சைபர் குற்றங்கள் மூலம் பறிக்கப்பட்ட ரூ.1,000 கோடி மோசடி பணம் பரிமாற்றம்- 19 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர்.
சைபர் குற்றங்கள் மூலம் பறிக்கப்பட்ட ரூ.1,000 கோடி மோசடி பணம் பரிமாற்றம்- 19 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
Published on

புதுடெல்லி:

ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கிளை மூலம் 13 போலி கணக்குகளை உருவாக்கி அவற்றின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்திருக்கின்றனர். சைபர் குற்றங்கள் மூலம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை எடுப்பதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் நடப்பு கணக்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சைபர் குற்றவாளிகளின் இந்த மோசடிக்கு குறிப்பிட்ட அந்த வங்கியின் மேலாளர் விகாஸ் வத்வா மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

வங்கி அதிகாரிகளின் உடந்தையுடனும், குற்றவியல் சதித்திட்டத்துடனும் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், இதற்காக கே.ஒய்.சி. விதிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்த கணக்குகள் மூலம் ரூ.1,084 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மேற்படி முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து விகாஸ் வத்வா உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com