என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மணமகள்களின் தந்தை உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தை சேர்ந்த அக்காள்-தங்கை இருவருக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதன்படி மணமகள்களின் வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்கு விழா ஏற்பாடுகள் களைகட்டின. மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமண விழாவில் குவிந்தனர்.

    இந்த நிலையில் மணமகள்கான அக்காள்-தங்கை இருவரும் மணமகள் அலங்காரம் செய்து கொள்ள உறவினர்களுடன் காரில் அழகு நிலையம் சென்றனர். அவர்கள் அலங்காரத்தை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் காரில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மணமகள்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவர்களின் முகத்தில் சேற்றை வாரி இறைத்தனர். இதுப்பற்றி மணமகள்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் பெரும் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை நையப்புடைத்தனர்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.

    மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களை சரமாரியாக தாக்கியதுடன், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி களேபரம் செய்தனர். இதில் மணமகள்களின் தந்தை உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த வன்முறை காரணமாக மணமகன்கள் இருவரும் திருமணத்தை நிறுத்தினர். போலீசார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.

    ஒரே நாளில் நடக்க இருந்த அக்காள்-தங்கையின் திருமணம் ஒரு சிறிய விபத்தால் நின்றுபோனது, அந்த கிராமத்தினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    • இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
    • USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி  வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

     

    ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் போப் பிரான்சிஸ்-க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் போதிலும், நேற்றிரவு முதல் அவருக்கு சுவாச பிரச்சினை மேலும் அதிகரிக்கவில்லை என்று வாடிகன் தெரிவித்து இருக்கிறது. போப் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.
    • அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில்,

    நம் உயிர்நிகர் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று கூறியுள்ளார்.


    • "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
    • தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

     

    கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.

    அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

    கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

     

    இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.

    சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. 

    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் (மார்ச் 15-ந்தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் கூடுகிறது.

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

    பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
    • இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், நேற்று 32 மீனவர்களை சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
    • கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது

    1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.

    இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி,  25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.

    இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது. 

     

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
    • இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை எதிர்த்து சண்டையிட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர்.

    நான்கு மாதங்கள் வரை தாக்குதல் தொடர்ந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில், உயிரிழந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து ஹசன் நஸ்ரல்லாவுக்கு பெய்ரூட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோர் பெய்ரூட்டில் கூடியிருந்தனர். உயிரிழந்த நஸ்ரலாவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில், இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.

    இறுதி சடங்கில் பொது மக்கள் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்தும் கோஷங்களை எழுப்பிய நிலையில், போர் விமானங்களின் சத்தத்தால் மக்களின் கோஷங்கள் கேட்க முடியாத நிலை உருவானது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோக்களில் இஸ்ரேல் வான்படைக்கு சொந்தமான நான்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் இறுதி சடங்கு நடைபெற்ற இடத்தின் மேல்பரப்பில் வட்டமடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று ஹசன் நஸ்ரல்லாவுக்கு இறுதி சடங்கு. உலகம் இன்று சிறந்த இடமாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளது.

    பெய்ரூட்டில் உள்ள கேமிலி சமௌன் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், இறுதி சடங்கு தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்த மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

    • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
    • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

    பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
    • அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.

    1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.

    ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?

    சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • நைஜீரியாவில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் மோதியது.
    • இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    நைஜீரிய நாட்டின் நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அந்த பஸ் முந்த முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×