என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.

    இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.

    மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
    • மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி துறையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென்மண்டலத்தினை 2 ஆக பிரித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாளை என்.ஜி.ஓ.பி. காலனி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீயணைப்பு மீட்புப்பணி துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயக்குமார், நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டலமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 34 தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்களையும் உள்ளடக்கியது.

    பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இம்மண்டல துணை இயக்குநர் உடனுக்குடன் விரைந்து சென்று பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலக்திற்கு சென்று வருவதற்கான பயண நேரம் குறையும். இந்த மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    • பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பா.ஜனதா நிர்வாகி நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் தி.மு.க. மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒட்டு மொத்த சென்னை மாவட்ட மகளிர் அணியினர் திரளாக பங்கேற்கும் இந்த போராட்டத்தில் குஷ்பு கொடும் பாவியையும் கொளுத்த இருக்கிறார்கள்.

    மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணியினர், மகளிரணி அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
    • மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

    நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.

    பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.

    ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.


    பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.

    அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.

    இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

    மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.

    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது.
    • ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது.

    கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று நடந்தது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.489 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு 223 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டங்களுக்கெல்லாம், நான் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளின் பின்னால் இருக்கிற நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து, வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் இதுவரை 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களின் முகங்களை நான் பார்க்கிறேன்.

    நீங்கள் மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். உங்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கிறபோது பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

    பொள்ளாச்சி என்றாலே கவிஞர் மருதகாசி எழுதிய பாடல்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதிலும் இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கிற இளைஞர்களிடம்கூட அவரது அந்த பாடல் போய் சேர்ந்திருக்கிறது. 'பொதியை ஏற்றி வண்டியில, பொள்ளாச்சி சந்தையில, விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் விற்று போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு' என்ற இந்த பாடல் பொள்ளாச்சியின் வர்த்தக பெருமையை சொல்கிறது. அப்படிப்பட்ட இந்த பொள்ளாச்சி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு 4 முறை வந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு ரூ.1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறேன். இன்று 5-வது முறையாக வந்திருக்கிறேன்.

    இது அரசு நிகழ்ச்சியா? அல்லது ஒரு பெரிய மண்டல மாநாடா? என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள 4 மாவட்ட அமைச்சர்களுக்கும், 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களு டன் முதல்வர் திட்டம், இதற்கெல்லாம் முத்தாய்ப் பாய் நீங்கள் நலமா திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    நமது திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த ஒவ்வொருவரையும் செல்போனில் அழைத்து முதலில் நீங்கள் நலமா? என்று கேட்கிறேன். பின்னர் திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா? என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா? என்று கேட்கிறேன். கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல் கடைக்கோடியில் இருக்கும் மக்களிடமும் பேசுகிற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான்தான்.

    இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன் நான். உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் காது கொடுத்து கேட்பவன் நான். உங்கள் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உழைக்கிற முதலமைச்சர் நான். அதனால்தான் நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி இருக்கிறேன். இப்படி சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதால் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் உயருகிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதார வளம் வளருகிறது.

    ஒட்டுமொத்த தமிழ்நாடு முன்னேறுகிறது. அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர் சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது.

    நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. அதன் அடையாளம்தான் நீங்கள் திரண்டு வந்திருக்கும் காட்சி.

    நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடும் போது லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள். அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

    10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியல் போட்டு சொல்ல முடியுமா? மேற்கு மண்டலத்தை தங்கள் கோட்டை என்று சொன்னார்கள். வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா? இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தனர்.

    அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது இந்த பொள்ளாச்சி சம்பவம். மறந்து விட முடியுமா? பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து தைரியமாக அ.தி.மு.க. ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள். தி.மு.க. மகளிர் அணி சார்பில் தான் போராட்டம் நடத்தினார்கள். பிறகு நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படக்கூடிய வேடிக்கையை பார்த்தார்கள்.

    அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி ஏதும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றார். அப்போது நான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இதை சும்மா விட மாட்டேன் என்று சொன்னேன். நிச்சயமாக இதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என்று அப்போதே உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்து விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிய கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டு இருக்கிற நிலையில் அந்த பெண்ணின் பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது.

    ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது. அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில். பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது யார் ஆட்சியில்? கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சர், டி.ஜி.பி. இருந்தனர். அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான் இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்ற, பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். டிராமா நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அ.தி.மு.க., பா.ஜ.க. கள்ளக்கூட்டணி ஒரு பக்கம் என்றால், தமிழ்நாட்டை வளமாக்க, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இன்னொரு பக்கம் ஜனநாயக சக்திகளும், தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம். ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை, திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கிற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை இந்த தி.மு.க. செய்யும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.

    நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள்.

    பிரதமர் மோடியே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன? இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கொடுத்தீர்களே அந்த கதி என்ன? அதை பிரதமர் சொல்ல வேண்டும்.

    அடுத்த வாரத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. தமிழ் நாட்டுக்கு செய்து கொடுத்திருக்கிற சிறப்பு திட்டங்களை பட்டியல் போடுங்கள். என்ன சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் கேட்கணும். பதில் சொல்லுங்கள் பிரதமரே என்று எல்லோரும் கேட்கணும்.

    போனமுறை வந்தபோது பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது என்று சொன்னார். நீங்கள் அண்ட புளுகு ஆகாச புளுகு என்று ஒரு பழமொழி கேட்டு இருப்பீர்கள். இது மோடி புளுகு. அதை நம்பாதீர்கள். அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு.

    எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ம் ஆண்டு அறிவித்தீர்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் தடுத்தாரா? இல்லையே. அடுத்து உங்கள் நண்பர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். நாங்கள் தடுத்தோமா? இல்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே. உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த 10 வருடமாக தமிழ்நாட்டை திரும்பி பார்க்காமல், தேர்தலுக்கு முன்பு 10 நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் இளிச்சவாயர்களா? பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும் தான் பா.ஜ.க.வின் உயிர் மூச்சு.

    இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது. மாநிலத்தை கெடுத்த அ.தி.மு.க, மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க., இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலுக்கு நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண நாட்டின் மொத்த இந்திய மக்களும் தயாராகி விட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். தமிழ்நாட்டை உயர்த்துவோம். இந்தியாவை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).

    இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சென்னையில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2700-க்கும் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன.
    • தமிழ்நாடு முழுவதும் 21,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 18 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிகளில் தொங்கிக்கொண்டு சென்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தையடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில், நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் வேகமாக சென்ற பேருந்து உரசியதில், அதில் படிகளில் தொங்கிச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகரில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்தும் புளிமூட்டைகளைப் போல பயணிகளை அடைத்துச் செல்வதையும், குறைந்தது 20-க்கும் கூடுதலான மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் இயக்கப்படாதது தான்.

    சென்னையில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2700-க்கும் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 21,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 18 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.

    சி.ஏ.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.

    உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம், பொய் புரட்டு தான்.

    மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார். திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரை பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதலமைச்சர் செய்திருக்கின்றார்.

    போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதைத்தடுக்க அ.தி.மு.க. தவறி விட்டது. தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
    • விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

    தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

    இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.

    விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    ×