என் மலர்
நீங்கள் தேடியது "Cybercrime"
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
- மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்
கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
- வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
நாடு முழுவதும் அரங்கேறி வரும் 'டிஜிட்டல் கைது' என்ற புதிய வகையான சைபர் மோசடி குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. மோசடி அழைப்பு வரும்போது செய்யவேண்டிய வழிகாட்டுதலைகளை NPCI வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையில், இந்த 'டிஜிட்டல் கைது' மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள்.
அவர்கள் தங்களை காவல்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு போன்ற கடுமையான வழக்குகள் உங்கள்மீது அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்துவார்கள்.
கைது செய்வதாக எச்சரித்து உங்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறார்கள். வீடியோ அழைப்புகளின் போது, உங்களை முழுமையாக நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
அவர்கள் உண்மையைச் சொல்வது போல் தோன்ற பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் கேட்கக்கூடிய ஒலிகளையும் ஒலிக்கச் செய்வார்கள்.
வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
"வழக்கில் இருந்து உங்கள் பெயரை நீக்க", "விசாரணைக்கு ஒத்துழைக்க" அல்லது "திருப்பித் தரக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த" உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி அவர்கள் மோசடியாக பணத்தை கொருவர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அரசாங்க புலனாய்வு நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை, பணம் கோருவதில்லை.
தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னால், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விவரங்களை சரிபார்க்கவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாத்தி' போர்ட்டலுக்கு புகார் அளிக்கவும்.
அவர்களுடனான உரையாடல்களின் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைச் சேமித்தால் புகார் அளிக்கும்போது அதிகாரிகளால் அவை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட உதவும்" என்று NPCI தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
முன்னதாக அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து போலியான நீதிமன்ற உத்தரவை காட்டி, உங்களை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடி பணத்தை பறித்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட அந்த வயதான பெண் நேரடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
நேற்று நடந்த இதன் விசாரணையின்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதை கடுமையாக கையாளாவிட்டால் நிலைமை மோசமடையும். நமது விசாரணை அமைப்புகளின் திறனை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
"போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.
தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
- ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது.
- அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியிடம் அரங்கேறிய சைபர் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மாதம் 5 ஆம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சந்தேகம் அடைந்த சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.
இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
- தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.
மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.
கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
திருச்சி:
திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டு பகுதியில், பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்களால் மக்கள் நலனுக்காக சமீப காலமாக அதிகரித்து வரும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், அது தொடர்பாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஊர் தலைவர் எஸ்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஊர் துணை தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர், பட்டையார், மணியார், வார்டு உறுப்பினர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சங்கர் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து பிஷப் கல்லூரி மாணவர்களான ஜாஸ்மின் சிந்தியா, ஜோஸ்வா சாமுவேல், ஜெயவர்ஷினி, சுதர்ஷனன் ஆகியோர் நிகழ்ச்சியினை நடத்தினர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவர் சுதர்ஷனன் தொகுத்து வழங்கினார்.
முடிவில் ஜாஸ்மின் சிந்தியா நன்றி கூறினார். இணையதள குற்றங்கள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆசிரிய ஆலோசகரான சாம்சன் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
- இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.
சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
- ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
- தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை:
செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.
எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.
அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.
ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.
அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
- வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.
- கல்லூரிகளில் ‘சைபர் கிளப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை,
நவீன உலகில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கியிலிருந்து பேசு வதாகக்கூறி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலமாக ஏமாற்றுவது, பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி லிங்கை அனுப்பி மோசடி செய்வது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என லிங்க்கை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் இணைய வழிக் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் திருடுபோன பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது. இதில் தொடர்புடையவர்களை பிடிப்பது கடினம். அதேசமயம் நாம் எச்சரிக்கையாக இருந்தால் இணையவழிக் குற்றங்களில் சிக்காமல் இருக்கலாம்.இணையவழிக் குற்றங்கள், இணையதளங்களை பாது காப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம், என்றனர்.
கோவை மாநகர காவல் தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் சுகாஷினி கூறியதாவது:-
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கல்லூரிகளில் 'சைபர் கிளப்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் உள்ள ஐ.டி பிரிவை தலைமையாகக் கொண்டு இந்த கிளப் தொடங்கப்படுகிறது. இக்கு ழுவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
இணையவழிக் குற்றங்கள் என்றால் என்ன?, அதில் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி? என போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இக்குழு வினர், மற்றவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துவர். மாநகரில் தற்போது வரை 15 கல்லூரிகளில் சைபர் கிளப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
- ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னை:
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:
தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.
அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.
முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.
இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.
நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.
அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.
இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.
எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






