search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly"

    • சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததாக பாஜக புகார்.
    • சட்டசபையில் இரவு பகலாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தலையணைகள் மற்றும் போர்வைகளை எடுத்துச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு அவையிலே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று மூடா ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

    • இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்தது

    பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது. 

    அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண்  எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள்  ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார்.

    நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், 'நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு பிறகு நாங்கள் தான் பெண்களை உயர்த்தினோம்.அதனால் தான் நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்' என்று தெரிவித்துள்ளார். 

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா?
    • புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை.

    சென்னை:

    சட்ட சபையில் கேள்வி நேரத்தில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் காரைக்குடியில் இருந்து கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்க அவசியம் இல்லை என பதிலளித்தார்.

    மேலும், பழைய பேருந்து களை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காத காரணத்தால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்தப்பின் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் பதில் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
    • ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 லட்சம் உள்ளது. இது போதாது. ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

    தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப் பட்டில் படகு குழாம் உள்ளது போன்று சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. எனவே அதை திருநீர்மலை ஏரியில் அமைக்க வேண்டும்.

    அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசினார்.

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
    • ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    சென்னை:

    முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.

    வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம்.

    அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

    இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவைதான் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

    கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத்துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது.

    இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக் கூடிய "நான் முதல்வன் திட்டம்" மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து

    459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

    இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தி னால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    அரசுப் பணியினை எதிர் நோக்கி இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது.
    • எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.

    இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என்றும் எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை" என்று சபாநாயகர் பேசுகிறார்.

    ஏற்கனவே சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோவை முழுமையாக ஒளிபரப்புவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இப்போது சபாநாயகர் அவர்களே இப்படி பேசுவது ஜனநாயகமா என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் சுமந்த சி ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன.
    • கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவை முன்னவரான துரை முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. இது வருத்தமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், வாதாடுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது விதிமுறைகளுக்குட்பட்டுதான் இருக்க வேண்டும். சபை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். அவர் முதல்-அமைச்சராக இருந்தவர்.

    கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும். ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கலாம் என இருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் உட்கார வில்லை. விஷச்சாராயம் பற்றி பேசுவதற்கோ, ஆட்சியை பற்றி பேசுவதற்கோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.

    ஆனால் கேள்வி நேரத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. சட்டசபையை விட்டு வெளியே போகிற முனைப்புடனேயே அவர்கள் நடந்து கொண்டனர். அதற்காக ஆச்சரியப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    எதிர்க்கட்சியினர் ஜீரோ நேரத்தில் பேசலாம். இங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அவையில் பதாகைகளை கொண்டு வந்து காட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.

    அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்து கொண்டது இந்த அவையின் மாண்பை மீறுவதாக இருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.
    • நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

    இதனையொட்டி தனது சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர்கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமூகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே என்னை உயர்த்திக் கொண்டேன்.

    தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

    நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் சட்டப்பேரவை கோப்பு தொடர்பாக சபா நாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அரசியலில் 25 ஆண்டுகளை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.

    எந்த கோப்பிலும் சுய லாபத்தை பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கவர்னர் அலுவலகம் இயங்குகிறது.

    மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப் பேரவை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது.

    நாடாளுமன்றக்கட்டிடம், தெலுங்கானா சட்டசபை கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும் போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும், ஆடம்பரமாக செலவிடப்பட்டு விட கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

    இது நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளிடம் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணி யாற்றி கொண்டிருக்கிறேன்.

    என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம்தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தா நான். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுவையில் போட்டியிடுவது பற்றி நான் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள்.

    இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண்.அதனால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுவையை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையா ளத்தை தரவேண்டாம். அது மனவலியை தருகிறது. வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.

    அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை. ஆனால் ஒத்துழைப்பு போதிய அளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நா‌ள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.

    அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.


    மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.


    கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.

    இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

    சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×