என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ops and eps
நீங்கள் தேடியது "ops and eps"
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளனர். #opsandeps #admk
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர், அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய தன்னிகரில்லாத மக்கள் இயக்கமாகிய நம் அ.தி.மு.க.வை தனது வாழ்வின் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்த அற்புதமான அரசியல் ஞானி நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவருடைய அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும், பன்முகத் திறமைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அனைவரையும் உள்ளார்ந்த அன்புடன் அவர் நேசித்ததையும் கழக உடன்பிறப்புகளாகிய நாம், அவரோடு நேரடியாகப் பழகிய அனுபவத்தால் எண்ணி, எண்ணி வியந்துபோகிறோம். ``அம்மா’’ அவர்களைப் போல இன்னும் ஓர் அதிசயப் பிறவி, இனி ஒருவர் தோன்ற முடியுமா? என்று திகைத்து நிற்கிறோம்.
ஒரு பள்ளி மாணவியாக அம்மா நிகழ்த்திய சாதனைகளையும், படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு, நாட்டியம், இசை போன்ற திறன் வளர்க்கும் துறை களிலும் புரட்சித் தலைவி அம்மா தன்னிகரின்றி திகழ்ந்ததையும் அவருடன் பள்ளிப் பருவத்தில் உடன் இருந்தவர்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து வியக்கிறார்கள்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா தனது 15-வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த போது, வயதிலும், அனுபவத்திலும், திறமையிலும் மூத்தவர்கள் பலர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் தனது தனித் தன்மையால் கலை உலகின் தங்கத் தாரகையாக நம் அம்மா மிளிர்ந்தார்கள்.
புரட்சித் தலைவி அம்மா தன்னுடைய சிறப்புமிக்க குணநலன்களால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மதிப்பிற்கு உரியவரானார். புரட்சித் தலைவி அம்மாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்; எப்படி இருக்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்த கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , 1982-ம் ஆண்டு அவரை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி, நம் இயக்கத்தை வழிநடத்தத் தேவையான பயிற்சிகளை வழங்கினார்.
1984-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பின ராக, அம்மாவை புதுடெல்லிக்கு அனுப்பி, அரசியல் அனுபவங்களைப் பெறவைத்தார்.
நாடாளுமன்ற அனுபவங்களால் அரசியல் வாழ்வுக்குத் தேவையான பயிற்சிகள் பலவற்றைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள், புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஆற்றிய பணிகளால் இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
தமிழகத்தின் முதல்- அமைச்சராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றிய புரட்சித் தலைவி அம்மாவின் மனிதாபிமானம் மிக்க ஆட்சி முறையாலும், தொலை நோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை அவர் செயல்படுத்தியதாலும், இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு வளர்ந்திருக்கிறது.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, பெண்கள் முன்னேற் றம், விவசாயிகள் நலன் காத்தல் என்று ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.
புரட்சித் தலைவி அம்மாவால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய அன்பு உடன் பிறப்புகளாகிய நாம், அம்மாவின் நினைவைப் போற்றி, புகழ்ந்து, நினைத்து, நெஞ்சம் உருகி அவரை வணங்கும் இந்த வேளையில், நாம் அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு நம் இதய தெய்வம் அம்மா மறைந்தாலும், பக்குவத்தோடும், ஒற்றுமை யோடும் செயல்பட்டு, நம் புரட்சித் தலைவி அம்மா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பல்வேறு சோதனைகளுக்கிடையே கழகத்தைக் காத்திருக்கிறோம். புரட்சித் தலைவர் நமக்க ளித்த வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னத்தை மீட்டிருக்கிறோம்.
கழக அரசை மக்கள் அனைவரும் போற்றும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக நடத்தி வருகிறோம்.
அம்மா காட்டிய பாதையில், அவர் செய்த சாதனைகள் தொடரும் வகையில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறோம். இந்த சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்திட உறுதி ஏற்று உழைக்கிறோம். அதுவே நாம், நம் இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன்.
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 1998-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை இந்தத் தேர்தலுக்காக நாம் உருவாக்கியுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தனது அடிப்படைக் கொள்கை களான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத் துவம், ஏழை, எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூகபொருளாதார பாதுகாப்பு, தமிழ் இன எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணத்தைத் தொடரும். அதுதான், எத்தகைய களமாக தேர்தல் களம் அமைந்தாலும் நமது நிலைப்பாடு. அப்படித்தான் இப்பொழுதும் தனது பாதை யையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு கழகம் நிற்கிறது.
புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றிகளை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பெற்று அந்த வெற்றியை புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வெற்றி மாலையாக அவர் நீடு துயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பிக்க நாம் உறுதி பூண வேண்டும்.
நம்மை எல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மா அவர்களின் பிறந்த நாளில் நாம், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #opsandeps #admk
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X