என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.

    ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.

    ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது. 

    • டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் பினராயி விஜயனை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
    • இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுநர் உடனிருந்தார்.

    டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார்.

    கேரளா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு கிடையாது. வயநாடு நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பினராயி அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    இந்த சந்திப்பின்போது கேரள மாநில அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்க பினராயி விஜயன் வலியுறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான உரையாடல் சிறப்பானதாக அமைந்தது என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில அரசின் டெல்லிக்கான பிரதிநிதி கே.வி. தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேரளாவில் அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எல்.டி.எஃப்., பாஜக இடையே மறைமுக புரிதல் இருப்பதாக கேரள மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

    • நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
    • ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
    • இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.

    மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    • தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
    • தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.

    மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

    மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.

    மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    • தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நிர்மலா சீதாராமன் பேச்சு
    • நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    நேற்று முன்தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.

    திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று கொளத்தூர் மணி அவர்கள் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல. உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்... 'யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார்" என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள்.
    • தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல.

    தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

    அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    • பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசு.
    • பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன…

    திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
    • மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

    சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

    இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

    கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.

    நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.

    நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.

    நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.

    எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

    அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது.
    • காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் காய்ச்சல் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு மழை தொடங்கியதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    வழக்கமாக மழைக்காலம் முடிந்து பருவநிலை மாறிய பிறகு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்து விடும். ஆனால் இந்தமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் 7 மாதங்களை கடந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் சென்னையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    சென்னையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் தொற்றுக்களுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டமாக கூடுதல் ஆகிய காரணங்களாலும், வானிலை மாற்றம் காரணமாகவும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

    காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். அவர்களுக்கு பரிசோதித்து பார்க்கும் போது 60 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.

    பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்புளூயன்ஸா ஏ வைரஸ் மற்றும் குறிப்பாக அதன் துணை வைரஸ்களான எச்1 என்1, எச்3 என்2, ஆர்.எஸ்.வி. மற்றும் அடினோ வைரஸ் போன்ற வைரஸ்கள் கலவையாக காணப்படுகின்றன.

    பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டாலும், சிலருக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் உடல்வலி ஏற்படுகிறது. இணை நோய்கள் உள்ள வயதான நோயாளிகளுக்கு பாதிப்புகள் அதிகரிக்கலாம்.

    இருமல், தும்மல் அல்லது பேசும்போது சுவாச துளிகள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே பொதுமக்கள் அதிக கூட்டமான பகுதிக்கு சென்றால் அவசியமாக முக கவசம் அணிவது நல்லது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 18-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.
    • இவரது அரங்கேற்றம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.

    அந்த வகையில் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார். சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல பாடகி ஷாலினி சிங் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

    பாப் ஷாலினி என பிரபலமாக அழைக்கப்படும் ஷாலினி சிங் பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஷாலினி பாடியுள்ளார். தமிழில் இவர் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர் மற்றும் பலரின் இசையில் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×