என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. கல்குவாரியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
அந்த பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது சென்று குளித்து வந்தனர். பனங்காலைமுக்கு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (38). இருவரும் நேற்று மாலை கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன், ராஜேஷ் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இரவு இருள் சூழ்ந்து விட்டதையடுத்து தேடும்பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன், ராஜேஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்குவாரியில் குளிக்க சென்ற இடத்தில் நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
விக்கிரவாண்டி:
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
- சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.
தாம்பரம்:
சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.
இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.
பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டி வரைக்குள் ஏதாவது ஒரு ரெயில் பெட்டியிலேயே ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் பயணிப்பதாகவும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலை தெரிவித்தவர் கூறி இருந்தார்.
இதையடுத்து பறக்கும் படையினர் சுமார் ½ மணி நேரம் ரெயிலை நிறுத்தி பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அந்த பணத்தை அப்படியே பைகளோடு கைப்பற்றி பறக்கும் படை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்போடு பைகளை கொண்டு சென்ற பறக்கும் படையினர் பணம் எண்ணும் எந்திரத்தின் மூலமாக எவ்வளவு பணம் உள்ளது? என்று எண்ணிப் பார்த்தனர்.
அப்போது அதில் ரூ.3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.
இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.
3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
நெல்லையில் போய் இறங்கியதும் அங்கு ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியே எங்களிடம் இவ்வளவு பணமும் கொடுத்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர் யார்? என்பது பற்றியும், பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் இருந்தே ரூ.4 கோடி பணமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து ரூ.4 கோடி பணத்தின் முழு பின்னணியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
இதன்படி சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.
அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த 2 இடங்களிலும் மேலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ரூ.4 கோடி பணம் எப்படி ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டது? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.
பின்னர் ரெயில் மூலமாக பணத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு கைதான 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
- பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி, தனியார் வருவாய் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக காணப்படுகிறது.
வெப்பத்தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. பழனி சாலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. மேலும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைப்பது, நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என வன ஆர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் வனப்பகுதி பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின் வயர்களை காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
நித்திரவிளை எஸ்.டி.மங்காடு செம்மாவிளை பகுதியை சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி பளுகல் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து 4-ந்தேதி பெனடிக் ராஜ் வீட்டிற்கு திரும்பினார்.
அவர் இருசக்கர வாகனத்தில் நடைக்காவு-சூழல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பெனடிக் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம், பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.
வருகிற 9-ந்தேதி (செவ்வாய்) மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரம் செய்யும் பிரதமர் மாலையில் கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வழியாக ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வருகிறார்
ஜி.என். செட்டி ரோட்டில் வேலூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத் தின் முன்பு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் பனகல் பார்க் சென்றடைகிறார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடக்கிறது.
தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் காலையில் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார். காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் செல்கிறார்.
சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை பார்வையிட்டு வரவேற்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் திரளும் இடங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி கட்சியினருடன் ஆலோசித்தார்.
பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை, வேலூர், நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
- கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
- தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை:
மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.
இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.
அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.
அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு.
- மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. ஜெயபெருமாள் மண்டபம் கேம்ப் மற்றும் பாம்பன் ஆகிய மீனவ கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். மக்கள் மத்தியில் வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-
நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது பையனுக்கு ராமேஸ்வரத்தில் பெண் எடுத்துள்ளேன். நான் அடிக்கடி ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறேன். மீனவர்களின் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மேம்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான். கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு. கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே கச்சத்தீவு குறித்து பிதற்றுகிறார்கள். மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.
நான் உங்களில் ஒருவன். மீனவர் நலனில் அக்கரை உள்ளவன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கே.சி.ஆணிமுத்து, மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சசிவணன், திருவாடனை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசை ராமநாதன், வடக்குஒன்றிய செயலாளர் ஏ.ஆண்டவர், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ.நாகராஜன் ராஜா மற்றும் தே.மு.தி.க., எஸ். டி.பி.ஐ., புதிய தமிழகம், மருது சேனா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
- இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் என்று கூறவில்லை. கூட்டணியிலேயே ஒற்றுமையாக இல்லாதபோது, இவர்கள் எப்படி பிரதமரை தேர்வு செய்வார்கள்.
மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றால் அந்த கூட்டணி நன்றாக இருந்திருக்கும். அவர் அந்த கூட்டணியில் சேர்ந்ததால் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அந்த கூட்டணி வலுவாக இருப்பதுபோல் மக்களிடம் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் தமிழகத்தில் இந்தியா கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. டெபாசிட் வாங்காது.
நாம் பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் அந்த கட்சியுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது என்று அவர் விமர்சிக்கிறார். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி கிடையாது. இந்த தேர்தலில் தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
10 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த நாம் (அ.தி.மு.க.) பல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளோம். 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன செய்தது. 3 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் 3½ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மு.க.ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை.
இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு அவர் என்ன செய்தார் என்று கூறமுடியுமா? அது முடியாததால் தான், எதை எதையோ கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, தி.மு.க. ஆட்சி மட்டும்தான். இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.
அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்ற ஏழை எளிய குடும்பத்தினர் பயனடையும் வகையில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முற்றிலும் நிறுத்திவிட்டது. மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது.
- புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:
1. ஆதார் அட்டை
2. பான் கார்டு
3. ரேஷன் அட்டை
4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்
5. ஓட்டுநர் உரிமம்
6. பாஸ்போர்ட்
7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்
8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை
10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்
11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
- மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மாலைமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது?
பதில்:-தேர்தல் களம் எங்களுக்கு என்றும் புதிது இல்லை. 19 ஆண்டுகளாக பார்க்கும் அதே தேர்தல் களம்தான். தேர்தல் என்றாலே போர்தான். போர் களத்தில் போர் வீரர்கள் எப்படி சண்டை போடு வார்களோ அப்படித்தான் இருக்கும். தேர்தலில் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றோடுதான் வருவார்கள். அதையெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.
மக்களிடம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று வாக்குறுதிகளை சொல்லி வருகிறோம். அடுத்தவர்களை குறை சொல்லி பேசாமல் தொகுதிக்கு நல்லது செய்வது பற்றியே மக்களிடம் பேசி வருகிறோம்.
தேர்தல் களம் நிச்சயமாக நன்றாக உள்ளது. நாளை நமதே... 40-ம் நமதே.. எங்களது வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தொண்டர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
கேள்வி:-தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு எதிர்கால திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள்?
பதில்:-தே.மு.தி.க.வில் உள்கட்சி தேர்தலை ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டோம். கேப்டன் மறைந்து 100 நாள்தான் ஆகிறது. அந்த சோகத்தில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. தேர்தல் என்கிற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு இருப்பதால் அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் பணிகள் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.
கேப்டன் எப்படி மிகப்பெரிய வலிமையோடு கட்சியை நடத்தினாரோ, அதே போல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்காக உழைப்போம்.
கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்திருந்தால் மேலும் வலுவாக இருந்திருக்கும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தோம். நீங்கள் குறிப்பிடும் கட்சியும் அப்போது கூட்டணியில் இருந்தது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லையே.
இந்த முறை எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதுவே அவர்களது முடிவாகவும் இருந்தது. அந்த வகையிலேயே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தார்.
ஆரம்பத்திலேயே எங்களை அணுகி பேசியதால் அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாகவும் எங்கள் கூட்டணியை பார்க்கிறேன். அதனால் பெரிய வெற்றி எதிர் பார்க்கிறோம்.
கேள்வி:-அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-அ.தி.மு.க.வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த போது ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இது ஒன்றும் புதிது அல்ல. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதில் அளித்தால்தான் சரியாக இருக்கும்.
அதே நேரத்தில் அது உள்கட்சி பிரச்சினை. சேருவதும், சேராததும் அவர்களது விருப்பம். எப்போதும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானே? அதில் மாற்று கருத்து இல்லையே. இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி:-கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணுகுமுறை எப்படி உள்ளது?
பதில்:-மிக மிக சிறப்பாக உள்ளது. அதனை எல்லா கூட்டங்களிலுமே நீங்கள் பார்க்கலாம். எல்லா பிரசாரத்திலும் நான் சொல்லி வருகிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மிக மிக மரியாதையோடு கூட்டணியை வழி நடத்துகிறார். எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அன்பாக கனிவாக பேசுவது, வழி நடத்துவது எல்லாமே மிக மிக அபாரமாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய எதிர்க்கட்சி தலைவராகவே எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன்.
கேள்வி:-விஜய பிரபாகரன் தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார். எதிர் காலத்தில் கட்சியில் அவரது பங்கு என்னவாக இருக்கும்?
பதில்:-தேர்தல் களத்துக்குத்தான் விஜயபிரபாகரன் புதியவர். ஆனால் பிறந்ததில் இருந்தே அப்பாவையே பார்த்து வளர்ந்தவர் அவர். எனவே அவருக்கு எதுவும் புதிது அல்ல. அப்பாவோடும் என்னோடும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதுவரை கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் கட்சியில் அனைவரும் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக தேர்தல் வந்ததால் சவாலுடன் எதிர்கொண்டுள்ளோம். அனைவரும் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே எங்களது பூர்வீக தொகுதியான விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
எங்களது மாமனார், மாமியர் பிறந்த ஊர் அங்குதான் உள்ளது. எங்கள் குல தெய்வமும் அங்கேதான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்படி எங்கள் வாழ்க்கையே விருதுநகரில்தான் தொடங்கியுள்ளது. எனவே விஜய பிரபாகரன் அங்கு நிற்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி மக்களும் விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் விரும்பினார்கள். இப்படி அனைவரின் விருப்பத்துக்கும் இணங்கவே விருதுநகரில் அவர் போட்டியிடுகிறார்.
தொகுதி மக்கள் விஜயபிரபாகரனை தங்களது செல்லப்பிள்ளையாகவே பார்க்கிறார்கள். தேர்தல் முடிநதவுடன் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு பற்றி முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்.
கேள்வி:-விஜயகாந்த் மறைவில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?
பதில்:-கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமலேயே உள்ளோம். 3 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமலேயே இருந்தேன். அலுவல கம், வீட்டை தாண்டி எங்கேயும் போகவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கூட்டணி தர்மத்தை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கட்சியை எதிர்காலத்தில் நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்போம்.
எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து வந்த அவர் முதல்-அமைச்சராகி நலத்திட்டங்களை செய்ய விரும்பினார். ஆனால் சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
விஜயகாந்தை முதல்-அமைச்சராக்காமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.






