என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ஆட்டூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சமரச பாண்டி. இவரது மகன் உதய பிரகாஷ் (வயது 23). இவர் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்தார். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம், நீடூர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஹேமா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, எதிர்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த ஹேமாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர். மாதங்களும் கடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென உதய பிரகாஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது ஹேமா வீட்டின் அறையில் தூக்கிட்டு பிணமான கிடந்துள்ளார். காதல் மனைவி தூக்கில் கிடந்ததை பார்த்ததும் உதய பிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மனைவியின் சடலத்தின் அருகில் கிடந்து அழுது துடித்துள்ளார். இருந்தாலும், ஹேமாவின் இழப்பு உதய பிரகாஷின் மனதில் பேரிடியாக விழுந்திருந்தது. இதனால் மிகவும் மனமுடைந்த உதய பிரகாஷ் வீட்டின் எதிரே உள்ள புளியமரத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
- கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பல்லடம்:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எரிவாயு குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிவாயு குழாய்களை ஐ.டி.பி.எல். நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தைச் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம் கிராமத்தில் நேற்று விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரும், கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
- நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சென்னை:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக புகார் தெரிவித்தும், நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் என்று கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூன்றில் ஒரு பங்கு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர் என்பது உண்மையாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதும் உண்மை.
மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பா.ஜ.க தலமையிலான கூட்டணியின் ஆதர்ஷய நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 10 லாரிகளில் சுமார் 100டன் வரை விற்பனைக்கு வரும்.
இந்த நிலையில் தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் முருங்கைக்காய் வரத்து 5-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. இன்று 2ஆயிரம் மூட்டைகளில் மட்டுமே முருங்கைக்காய் விற்பனைக்கு வந்து உள்ளது.
அதிலும் பெரும்பாலான முருங்கைக்காய்கள் தரமற்ற நிலையில் உள்ளதால் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. வரத்து குறைவு மற்றும் தரமற்ற முருங்கைக்காய் வரவால் அதன் விலை அதிரடியாக எகிறியது.
கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரகத்தை பொறுத்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250வரை விற்கப்படுகிறது.
இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சமையலுக்கு முருங்கைக்காயை பயன் படுத்துவதையே பெரும்பாலான இல்லத்தரசிகள் நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து முருங்கைக்காய் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக முருங்கைக்காய் செடிகள் சேதமடைந்து வீணாகி போனது. இதனால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்கள் பெரும்பாலும் கருத்த நிறத்தில் தான் உள்ளது.
இதை வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் ஆர்வம் காட்ட வில்லை. இதனால் பச்சை நிறத்தில் உள்ள தரமான முருங்கைக்காய்ககள் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை திடீரென பல மடங்கு அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது. இதன் பின்னர் விலைகுறையும் என்றார்.
- கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
- இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
சென்னை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
- ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொன்னேரி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. பின்னர் மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவும் இருக்கிறது.
மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் ஏராளமானோர் சளி, இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிகமானோருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி அதிகம் உள்ளது. மேலும் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சளி, இருமலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் 10 நாட்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதால் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-
பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் தற்போது ஏராளமானோருக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சளி இருமல் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மாத்திரை, டானிக் உட்கொள்வது தவறு. அது மேலும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
- நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.
தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.
அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை...
ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.
தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு...
சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ICAI தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
- இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
பொன்னேரி:
பழவேற்காடு தாங்கல் பெரும்புலம் ஊராட்சியில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பழவேற்காடு கொடிமரம் நெடுஞ்சாலையில் இருந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி முழுவதும் சாலையோரங்களில் தொடர்ச்சியாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல், பசுமை நாராயணன், ஏகாச்சரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பருப்பு கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்.
- 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ ரேசன் துவரம் பருப்பை பறிமுதல்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் அத்தியாவசிய பொருட்கள் கடத் தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் உணவுப் பாொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதிக்கு வெளியூரில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அருப்புக் கோட்டையில் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் அறிவழகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக வாகனத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் மூட்டை, மூட்டையாக ரேசன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் குதித்து தப்பி சென்ற நிலையில், அந்த வாகனத்தில் இருந்த 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ரேசன் துவரம் பருப்பை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த ரேஷன் துவரம் பருப்பானது, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் இருந்து விருதுநகர் தனியார் மில்லிற்கு கொண்டு செல்ல இருந்ததாக தனி வட்டாட்சியர் அறிவழகன் கூறினார்.
இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் பார்வையிட்டார்.
- முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.
இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார்.

அதை யானை வாங்கி சாப்பிட்டு தலையை அசைத்தது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் சிசு பாலன் மகள் அஷ்யாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-
யானை பாகன் இறந்த 10 நிமிடத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. யானை பாகன் உயிரிழப்பு பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள வில்லை. யானை சரிவர உணவை உட்கொள்வதை தவிர்க்கிறது. தற்போது யானை நலனுடன் உள்ளது. 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவில் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேக நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
யானைகளுக்கு தேவையான அனைத்தும் செய்யக்கூடிய நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கான பரிந்து ரைகள் வந்தால் அந்த பணி மேற்கொள்ளப்படும். கோவிலில் நடந்த சம்ப வத்தில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுளளது.துறை சார்ந்த குழு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.
கால்நடை, வனத்துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அங்கேயே இருந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணிகள் முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை முதல்-அமைச்சரின் ஆலோ சனை படி எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 28 கோவில்களில் யானைகளுக்கு தேவையான அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணி மருத்துவர்களின் பரிந்து ரைப்படி உணவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது
யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்






