என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
- அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:
* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கான கீழடித் தடயங்கள் கிடைத்த மண் இது.
* வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்டோரின் வீரத்தால் தியாகத்தில் சிவந்த மண் சிவகங்கை.
* மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
* அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.
* சிவகங்கை மாவட்டத்தில் 2.38 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.
* சிவகங்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.855 கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது.
* சிவகங்கையில் 8,450 மாணவிகளுக்கு புதுமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* சிவகங்கையில் 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு சிவகங்கையில் மட்டும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
* சிவகங்கையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
* சிவகங்கையில் 33,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயன் அடைகின்றனர்.
* சிவகங்கையில் 65 கோவில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது.
* 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் அமையும்.
* தற்போது அடிக்கல் நாட்டியுள்ள பணிகளை மீண்டும் வந்து திறந்து வைப்பேன்.
* பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை செய்லபடுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும்.
- புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது.
ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும்.
ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுவயதிலேயே நெருங்கி பழகியுள்ளார். அந்த வாலிபர் சிறுமியை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் வாலிபர் 15 வயது சிறுமியிடம் காதல் வசனங்களை பேசி அவரது மனதை மாற்றியுள்ளார்.
நாம் இருவரும் தான் சேர்ந்து வாழ போகிறோமே? எனவே திருமணத்திற்கு முன்னரே நாம் ஒன்றாக இருப்பதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி அந்த வாலிபர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எப்போதும் போல சிறுமி பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் சிலருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் வெளியில் தெரிந்து விட்டால் நமது குடும்பத்துக்கு அசிங்கமாகிவிடும் என்று சிறுமியின் உறவினர்கள் கருதி உள்ளனர்.
இதனால் வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன உறவினர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அதிக அளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது சிறுமியான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட போது தான் அவர் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.
இது பற்றி உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் மாணவி சிகிச்சை பெற்று உள்ளார். அங்கிருந்தும் முறையான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதன்பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் சிறுமி உயிரிழந்து உள்ளார்.
சிறுமி கர்ப்பமானது பற்றி ஆரம்பத்திலேயே போலீசுக்கு தெரிய வந்திருந்தால் அவர்கள் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பார்கள். சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு கிடைத்திருக்கும்.
கடந்த 4-ந்தேதியே சிறுமி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில் அதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே ஆஸ்பத்திரி டாக்டர்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக உயிருக்குப் போராடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
- நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
- பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 4-ம் திருநாளான 26-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். காலை 4.45 மணி முதல் காலை 5.30 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக காலை 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 2-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
- பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.பி. பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சரவணன் தெரிவிக்கையில், பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி பழனி இடும்பன்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இடும்பன்குளத்தில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்றனர். அதேபோல் மலைக்கோவில், அடிவாரம் என 12 இடங்களில் மீட்பு பணி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம், வெள்ளி விலை 'கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் 'மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
இதேபோல், வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இப்படியாக நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, எந்த வேகத்தில் ஏறியதோ, நேற்று அதே வேகத்தில் இறக்கம் கண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
அதன்படி, தங்கம் விலை நேற்று முன்தினத்தை விட நேற்று காலையில் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் குறைந்திருந்தது. பிற்பகலில் மேலும் கூடுதலாக கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் சரிந்திருந்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.350-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்றும் இன்றும் சவரனுக்கு ரூ.15,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880
27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-1-2026- ஒரு கிராம் ரூ.405
29-1-2026- ஒரு கிராம் ரூ.425
28-1-2026- ஒரு கிராம் ரூ.400
27-1-2026- ஒரு கிராம் ரூ.387
26-1-2026- ஒரு கிராம் ரூ.375
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது.
- இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பணி செய்வதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இந்தத் தேர்வினை எழுதி தகுதியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர் வினை 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடை குறிப்பிற்கு தேர்வர்கள் இணைய வழியில் தங்களது ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
பாட வாரியாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின் பாட வல்லுனர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
சமீபத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டன. 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தேர்ச்சி பெறக்கூடிய மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு வருகிற 2-ந்தேதி பிற்பகல் முதல் அவர்களது தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
- எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்.
- இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது.
இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்றனர்.
இந்த படிவங்களில், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.
இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின்பு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். அதாவது சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும். நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர்.
இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக்கூறி நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 6-ம் எண் படிவத்தை கொடுக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதற்கான கால அவகாசமும் வழங்கி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆனால் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30-ந் தேதி(நேற்று) என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற நிலையில் அதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் டிசம்பர் 18-ந் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16 லட்சத்து 72 ஆயிரத்து 874 பேர் விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும், இந்த தேதிக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆக மொத்தம் சுமார் 22 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் தோராயமாக 2½ லட்சம் மனுக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட மனுக்கள் (18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்) ஆகும். மீதமுள்ள 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனுக்கள் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்அப்படியென்றால் நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரில் இப்போது, 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பம் அளித்து இருக்கிறார்கள்.
சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாமல் மனு கொடுக்கவில்லை.
இந்த புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படலாம் என தெரிகிறது.
ஒருவேளை இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் இப்போது மனு கொடுத்தவர்கள் 22 லட்சம் பேர் அப்படியே சேர்ந்தாலும், வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 65 லட்சத்து ஆயிரம் பேர் மட்டுமே இருப்பார்கள்.
அதேவேளையில், இந்த வரைவு பட்டியலில் பெயரை நீக்கம் செய்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த பெயர்கள் நீக்கப்பட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் தோராயமாக 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.
இந்த இறுதிப்பட்டியலின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களில் 47 லட்சம் பேர் மீண்டும் பெயரை சேர்க்க மனு அளிக்காதது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
- ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தேர்தல் பிரசாரம் மேற்கொள்வீர்களா?
பதில்: இன்னும் நேரம் உள்ளது. கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வேன்.
கேள்வி:- சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: தலைமை அறிவித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
கேள்வி:- தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: பீகாரில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததுபோல், தமிழகத்திலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
கேள்வி:- ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?
பதில்: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.
கேள்வி:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு என்ன பொருள்?
பதில்: அவரது கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். என்ன அழுத்தம் என்று எனக்கு புரியவில்லை. அவர் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.
கேள்வி:- தேசிய திரைப்பட விருதும், தமிழக திரைப்பட விருதும் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: என்ன என்று அவரைத்தான் கேட்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
- கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது
- நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் இதுவரை பேசாமல் இருந்தநிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து அவரது மனநிலையை தெரிவித்துள்ளார்.
என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது
* நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
* எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
- சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
சென்னை:
பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்களும், அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற செப்டம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான பரிந்துரைகளை பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






