search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiko"

    • புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார்.
    • பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்:-

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடியோடு மாற்றப்படும். தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்படும் என்று தடுமாறிய அவர், இல்லை... இல்லை... வாரணாசிக்கு மாற்றப்படும் என்றார். வைகோவின் இந்த தடுமாற்றமான பேச்சு அங்கு நின்ற பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    இதே போல புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார். பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார். அந்தாள வெளியில் தூக்கி போடுங்க என்று உத்தரவிட்டார். அவர் கட்சிக்காரர் என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. இதனால் கோபமடைந்த வைகோ கட்சிக்காரர் என்றால் குடிக்க வேண்டுமா? நான் அடிவயிறு வலிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சலித்துக்கொண்டபடி தொடர்ந்து பேசி முடித்தார்.

    • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.
    • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும் என்பது உள்பட 74 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் வைகோ கூறுகையில், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது.

    சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்றார்.

    • 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூரில் தேர்தல் பிரசாரம்.
    • 11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவை.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவரது சுற்றுப்பயணம் விவரத்தை ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    3-ந் தேதி-மாலை 5 மணி தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூர், 4-ந்தேதி-மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்தியசென்னை, 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி.

    7-ந்தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8-ந்தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர், மாலை 6.30 மணி திருச்சி, 9-ந் தேதி-திருச்சி, 10-ந் தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரை.

    11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவை.

    • கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர்.
    • கணேச மூர்த்தி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    கோவை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கணேசமூர்த்தியும், நானும் உயிருக்கு உயிராக பழகினோம். அவர் கொள்கை பிடிப்புடன் பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. எனக்கு இடி விழுந்தது போல் இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன்பிறகும் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

    எம்.பி. சீட் கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை அவர் நட்டாற்றில் விட்டு விட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது மன உளைச்சலுக்கு காரணம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் தான் தெரியும். கணேசமூர்த்தி என்றும் திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.

    திருச்சி:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
    • தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    திருச்சி:

    திருச்சி சிறுகனூரில் திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இது.

    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். பா.ஜ.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கெஜ்ரிவாலை கைது செய்து கொண்டு போனார்கள். இந்துத்துவா அஜண்டா ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம், இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.
    • வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நகர கட்டமைப்புகளை மேம்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளாக நிறைவேறாத இந்த திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    அரசியலை பொறுத்தவரை என்னால் முடியாததை செய்து தருவேன் என்று கூறமாட்டேன். தேர்தல் பிரசாரத்திற்காக நான் செல்லும்போது சில திட்டங்கள், கோரிக்கைகள் எனது ககவனத்திற்கு வந்தால் அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.

    நான் நேரடி அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது. பலவற்றை நான் கற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. அரசியலை பொருத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி எனலாம். மக்களிடம் எப்படி பேசுவது? சக அரசியல் பிரமுகர்களிடம் எப்படி நடந்துகொள்வது என பல விவரங்களை நான் அறிந்துகொள்ளவேண்டி உள்ளது. வைகோ போல என்னால் செயல்பட முடியாது.

    ஆனால் முயற்சி செய்வேன். என்னை வேட்பாளராக அறிவித்ததுமே என்னிடம் இது முதல் தேர்தல் களம். உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கேட்டார்கள். அப்போது நான், என் மனதில் பெரிய சந்தோஷமும் கிடையாது, வருத்தமும் கிடையாது என்றேன்.

    ஆனால் நான் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது என்ற கேள்வி என் மனதில் உள்ளது. வைகோ மற்றும் தலைவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால்தான் வளர்ந்துள்ளதா என்பது தெரிய வரும்.

    இந்திய அளவில் பாரதிய ஜனதாவில் தற்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் முத்த தலைவர்களின் மகன்கள் தான். எனவே வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    எங்கள் கட்சி நிர்வாக குழுவில் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு நிர்வாகிகள் பேசுகையில் நான் மறுத்தேன். ஆனாலும் நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலால் நான் சம்மதித்தேன். எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழும்பூரில் உள்ள கட்சி தலைமை நிலையமான தாயகத்தில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும்.
    • ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை நிலையமான தாயகத்தில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 இடங்களை விருப்ப தொகுதியாக ம.தி.மு.க. கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில், ம.தி.மு.க.- தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்..

    தி.மு.க., ம.தி.மு.க. இடையே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 இடங்களை விருப்ப தொகுதியாக ம.தி.மு.க. கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நிரந்தரமாக தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருப்போம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மனநிறைவு தான். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என்றார்.

    • கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வருகிறது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.

    மேலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் உடன்பாடு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளும் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டது. அத்துடன் உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு தி.மு.க. சம்மதிக்கவில்லை.

    இதனால் இக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

    • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை நரேந்திர மோடி நாளை (4-ந்தேதி) தொடங்கி வைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணு உலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே பா.ஜ.க. அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ×