search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல்"

    • உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
    • தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாவான பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன.

    உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் எந்திரங்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. இதனால், மாணவிகள் இடப்பற்றாக் குறையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் நேற்று இரவு ஏற்றப்பட்டன.

    அந்த லாரிகள் 2 தெலுங்கானாவுக்கும், ஒரு லாரி கர்நாடகத்துக்கும் சென்றது.

    தற்போது பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டதால், ஏற்கெனவே இடநெருக்கடியில் சிக்கி தவித்த மாணவிகள் தற்போது மீண்டுள்ளனர்.

    அதே நேரத்தில் புதுவையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்குபதிவு எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் புதுவையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
    • புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48) என்ப வர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

    இதற்கிடையே நாலு மாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி (43). இவர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பை பையும், மதுபாட்டில்களும் அன்ன லெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க ‘நோட்டா’ விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
    • ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் மின்னணு எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் தவிர கூடுதலாக ஒரு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

    போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை தனது உரிமையாக பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த விருப்பத்திற்கு 'நோட்டா' என குறிப்பிடப்படுகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க 'நோட்டா' விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இனிவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இடம்பெறும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா ஒரு பகுதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மாநில முனிசிபல் நிர்வாகம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட, அறிவிப்பு மூலம் நோட்டா நடைமுறை சாத்தியமாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நோட்டா விருப்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற உள்ளது.

    ஏறக்குறைய 9 ஆண்டுகளாக மாநில தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்துமாறு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

    இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த நோட்டா விருப்பத்தை நீட்டிக்க அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

    நகராட்சி விதிகளின்படி ஒரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்டிருந்தால் அது 230 வார்டுகளாக இருக்கலாம். ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

    • தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. மாநில முதல்-மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதில் ஒரு பகுதியாக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால்பஜார் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.

    இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
    • புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

    இதற்கான அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் அரசு உறுதியளித்ததுபோல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது.

    இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

    இந்த கணக்கெடுப்பு நடத்த கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    எனவே உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.

    • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது.
    • தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.

    தானே :

    சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி அணியினர் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் விரைவில் மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தானேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    சிவசேனா அதிருப்தி அணி தான் உண்மையான சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதாவுடன், உண்மையான சிவசேனா(அதிருப்தி அணி) கூட்டணி அமைத்து போட்டியிடும்.

    தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர்கள் சரியானதை நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

    பாலாசாகேப் பால் தாக்கரே எப்போதுமே பா.ஜனதாவுடன், சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார். சிவசேனா காங்கிரசுடன் அல்லது தேசியவாத காங்கிரசுடன் இணைவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் பாலாசாகேப்பை பின்பற்ற போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் தேடுவதை அறிந்த ஸ்டான்லி தலை மறைவாகிவிட்டார்
    • தலைமறைவான ஸ்டான் லியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    அருமனை அருகே உள்ள மலைக்கோடு குடுக்கச்சி விளை பகுதியைச் சேர்ந்த வர் தாஸ் (வயது 56) தி.மு.க. பிரமுகர் மலைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி (50) அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டான்லி, தாசை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி தாஸ் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    படுகாயம் அடைந்த தாசை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி தாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    ஸ்டான்லி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து போலீசார் ஸ்டான்லியை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர்.போலீசார் தேடுவதை அறிந்த ஸ்டான்லி தலை மறைவாகிவிட்டார். தலைமறைவான ஸ்டான் லியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.பலியான தாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    • புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
    • இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    சுப்ரீம்கோர்ட்டு தலையீட்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியது.

    இருப்பினும் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கால் 2 முறை தேதி அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.

    இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனையை பெற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என தெரிகிறது.

    • அ.தி.மு.க.-சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
    • வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. ராஜாக்கமங்கலம் யூனியன் 10-வது வார்டு, குருந்தன்கோடு யூனியன் 7-வது வார்டுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவ ர்கள் மட்டும் அனுமதி க்கப்பட்டனர். செல்போ ன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் யூனியன் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அறையின் சீல்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மேஜைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா கலையரசு வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அனிதா கலையரசிற்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.குருந்தன் கோடு யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, அந்த யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் பேபி வெற்றி பெற்றார்.

    மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு க்கான வாக்கு எண்ணிக்கை தக்கலை யூனியன் அலுவல கத்தில் நடந்தது. பதிவான 287 வாக்குகளில் 166 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் அமுதா ராணி வெற்றி பெற்றார். இதையடுத்து, அமுதா ராணிக்கு தேர்தல் அதிகாரி ராஜா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

    கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு மற்றும் காட்டாத்துறை ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை திருவட்டார் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றார். காட்டாதுறை 5-வது வார்டு தேர்தலில் பிளஸ்சி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    வாக்கு எண்ணிக்கையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், டி.வாடிப்பட்டி கிராம ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் மற்றும் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 3 உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9 தேதி நடைபெற்று முடிந்தது.

    வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

    வடபுதுப்பட்டியில் 9,379 வாக்காளர்கள், டி.வாடிப்பட்டியில் 126 வாக்காளர்கள், சின்னஓவலாபுரத்தில் 480 வாக்காளர்கள் என மொத்தம் 9,872 வாக்காளர்கள் இருந்த நிலையில் 7510 வாக்குகள் மட்டுமே பதிவானது.

    இந்நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரவி, 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
    • 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி 10-வது வார்டு, குருந்தன்கோடு ஊராட்சி 7-வது வார்டு, மருதூர் குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு, கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு, காட்டாதுறை கிராம ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி மாலை வரை நடந்தது. 5 பதவிகளுக்கும் 56.62 சதவீத பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜாக்கமங்கலம் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குப்பெட்டி கள் ராஜாக்க மங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    பூட்டி சீல் வைக்கப்பட்ட மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டில் பதிவான வாக்குப் பெட்டிகள் குருந்தன்கோடு யூனியன் அலுவலகத்திலும், தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பெட்டிகள் தக்கலை யூனியன் அலுவலகத்திலும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது.

    திருவட்டார் ஒன்றி யத்துக்குட்பட்ட கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகளும் காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டில் பதிவான வாக்குப் பெட்டிகளும் திருவட்டார் யூனியன் அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சி.சி.டி.வி. கேமராவும் பொருத் தப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தேர்த லில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் முடிவுகள் 9 மணிக்கு முன்னதாக தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×