என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
- இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).
இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






