என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
    • சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    திண்டுக்கல் டிராகன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.

    திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

    நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடம்பிடித்த திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.

    குவாலிபையர் 1 சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் தோல்வி அடைந்த அணி குவாலிபையர் 2 சுற்றில், எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும்.

    குவாலிபையர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி ஜூன் 6ம்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    திண்டுக்கல்:

    9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

    விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.

    திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    • பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வருக்கு பொறுக்க முடியவில்லை.
    • 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்.

    கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

    பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.

    அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும்.

    பாஜகவுடன் கூட்டணி என்பதை பொறுக்க முடியவில்லை முதல்வர் ஸ்டாலினுக்கு. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை.

    ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.

    கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?.

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம், குடிநீர் வரி, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி என அனைத்தும் உயர்ந்துவிட்டது.

    இளைஞர்கள் அதிமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
    • மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.

    சென்னை எழும்பூரில், மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை நான் கேட்கவே இல்லையே. பொய்களை பரப்புவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

    கூட்டத்தின்போது அந்த ஒன்றரை மணி நேரத்தில் இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.

    அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது ஜெயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 12 தொகுதிகள் கேட்கலாம். ஆனால், அதுகூட என்னுடைய முடிவு அல்ல. தலைமைக் கழகம்தான் தீர்மாணிக்கும் என்று முதன்மைச் செயலாளர் பதில் அளித்தார்.

    ஆனால், இரட்டை இலக்க மட்டும் எடுத்துக்கொண்டு செய்தியாளர்கள் மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.

    8 தொகுதியில் ஜெயிச்சா தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதைவிட கூடுதலாக கேட்போம் என்று பொதுக்குழுவில் கூறினோம். ஆனால், அதுகுறித்து எதுவும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.
    • அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

    சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

    அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது.

    ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.

    மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

    இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. அதுன்படி, 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
    • அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

    திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா?

    திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?

    திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.

    சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும்.
    • 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.

    மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    மாங்காடு காமாட்சி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், பழனி தண்டாயுதபாணி, பெரியபாளையம் பவானி அம்மன், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய 5 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக 2 கோவில்களில் இருந்த திட்டத்தை 13 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 95 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூர் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நாங்கள் நடத்துவோம் என்று தெரிந்துதான் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

    சீமானுக்கு மறதி அதிகம். ஏற்கனவே பழனி, மருதமலை கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். சீமான் போன்றோர் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது.
    • நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எனக்கு தெரியாது. மேலும் எனது குடும்பத்தில் இருக்கிறவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என கூறி இருந்தேன். ஆனால் அதையும் மீறி எனது மருமகள் அரசியலுக்கு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை ராமதாஸ், அன்புமணி மீது வைத்தார் .

    இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் பா.ம.க. சமூக ஊடகப்பேரவை ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .அப்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது டாக்டர் ராமதாசிற்கு தெரிந்தே வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஏன் இதுபோல் பேசினார் என்று தெரியவில்லை.

    கடந்த 5 வருடங்களாக அவர் அவராக இல்லை. குழந்தை போல் மாறிவிட்டார். அவரை 3 பேர் இயக்குகின்றனர். வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி பொது வெளியில் என்ன பேசவேண்டும் என்று ராமதாசிற்கு தெரியவில்லை என அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார்.

    இந்த நிலையில் இன்று பா.ம.க.சமூக ஊடகப்பேரவை ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் சமூக வலைதளங்களில் கருத்துக்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசும் போது சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது. நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். சமூக வலைதளங்களில் நளினமாகவும், நயமாகவும் பதிவிட்டு நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்றார்.

    ராமதாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அன்புமணி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    • மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
    • இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அஐமச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், இன்று மீனவ கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10 MM 773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப்படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

    வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதனம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளையும் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பரம் புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    • நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து காளியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி சாமி தரிசனம் செய்வார்கள். அதில் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரது மகன் அஜித்குமார் (வயது 27) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காவலாளியாக பணியில் சேர்ந்தார். திருமணமாகி மனைவி உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட அவருக்கு தற்போது வரை சம்பளம் கூட தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) என்பவர் தனது மகள் நிகிதா (48) என்பவருடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். மாற்றுத்திறனாளியான சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27), கோவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலியை எடுத்து கொண்டுவந்து கொடுத்தார்.

    முன்னதாக சிவகாமிக்கு சொந்தமான 10 பவுன் நகைகளை ஒரு துணியில் சுற்றி கட்டைப்பையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை 'பார்க்கிங்' செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.

    இதையடுத்து தனக்கு கார் ஓட்ட தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை அஜித்குமார் 'பார்க்கிங்' செய்துள்ளார். சுமார் 1 மணி நேர இடைவெளிக்கு பிறகு கோவிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறினர். அப்போது அங்கு பையில் சுருட்டி வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை.

    இதுபற்றி சிவகாமி மற்றும் நிகிதா ஆகியோர் காரை பார்க்கிங் செய்ய கார் சாவியை பெற்ற அஜித்குமாரிடம் கேட்டனர். ஆனால் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து சிவகாசி 10 பவுன் நகை மாயமானது குறித்து திருப்புவனம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை, நேற்று தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணைக்காக அவர் உள்பட 5 பேரை காரில் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்குமாருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமாரை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டு மற்ற 4 பேரையும் போலீசார் விடுவித்து உள்ளனர்.

    பின்னர் அஜித்குமாரை சிகிச்சைக்காக முதலில் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து உடல் நிலை மோசமானதாக கூறி அவரை மதுரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றிய தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    நல்ல உடல் நிலையில் இருந்ததால்தான் அஜித்குமார் கோவில் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு உடலில் எந்தவித நோயோ, பிரச்சனையோ இல்லாதபோது, போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் சென்று கோஷங்கள் எழுப்பினர்.

    அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோவில் காவலாளியின் மர்மச்சாவு குறித்த தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நகை மாயமான புகாரில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி, எனது அண்ணனை அழைத்து சென்றதாக உறவினர்கள் போனில் தெரிவித்தனர். நான் வேலையை முடித்து விட்டு வர 4 மணியாகி விட்டது.

    ஊருக்குள் வந்து நான் கேட்டபோது நகை தொலைந்ததாக பெண்கள் புகார் தெரிவித்து இருந்தனர். நானும், எனது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அப்போது எனது அண்ணனை போலீஸ் நிலையத்துக்குள் வைத்து விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

    எனவே காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் எனது தாயாரும் வீட்டுக்கு வந்து விட்டோம். காலை 6 மணிக்கு 3 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நகையை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டு பீரோவை திறந்து பார்த்தனர். எனது செல்போனை வாங்கிக் கொண்டு என்னை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு மேலும் 2 வாலிபர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் ஊருக்கு வெளியே உள்ள தோப்புக்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு வைத்து எனது அண்ணனை அடித்தனர். என்னையும் அடித்தனர். சுமார் அரை மணி நேரம் எங்கள் இருவரையும் அடித்தனர்.

    காலையிலும் மதியமும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்தனர். மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்த பிறகும் எனது அண்ணனை மீண்டும் அடித்தனர். கடைசி வரை எனது அண்ணன் எனக்கு தெரியாது என்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் கூறினான். ஆனால் போலீசார் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் நகை இருக்கும் இடத்துக்கு கூட்டி செல்கிறேன் என்று சொன்னான். அப்படியாவது போலீசார் அடிப்பது குறையும் என்பதற்காக அப்படி சொன்னான். கோவிலுக்கு பின்னால் நகை இருக்கிறது என்று கூறியுள்ளான்.

    இதனால் அவனை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று போலீசார் பார்த்தனர். அங்கு நகை இல்லாததால் போலீசார் கோவிலின் பின்புறம் வைத்தும் அவனை அடித்து உள்ளனர்.

    பின்னர் என்னை வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு என் அண்ணனுக்கு என்ன நடந்தது, எங்கே அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை.

    மாலை 6 மணியளவில் என்னிடம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போடுமாறு கூறினார்கள். நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    எனது அண்ணனை போலீசார் அழைத்து சென்றிருக்க கூடாது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், அதன் மூலும் நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அஜித் குமார் உயிரிழப்பு குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது உறவினர்கள் திரண்டு நிற்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
    • வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது.

    துவாக்குடி:

    திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெறுகிறது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு, கேரளா ராஜா என பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன்தான் தற்பொழுது தி.மு.க. கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது. அதுவும் வெடிக்கவில்லை மற்ற டிரோன்கள் வானிலே தகர்க்கப்பட்டது. இனி குழந்தைகளுக்கு கூட சீனாவில் தயாரிக்கப்படும் ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள்.

    இந்தியாவில் 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் 100 நிறுவனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தேவையான ஆயுதங்கள் இருப்பதுடன் வெளிநாட்டிற்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

    நமது நாட்டில் ராணுவத்தில் ஆகாஷ், பிரமோத் ஆகிய ஏவுகணைகள் உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தாண்டி உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 78 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு காப்பீடு வசதி பெறுகின்றனர்.

    தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை. அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. ம.தி.மு.க. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியில் சேர்த்துள்ளது.

    பா.ம.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பி.ஜே.பி. தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்றது. அப்படியொரு கேவலமான செயலை அவர் செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 1, 2-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 4, 5-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×