என் மலர்tooltip icon

    செய்திகள்

    • ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
    • தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும்.

    திருப்பூர்:

    அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

    பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.

    ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது.

    53 ஆண்டாக அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் த.வெ.க.வுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார்.

    செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந்தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.

    தமிழகம் அமைதி பூங்கா. இங்கு சாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ சாதியின் பெயரையோ கூறி தேவையற்ற பிரச்சனைகள் கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.

    தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.

    சீமான் தனித்துப்போட்டியிடுவார். தி.மு.க., அ.தி.மு.க., விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். 

    • அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர்.
    • இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

    மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.

    படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

    • இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
    • தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.

    2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.

    பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

    அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

    அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.

    ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.

    அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

    முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.

    உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.

    ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.

    இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.

    நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.

    இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.

    வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

    அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.

    காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.

    காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.

    சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

    அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.

    இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

    வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.  

    ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.

    ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே

    இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.

    இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

    இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.

    வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.

    வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.

    மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.                                                                     

    • முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
    • தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    மதுரையில் 'தமிழ்நாடு வளர்ச்சி' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்தோம்.

    * உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    * பரவலான வளர்ச்சி என்பதை எங்களது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறோம்.

    * முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம்.

    * புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.

    * மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர்.

    * மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூறவேண்டும்.

    * கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    * இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும்.

    * தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    * தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    * விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை.

    * தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை மாறி வருகிறது என்றார். 

    • மிதுனம் நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம்.
    • சிம்மம் நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம்.

    மேஷம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவருக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த பிரச்சினைகள் விலகும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட தொல்லைகள் வீண் பழிகள் அகலும். சிலருக்கு புதியதாக ஆயுள் காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மேல் வீண் பழிகள் அகலும். அரசாங்க ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். ராசி அதிபதி செவ்வாய்க்கு பாதகாதிபதி சனி பார்வை இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்திப் போடுவது நல்லது. மூத்த சகோதரன் சித்தப்பா இவர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் வல்வினைகள் அகலும்.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும். தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    மிதுனம்

    நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு செவ்வாயின் நேரடி பார்வை உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயல்வீர்கள். பொருளா தாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். வீடு கட்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் நிலவிய மன உளைச்சல் அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். விரும்பிய வரன் தேடி வரும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். குல தெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.

    கடகம்

    விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் வக்கிரம் பெற்று நிற்கும் உச்ச குரு பகவான் வக்ரகதியில் 12-ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். சற்று நிதானமாக செயல்படுவதால் பெரிய நன்மைகளை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கவும். தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு சனி மற்றும் குரு பார்வை இருப்பதால் மெக்கானிக். இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெற அஷ்டம ராகுவின் தாக்கம் குறைந்து திருமண தடை அகலும்.

    சிம்மம்

    நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ராசிக்கு 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் வரும். மண்மனை, பூமி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. சொத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். வியாபாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்வீர்கள். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். சுய ஜாதகரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க உகந்த காலமாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். சுவாமி ஐயப்பனை வழிபட சங்கடங்கள் தீரும்.

    கன்னி

    தர்மம் தலைகாக்கும் நேரம். ராசி அதிபதி புதன் தனாதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர் மாதிபதி யோகம். மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள். உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். தினமும் அபிராமி அந்தாதி படிப்பதால் கண்டகச் சனியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    துலாம்

    வளர்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தைரியம், தன்நம்பிக்கை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும். கடன் தொல்லை குறையும். செவ்வாய்க்கும் சனிக்கும் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பியவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வரலாற்று புகழ்மிக்க ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிப்பதால் எண்ணங்கள் ஈடேரும்.

    விருச்சிகம்

    நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சனி பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் செயல்பாடுகள் வெற்றியில் முடியும். நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும். புதிய தொழில் முதலீடுகளை மனைவி பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். 7.12.2025 அன்று இரவு 10.38 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரி பவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவகிரக செவ்வாயை வழிபடலாம்.

    தனுசு

    திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழில் வளர்ச்சியில் நிலவிய இடையூறுகள் அகலும். குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் வரத்துவங்கும். தொழில் உத்தியோக ரீதியான சில நேர்மறை சம்பவம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சிலருக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். இந்த வாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். 7.12.2025 அன்று இரவு 10.38 முதல் 10.12.2025 அன்று அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் மாமனார் அல்லது மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும்.

    மகரம்

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் ஈடேறும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.10.12.2025 அன்று அதிகாலை 2.23 முதல் 12.12.2025 அன்று பகல் 10.20 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

    கும்பம்

    நன்மையும், மேன்மையும் உண்டாகும். வாரம். ராசியில் உள்ள ராகுவுக்கு குருவின் வக்கிர பார்வை உள்ளது. தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்ம ராகுவால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம். சில தம்பதிகள் குறுகிய காலம் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். 12.12.2025 அன்று பகல் 10.20-க்கு சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களை வழிபடவும்.

    மீனம்

    சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு பணியாளர்களால் அசவுகரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும்.ஸ்ரீ ராமர் வழிபாட்டால் சுப செய்திகள் தேடி வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
    • நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை.

    புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது ஆளுநர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,

    நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

    தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

    தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்வருக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

    ஆளுநர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டை போல, இந்த முறையும் ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

    • வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார்.

    இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் இல்லத் திருமண நிகழ்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

    இதன் மூலம் 56 ஆயிரத்து 766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இவற்றைத் தொடர்ந்து, இன்று மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், ரூ. 3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.

    மேலும் ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

    மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதுதவிர மதுரையில் 2.4 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.216 கோடி மதிப்பீட்டில் கட்டி 15.7.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உலகப் புகழ்ப்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் 5 தளங்களுடன் கூடிய மாபெரும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி 24. 1. 2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்குப்பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.

    • சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
    • பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் அலாஸ்கா வின் யாகுடாட், ஜூனாவ் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.

    சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.

    மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய மேம்பாலம் சிவகங்கை மாவட்டத்தையும், மதுரை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.



    முன்னதாக, மதுரை கருப்பாயூரணி பகுதியில், மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான முருகவேல் ராஜன் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    • மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06108), நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06107), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
    • மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன

    உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

    இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.

    இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.

    இந்நிலையில், இன்றும் இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    • இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

    இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.

    ×