என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiger caught"

    • ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள்(வயது60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் புலியை பிடிக்க புலி நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    அப்போது அது அந்த பகுதியில் நடமாடி வந்த வயதான ஆண்புலி என்பதும், இந்த புலி தான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர்.

    இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர்.

    ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது. இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் புலி நடமாட்டத்தால் அச்சத்திலும் இருந்து வந்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் டி-37 புலி சிக்கியது.

    புலி சிக்கியதை அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிடிபட்ட புலியை பார்வையிட்டனர். அப்போது அது 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா? அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த 16 நாட்களாக மசினகுடி, மாவனல்லா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி-37 புலி சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

    • கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.
    • தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    ஊட்டி:

    கர்நாடக மாநிலம் கோபால்சாமி பேட்டையை சேர்ந்தவர் கவியப்பா (வயது 58). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகள் மேய்க்க சென்றார்.

    அப்போது லக்கிம்புரா வனத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி ஒன்று கடித்தது. இதைக் கண்ட கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.

    இதில் வலது கண் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக புலியிடம் இருந்து கவியப்பா உயிர் தப்பினார். மேலும் புலியும் அங்கிருந்து சென்றது. பின்னர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து கவியப்பாவை மீட்டு மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே அதே நாளில் மாலை நேரத்தில் மற்றொரு தொழிலாளி ராஜேஷ் என்பவரையும் புலி தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து பொதுமக்கள் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர்.

    இதனால் சம்பவ இடத்துக்கு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியை தேடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு கும்கி யானை மீது பந்திப்பூர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தனியார் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கண்டனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் வெங்கடேஷ் புலி மீது மயக்க ஊசியை செலுத்தினார். 10 வயது ஆண் புலி சிக்கியது இதனால் வலியால் புலி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி மயங்கி விழுந்தது.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் ராட்சத வலைக்குள் புலியை அடைத்து கொட்டும் மழையில் தூக்கிச் சென்றனர். பிடிபட்ட ஆண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் புலியை கூண்டில் அடைத்து மைசூரு வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறும் போது, ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. இதனால் வேட்டையாடும் திறனை இழந்துள்ளதால் மாடு, மனிதர்களை தாக்கி வருகிறது. இதைத் தொடர்ந்து அதைப் பிடித்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×