என் மலர்
தேர்தல் செய்திகள்

பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரிசின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அம்பரிஷ் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த தொகுதியில் தனக்கு டிக்கெட் வேண்டும் என்று சுமலதா காங்கிரசிடம் கேட்டு வந்தார்.
ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கேட்டது. அந்த கட்சிக்கு தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது.
அதில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுமலதா சுயேச்சையாக நின்றார். அவருக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. இதில் சுமலதா வெற்றி பெற்றார்.
இதுகுறித்து சுமலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தேர்தலில் நின்ற போதே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஜனதா தளம் (எஸ்.) வேட்பாளர் நிகில் என்னை போலவே அரசியல் அனுபவம் இல்லாதவர்.
ஆனால், அவரது குடும்பத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
குறிப்பாக பெண்களை பற்றி அவர்கள் இழிவாக பேசியதன் மூலம் பெண்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காமல் போனது.
குமாரசாமி பேசும்போது சுமலதா முகத்தில் கணவர் இறந்த துக்கத்தை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். இது, எவ்வளவு புண்படுத்தும் வார்த்தை. இதுபோன்ற செயல்கள்தான் அவர்களை தோற்கடித்தது.

மாண்டியா தொகுதி மக்கள் என்னை சுயேச்சையாக போட்டியிட வற்புறுத்தினார்கள். பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களும் என்னை ஆதரித்தார்கள்.
இந்தியாவிலேயே எனது தொகுதியில் மட்டும் தான் காங்கிரஸ்- பாரதீய ஜனதா தொண்டர்கள் ஒரே வேட்பாளருக்காக ஒருங்கிணைந்து வேலை செய்த நிகழ்வு நடந்தது.
என்னை காங்கிரசில் சேரும்படி இப்போது யாரும் அழைக்கவில்லை. எந்த தலைவரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடகாவில் 19-ல் இருந்து 21 தொகுதிகள் வரை பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடம்தான் கிடைத்து இருக்கிறது. இதற்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். அவர்கள் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க கூடாது. அதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை.
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஜனதாதளம் தொண்டர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரிக்கவில்லை.
இதேபோன்ற நிலைதான் மாநிலம் முழுவதும் நிலவியது. காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணியை மக்கள் வெறுப்புடன் பார்த்தனர். காங்கிரஸ் மட்டும் தனியாக நின்றிருந்தால் 10 தொகுதிகள் வரை வென்று இருக்கும்.
மாண்டியா தொகுதி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி ஆகும். அதை ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
அதேபோல் மைசூர், தும்கூர் தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது. கூட்டணி கட்சிக்கு கொடுத்ததால் வெற்றி பெற முடியவில்லை.
இதேபோல் வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்து விட்டார்கள். அங்கெல்லாம் பாரதீய ஜனதா வென்று விட்டது.
காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே தடு மாற்றத்துடன் செல்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள் முகத்தில் மகிழ்ச்சியே காணவில்லை. இது ஒரு பொருந்தாத திருமணமாக இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நிகில் 2½ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி குட்டராஜு கூறினார்.
மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி ரேவன்னா கூறினார்.
ஆனால், அவர்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.


பாராளுமன்றத் தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் மாநில கட்சிகளின் துணையுடன் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற ராகுலின் கனவு தகர்ந்து போனது. அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் 10 சதவீதம் இடங்களைப் பெறாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.
சுமார் 3 மாதங்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தும் 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 44 இடங்களை விட இந்த தடவை கூடுதலாக 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது என்பதால் ராகுல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். தேர்தல் தோல்வியால் மிகவும் விரக்தி அடைந்த அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோழமை கட்சிகளின் தலைவர்களும் சமரசம் செய்ததைத் தொடர்ந்து அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பகுதி பூத் கமிட்டிகளில் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டால்தான், காங்கிரஸ் கட்சியை முன்பு போல அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார். எனவே பூத் கமிட்டி வாரியாக காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 421 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில், “நீங்கள் ஒவ்வொரு பூத்திலும் பெற்ற வாக்குகள் விபரங்கள் கொண்ட படிவம்-20 பட்டியலை தேர்தல் ஆணையம் உங்களுக்கு கொடுத்திருக்கும். அந்த படிவம்-20 பட்டியலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஜூன் 7-ந்தேதிக்குள் அனுப்பி வையுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுக்கு பூத் வாரியாக கிடைத்த வாக்கு விவர பட்டியலை அனுப்பி வருகிறார்கள்.
அந்த பட்டியலை வைத்து காங்கிரஸ் தலைமையிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, எங்கெங்கு காங்கிரசுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்ற அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர ராகுல் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரசின் தோல்விக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடந்த தில்லு முல்லும் ஒரு காரணமாகும் என்று காங்கிரசில் ஒருசாரார் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரசில் மற்றொரு சாரார், மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். என்றாலும் பூத் வாரியான ஓட்டுகளை மின்னணு எந்திர முடிவுகளுடன் மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
பூத் வாரியாக கிடைத்த வாக்குகளை மீண்டும் சரி பார்ப்பதன் மூலம் மின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்துள்ளதா? என்பதை உறுதிபடுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கருதுகிறார்கள். இதனால் பூத் வாரியாக வாக்குப்பதிவை ஆய்வு செய்யும் காங்கிரசின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



நெல்லை:
நாம் தமிழர் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று இரவு மே18 வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தமிழர்களின் வரலாறு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். 13 கோடி தமிழர்கள் இருந்தபோதிலும் தங்களது உரிமையை பெற்று வாழ முடியவில்லை. தமிழ்ஈழ விடுதலையை இன்று வரை விமர்சிக்கிறார்கள். கல்லில் இருக்கும் தெய்வங்களை வழிபடுவது தவறு என்று கூறியவர்கள் இன்று நம்மை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
நமது பழம் பெருமையை பேசுவது தவறல்ல. படிப்பினை, வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே புறநானூற்று தமிழனை பார்த்து வீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.
காசு இருக்கும் இடத்தில் கூடாதீர்கள். கொள்கை இருக்கும் இடத்தில் கூடுங்கள். நாங்கள் தோற்றாலும் வீரர்கள். நீங்கள் ஜெயித்தாலும் வீழ்ந்தவர்கள். பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்களில் இருந்து நமது தாய்மொழியை வெளியேற்றினார்கள். இன்று இந்திமொழியை திணிக்கப் பார்க்கிறார்கள். நாம் வீரவேகத்துடன் பேசுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவி வருகிறது. இது நடக்குமா என்று அவர்கள் பேசுவது ‘வெட்டிப்பேச்சு’. ஆனால் நாங்கள் பேசுவது வெற்றி பேச்சு.
இன்னும் அதிகபட்சம் அவர்கள் 7 ஆண்டுகள் ஆள்வார்கள். அதன் பிறகு நாங்கள் அறியணையில் அமர்வோம். புரட்சி என்பது மேல் இருப்பது கீழ் வரும். கீழே இருப்பது மேல் வரும். நாங்கள் புரட்சிகர போராட்டத்தை முன் எடுத்துள்ளோம்.
தேர்தல்தான் முடிந்துள்ளது. தேடல்கள் முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம்.
தி.மு.க. தமிழர்களை காக்க தவறிவிட்டது. தமிழ்தேசம் உருவாக்கிய பிரபாகரனை திராவிட திருவாளர்களே தோற்கடிக்க காரணமாக இருந்தார்கள்.
தமிழகத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு திராவிட கட்சிகளே அனுமதி கொடுத்தன. எனவே அவர்களை புறந்தள்ளி விட்டு தமிழர்களுக்கான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 17 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். தூய கட்சியை, நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவை காரணம் காட்டி நம்மை வீழ்த்தி விட்டார்கள். மத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியே பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அதை அவர்கள் கட்டி விட்டால் அவர்களது அரசியல் முடிந்து விடும். இந்த 5 ஆண்டில் ராமர்கோவில் கட்டாவிடில் நாங்களே மோசடி வழக்கு போடுவோம்.
திராவிடத்துக்குள் தமிழர்கள் அடங்கி இருக்க முடியாது. தமிழர்களுக்கு என்று தனித்துவம் உண்டு. இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்பே தமிழர்கள் தனி கொடியுடன் ஆட்சி நடத்தியவர்கள். இனி எங்களுக்கான வரலாற்றை நாங்களே படைப்போம். இந்த நேரத்தில் நாம் தமிழர் படை திரண்டு விட்டது. ஓட்டுக்கு காசு வாங்குவது அவமானம் என்ற காலம் வரும். அப்போது இந்த படை உறுதியாக வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.
1960களில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்று உருவான அச்சத்தை போக்குவதற்கு அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு, மக்களவை தி.மு.க.வின் இரு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத்தை டெல்லியில் தேடி கண்டுபிடித்து தமது அலுவலகத்திற்கு வரச் சொல்லி, கலந்து பேசி நான்குமணி நேரத்தில் இந்தி பேசாத மக்களுக்கான உறுதிமொழியை கடிதம் மூலமாக சம்பத் வீட்டுக்கே அனுப்பியிருந்தார்.
நாடாளு மன்றத்தில் தி.மு.க.வின் பலம் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோது அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் நேரு எழுதிய உறுதிமொழி கடிதத்தின்மூலம், “இந்தி பேசாதமக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக இந்தியோடு ஆங்கிலமும் கூடுதல் மொழியாகவும், இணை மொழியாகவும் தொடர்ந்து நீடிக்கும். இது எவ்வளவு காலம் நீடிக்கும்என்பதை முடிவு செய்யும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடாமல் இந்தி பேசாத மக்களிடமே விடுவேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அண்ணா கருத்து கூறும்பொழுது, “திராவிடத்தின்வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அரசியல் தஸ்தா வேஜிகளாகும்” என்று கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும் மக்களவையில் பிரதமர் நேரு உரையாற்றும்பொழுது, “எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்படவேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மிக தெளிவாக 1960 ஏப்ரல்24 அன்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய உறுதி மொழிகளை வழங்கியதற்கு காரணம் நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு என்கிற ஜனநாயக ஜாம்பவான் பதவி வகித்ததுதான். ஆனால் இன்று அசுர பலத்தோடு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிற, ஜனநாயக உணர்வே இல்லாத பிரதமர் மோடி இத்தகைய உறுதிமொழிகளை காப்பாற்றுவார்என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் தேர்தல் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்த புதிய கல்விக் கொள்கை என்கிற பூனைக்குட்டி இப்போது வெளிவந்துவிட்டது.

தமிழகத்தை பொறுத்த வரை இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழி தொடர்ந்து காப்பாற்றப்படவேண்டும். நேரு வழங்கிய உறுதி மொழிக்கு எதிர் காலத்தில் ஏதாவதுஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கவே அன்று பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார்கள். இச்சட்டத் திருத்தத்தின்படி நேருவின் உறுதிமொழிக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






