என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
- திமுகவின் ஒட்டுமொத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் 5.31 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் & ஆசிரியர்கள் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2022&23ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 37,658 அரசு பள்ளிகளில் 50 லட்சத்து 42,026 மாணவர்கள் பயின்று வந்தனர். இது 2023&24ஆம் ஆண்டில் 48 லட்சத்து 40.034 ஆகவும், 2024&25ஆம் ஆண்டில் 45 லட்சத்து 10,612 ஆகவும் குறைந்திருக்கிறது. அதாவது இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், திமுகவின் ஒட்டுமொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்கு குறைந்து வருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த 2015&16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 45.10 லட்சமாக குறைந்து விட்டது என மத்திய அரசே தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி கூறி வந்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக போதிய நிதி ஒதுக்காதது, ஆசிரியர்களை நியமிக்காதது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகியவை ஆகும். இரண்டாவது, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிப்பது ஆகும். இந்த இரு வழிகளிலுமே அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு திமுக காரணமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் ''மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்'' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020-& 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாக இருந்தது. இது 2020&-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%ஆகும். 2024-&25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், கல்விக்கு ரூ.44,042 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் குறைந்தது 15% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 22&ஆம் இடத்தில் உள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு வெகு காலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் 2022&23ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2024&25ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7884 குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வந்தால், மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியாது.
அடுத்ததாக பத்தாண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 63.42 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறியதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தியவர் கர்மவீரர் காமராசர் என்றால், அவற்றை சீர்குலைத்தது திமுக அரசு தான் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத அளவுக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனையாகும். இந்த சீரழிவை திமுக அரசால் சரி செய்ய முடியாது. அடுத்து அமையவுள்ள ஆட்சியில் இந்த சீரழிவுகளை சரி செய்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பா.ம.க நடவடிக்கை எடுக்கும்.
- தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
- அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார்.
திருச்சி:
மலைக்கோட்டை மாநகரில் எண்ணிலடங்கா திட்டங்களை ஆளுங்கட்சியில் தான் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி போராடி பெற்றத்தந்தவர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கே.என்.நேரு. தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், டெல்டா மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகவும், தி.மு.க.வின் முதன்மை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
தமிழக அமைச்சர்களில் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வில் மாபெரும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியிடமும், தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடமும் பாராட்டு பெற்றவர்.
2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பரபரப்பான அரசியல் புயல் தமிழகத்தை மையம் கொண்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக பணியாற்றி வருகின்றன. ஒருபுறம் மக்கள் சந்திப்பு பயணங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களால் அனல் பறக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே நடைபெற்ற தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்த அவர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவும் சென்றார். பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இருந்து சாலை ரோடு வழியாக தில்லைநகர் பகுதிக்குள் நுழைந்து தனது வீடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது வழியெங்கிலும் அவரை கடந்து சென்றோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக தில்லை நகரில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்த அமைச்சர் கே.என்.நேரு தன்னை சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகளிடம் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் ஓரிரு வரிகளில் கேள்விகளுடன் பதில்களையும் அளித்தவாறு சென்றார்.
அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார். நகராட்சி துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை திரும்பத் திரும்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக டி.ஜி.பி.க்கு ஒருபுறம் கடிதம் எழுதி வரும் நிலையில், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பது போல அவர் சொந்த ஊரில் மிகவும் இயல்பாக நடந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி.
- அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.
அதையும் மீறி பேருந்துகள், தொடர் வண்டிகள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும்.
எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.
- கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்.
தவெக தலைவர் விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.
கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், பி.டி.செல்வக்குமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் திமுகவின் இணைந்தனர்.
விஜய் நடித்து வெளியான புலி திரைப்படத்தை தயாரித்தவர் பி.டி.செல்வக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
- இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.
முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.
5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-
மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.
அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.
இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.
நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.
அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.
மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.
இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.
ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.
ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.
அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.
ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.
அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.
ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.
அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.
மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது.
- எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது.
மதுரை:
மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்தி வருகிறேன். முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது.
புதிதாக கட்சியை தொடங்கி உள்ள விஜய் பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன்.
யாரோடு கூட்டு சேர்த்தாலும் தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தமிழ் நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. எந்த கால கட்டத்திலும் எந்த சக்தியும் இங்கு நுழைய முடியாது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கர்வத்தோடும், அகந்தையோடும் தி.மு.க.வை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசுகிறார். 100 மடங்கு பலம் கொண்டவர்களால் கூட தி.மு.க.வை வீழ்த்த முடியவில்லை. அமித்ஷா நாவை அடக்கி பேச வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்யும்போது மிக கவனத்துடன் பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டிக்க பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. மீண்டும் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. அதே எஸ்.ஐ.ஆரை வைத்து 65 லட்சம் வெளிமாநில வாக்குகள் தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது, நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. தி.மு.க.-த.வெ.க. இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களை போல் பேசி வருகிறார் விஜய். விஜயின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.
அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.
இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.
- மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்லக்கை சுமந்து சென்று பாரதியாரின் நினைவு இல்லத்தில் வைத்து மரியாதை செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்லக்கை சுமந்து சென்று பாரதியாரின் நினைவு இல்லத்தில் வைத்து மரியாதை செலுத்தினர்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்.
- அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள்(வயது60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் புலியை பிடிக்க புலி நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
அப்போது அது அந்த பகுதியில் நடமாடி வந்த வயதான ஆண்புலி என்பதும், இந்த புலி தான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர்.
இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர்.
ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது. இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் புலி நடமாட்டத்தால் அச்சத்திலும் இருந்து வந்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் டி-37 புலி சிக்கியது.
புலி சிக்கியதை அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிடிபட்ட புலியை பார்வையிட்டனர். அப்போது அது 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா? அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 16 நாட்களாக மசினகுடி, மாவனல்லா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி-37 புலி சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திரு வண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 320 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து நாளை (12-ந்தேதி) மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் நாளை (12-ந்தேதி) 7,838 பயணிகளும், 13-ந்தேதி 3,573 பயணிகளும், 14-ந்தேதி 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை திங்கட்கிழமை சற்று குறைந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400-க்கும் விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 209 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199






