என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
- கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.
பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.
கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, கள் தடை நீங்குமா? என்ற கேள்விக்கு, கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப்பொருளாக மாறிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, பதநீரை கள் ஆக்குவது சரி, போதைப்பொருள் ஆக்குவதால் தான் சிக்கல். பனை பொருள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.
100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
- சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.
10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.
தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
- மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6-ந்தேதி மாலை கோவை வருகிறார். கோவையில் 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி நடனம் நடந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடனமே சாதனையாக இருந்தது.
அதை பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி முறியடித்து உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி-கும்மி நடனமும் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
வள்ளிக்கும்மி ஆடுவதால் பெண்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகரிக்கிறது. தற்போது அதை பாரம்பரிய கலையில் ஏராளமான கிராமங்களில் பெண்கள் இந்த கலையை கற்று வருகின்றனர்.
இந்த கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துணை செயலாளர் பிரேம், மாவட்ட செயலாளர்கள் தனபால், ரமேஷ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயா ழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 'தென்னக திருப்பதி' என போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இங்கு திருவோண நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர்- பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிார். தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஏராள மான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு கோவில் யானை 'பூமா' அசைந்தாடி யபடி சென்றது.
மேலும், ரதவீதிகளில் அம்மன் வேடம் அணிந்த பெண்கள் நடனம், நாட்டிய குதிரையின் நடனம், செண்டை மேளம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் தேருக்கு முன்பாக சென்றது. தேர் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்ததும், கோவில் புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின், நிறைவு நாளான 28-ந்தேதி காலை மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், மாலை புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையர் ஹம்சன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காலையில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரே நேரத்தில 7 இடங்களில் நடைபெற்றுள்ள நகை பறிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,185-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு கிராம் ரூ.110
23-03-2025- ஒரு கிராம் ரூ.110
22-03-2025- ஒரு கிராம் ரூ.110
21-03-2025- ஒரு கிராம் ரூ.112
20-03-2025- ஒரு கிராம் ரூ.114
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
- மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.
அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.
என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.
அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?
- உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, பாராளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக" தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் தி.மு.க. அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன.
அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே? மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட தி.மு.க., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே?
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா?
2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






