என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
- கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மண்ணூர் கிராமம் மாதா கோவில் தெரு பகுதியில் கடையில் சோதனை செய்தபோது அங்கு குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வியாபாரி மணியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மண்ணூர் பகுதியில் தீபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான புகையிலை, குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. தீபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கிறது. பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராததால், பஸ் நிலையத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லை. மேலும் மெயின் ரோட்டில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் , பஸ் நிலைய கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே நகருக்குள் வந்து செல்லும் அனைத்து பஸ்களும் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பொதுமக்களுடன் இணைந்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நாமக்கல் நகரில் மளிகை கடைகள், மருந்து கடைகள், எலக்ட்ரிக்கல் கடை உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை நாளை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளதால் நாளை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நாளை அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் நோட்டு, புத்தகங்கள் வாங்க முடியாத நிலை, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்ட மீன் பிடி தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யூ. சார்பில் பழவேற்காடு பஜாரில் மாவட்ட செயலாளர் நித்யானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து குடியிருப்பு பகுதி மீனவர்களை அப்புறபடுத்தும் மத்திய அரசு திட்டங்களை கைவிட கோரியும் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போது மீன் பிடிக்க தடை செய்யப்படும் நாளுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், விஜயன், விநாயகமூர்த்தி, ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இரண்டு அடுக்கு ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
- புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களை திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு பஸ்நிலையம் கட்டும்பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கழிப்பறை வசதி மற்றும் பஸ் நிலைய பணியாளர்கள் ஓய்வறை, பஸ்களை நிறுத்தும் நடைமேடை உட்பட நவீன கூடுதல் வசதிகளுடன் ரூ.427 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

புதிய பஸ்நிலையம் 2 மாடி கட்டிடத்தில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் 36 மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 163 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,800 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன
தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் வேகம் எடுத்து சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறும்போது, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்ற பஸ் நிலையத்தில் விடுபட்ட அனைத்து நவீன வசதிகளுடனும் இந்த பஸ்நிலைய பணிகள் நடந்து வருகிறது என்றார்.
- 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் வருகிற 27-ந்தேதி (புதன்) கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 182 வட்டங்கள் உள்ளன. இந்த 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்தந்த வட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மூத்த பேச்சாளர்கள் 182 பேர் பங்கேற்கிறார்கள். மேலும் 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்றவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 182 பேச்சாளர்களும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான 27-ந் தேதி 142-அ வட்டத்தில் கே.பி.கோயில் தெருவில் வீடியோ எஸ்.எழில் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தாயகம் எம்.எல்.ஏ., எபினா மேரி ஆகியோரும் 127-வது வட்டம் கோயம்பேடு பஜனை கோவில் தெருவில் பொன்.வர லோகு தலைமையில் நடக்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா, அஜித்குமார் ஆகியோரும் பேசுகிறார்கள்.
இதே போல் 173-அ வட்டம் இந்திரா நகரில் மு.ப. நடராஜன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு இறைவன், செ.தமிழரசன், 182-வது வட்டம் கந்தன் சாவடியில் ஆறுமுகம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் வி.பி.ராஜன், விஜயகுமார், 91-வது வட்டம் முகப்பேர் மேற்கில் அண்ணதாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாறன், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் சீனிவாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சைதை சாதிக், எஸ்.விக்டோரியா ஆகியோரும் பேசுகிறார்கள்.
30 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.
- திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ஆட்டூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சமரச பாண்டி. இவரது மகன் உதய பிரகாஷ் (வயது 23). இவர் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்தார். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம், நீடூர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஹேமா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, எதிர்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த ஹேமாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர். மாதங்களும் கடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென உதய பிரகாஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது ஹேமா வீட்டின் அறையில் தூக்கிட்டு பிணமான கிடந்துள்ளார். காதல் மனைவி தூக்கில் கிடந்ததை பார்த்ததும் உதய பிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மனைவியின் சடலத்தின் அருகில் கிடந்து அழுது துடித்துள்ளார். இருந்தாலும், ஹேமாவின் இழப்பு உதய பிரகாஷின் மனதில் பேரிடியாக விழுந்திருந்தது. இதனால் மிகவும் மனமுடைந்த உதய பிரகாஷ் வீட்டின் எதிரே உள்ள புளியமரத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
- கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பல்லடம்:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எரிவாயு குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிவாயு குழாய்களை ஐ.டி.பி.எல். நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தைச் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம் கிராமத்தில் நேற்று விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரும், கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
- நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சென்னை:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக புகார் தெரிவித்தும், நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் என்று கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூன்றில் ஒரு பங்கு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர் என்பது உண்மையாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதும் உண்மை.
மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பா.ஜ.க தலமையிலான கூட்டணியின் ஆதர்ஷய நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 10 லாரிகளில் சுமார் 100டன் வரை விற்பனைக்கு வரும்.
இந்த நிலையில் தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் முருங்கைக்காய் வரத்து 5-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. இன்று 2ஆயிரம் மூட்டைகளில் மட்டுமே முருங்கைக்காய் விற்பனைக்கு வந்து உள்ளது.
அதிலும் பெரும்பாலான முருங்கைக்காய்கள் தரமற்ற நிலையில் உள்ளதால் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. வரத்து குறைவு மற்றும் தரமற்ற முருங்கைக்காய் வரவால் அதன் விலை அதிரடியாக எகிறியது.
கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரகத்தை பொறுத்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250வரை விற்கப்படுகிறது.
இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முருங்கைக் காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சமையலுக்கு முருங்கைக்காயை பயன் படுத்துவதையே பெரும்பாலான இல்லத்தரசிகள் நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து முருங்கைக்காய் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக முருங்கைக்காய் செடிகள் சேதமடைந்து வீணாகி போனது. இதனால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்கள் பெரும்பாலும் கருத்த நிறத்தில் தான் உள்ளது.
இதை வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் ஆர்வம் காட்ட வில்லை. இதனால் பச்சை நிறத்தில் உள்ள தரமான முருங்கைக்காய்ககள் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை திடீரென பல மடங்கு அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரிரு நாட்களில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர உள்ளது. இதன் பின்னர் விலைகுறையும் என்றார்.
- கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
- இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
சென்னை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
- ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொன்னேரி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. பின்னர் மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவும் இருக்கிறது.
மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் ஏராளமானோர் சளி, இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிகமானோருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி அதிகம் உள்ளது. மேலும் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சளி, இருமலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் 10 நாட்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதால் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-
பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் தற்போது ஏராளமானோருக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சளி இருமல் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மாத்திரை, டானிக் உட்கொள்வது தவறு. அது மேலும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






