’ புயலால் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் காசிநாதன் வசித்த கூரை வீட்டின் அருகே இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்து அமுக்கியது.

    இதில் வீட்டிற்கு இருந்த காசிநாதன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 36). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ரெங்கநாதன் வேலை முடிந்து நெய்வேலியில் இருந்து பாப்பன் குப்பத்துக்கு தனது மோட் டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மருங்கூர் அருகே வந்தபோது கஜா புயல் காற்றால் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று ரெங்கநாதன் மீது சாய்ந்து விழுந்தது. இதில் ரெங்கநாதன் மோட்டார் சைக்கிளுடன் வேப்ப மரத்தின் இடிபாடுக்குள் சிக்கி கொண்டார். சிறிது நேரத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பலத்த புயல் மற்றும் மழை காரணமாக பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கஜா புயலால் ஏற்பட்ட இடி மின்னல் மழைக்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இரவில் கஜா புயல் சீற்றத்தால் மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில், ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேராவூரணியை அடுத்த தென்னமங்குடியை சேர்ந்தவர் வள்ளி (65). இவர் அப்பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கஜா புயல் காற்றால் கூரை வீடு சரிந்து அவர் மீது விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி கனகவள்ளி (வயது 48).

    நேற்றிரவு கஜா புயல் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீட்டு அருகே உள்ள மரம் முறிந்து விழுந்ததில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மனைவி பரமேஸ்வரி (வயது 26). இவர் நேற்று இரவு வீட்டின் மாடி அறையில் குடும்பத்தினருடன் தூங்கினார். இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    இன்று காலை மாடியின் கைப்பிடிச்சுவரை பிடித்தவாறு கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பரமேஸ்வரி மீள முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு மரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னாத்தாள் (வயது 70). இவர் இன்று காலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சின்னாத்தாள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52), விவசாயி.

    நேற்று நள்ளிரவு கஜா புயலால் அப்பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்ததால் பழனிவேல் வீட்டில் இருந்தார்.

    இன்று காலை அவர் தன் வீட்டின் முன்னால் மரங்கள் விழுந்து கிடப்பதையும் கூரை வீடுகள் சேதமாகி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 35). நெற்குப்பை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார்.

    திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மழைநீர் வீட்டுக்குள் ஒழுகும் என்று கருதிய எலிசபெத்ராணி, இன்று அதிகாலை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பண்டாரஓடையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 72). இவர் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று இரவு புயல் காரணமாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டின் முன்பு நின்ற தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம கிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone #Gajastorm
    கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கடந்த 3 நாட்களாக மிரட்டிக் கொண்டு இருக்கிறது.

    முதலில் வடதமிழகத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்ததால் மத்திய தமிழகத்தை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

    இந்தப் புயல் 38 கி.மீ. அகலத்தில் 200 கி.மீ. முதல் 300 கி.மீ. பரப்பளவில் நீள் வட்டத்தில் பரவியுள்ளது. நேற்று இரவு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல் இன்று தீவிர புயலாக மாறி வேகம் எடுத்தது.

    காலையில் 14 கி.மீ. வேகத்திலும் 11 மணி அளவில் 23 கி.மீ. வேகத்திலும் நகர்ந்தது. மதியம் 12 மணி அளவில் 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் திடீரென்று 17 கி.மீ. வேகமாக குறைந்தது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 284 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 245 கி.மீ. தொலைவிலும் கரையை நெருங்கி வந்துள்ளது.

    இன்று மாலை கரையை மேலும் நெருங்கி இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக கரையை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீவிர புயலாக மாறியதால் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். நாளை காலைதான் புயல் கரையை முழுமையாக கடந்து செல்லும்.

    எனவே இரவு தொடங்கி நாளை காலை வரை கடலோர பகுதியில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் சூறைகாற்றுடன் மிக பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களையும், காரைக்கால் பகுதியையும் புயல் தாக்கும் என்றும் இன்று காலை முதல் மிக கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    நாளை புயல் தாக்கும் 7 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மிதமிஞ்சிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் போதும் கரையை கடந்த பின்பும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும். இந்த 7 மாவட்டங்களிலும் சேதம் கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

    நாகை, வேதாரண்யம் ஆகிய ஊர்கள் புயல் தாக்கும் மையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழும்புவதால் நீர் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரவும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏராளமான புயல் நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் 20 செ.மீ. வரை அதிக அளவு மழை கொட்டும் வாய்ப்புள்ளது. இதையடுத்து 7 மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1070-லும், 32 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை எண் 1077-லும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கஜா புயலையொட்டி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ராமேசுவரம்- மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்- ஏக்கா (குஜராத்) செல்லும் ரெயில்கள் ராமேசுவரம்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எண்ணூர், கடலூர், புதுவை, காரைக்கால், நாகை, பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பின்பு நாளை திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். அதன் பிறகு 17-ந்தேதி கேரளா வழியாக அரபிக்கடலை அடைந்து புயலாக நீடிக்கும்.

    அதன்பிறகு படிப்படியாக வலு இழக்கும் என்று தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #CycloneGaja #TNRains
    கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும். நாளை மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.



    அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #TNRains
    ×