என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumazhisai"

    • ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
    • மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை நகருக்குள் வெளியூர் பஸ்கள் வருவதை தடுக்கும் வகையில் தற்போது அனைத்து பஸ்களும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்தும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் 4-வது பஸ்நிலையமாக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதில் ரூ. 336 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கூடுதல் தளத்துடன் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதையடுத்து பஸ்நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்ந்தது. தற்போது பஸ்நிலையத்தில் பெரும்பாலும் பணிகள் முடிந்து விட்டன. வர்ணம் பூசும் இறுதி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகிறது.



    எனவே திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பஸ்கள், தனியார் சேவைகளுக்காக 30 பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்தின் 30 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் இங்கு டிரைவர், கண்டக்டர்கள் தங்க இடவசதி, கடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், நகரும் படிக்கட்டு வசதி, குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திருமழிசை, குத்தம்பாக்கம் பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலோ, தண்ணீர் தேக்கமோ இருக்கக்கூடாது என்று திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த மாத இறுதியில் புதிய பஸ்நிலையம் திறப்பு இருக்கும் என்றார்.

    • குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருமழிசை:

    சென்னை திருமழிசையை அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு இங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    குஜராத்தை சேர்ந்த இந்த குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து பூந்தமல்லி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக இருந்து இந்த குடோனை கவனித்து வருகிறார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென்று இந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ அடுத்தடுத்த இடங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கொருக்குப்பேட்டை வியாசர்பாடி உள்ளிட்ட 12 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த மற்றொரு சோப்பு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை நிரப்ப கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் போராடி நள்ளிரவு 12.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரண்டு அடுக்கு ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களை திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு பஸ்நிலையம் கட்டும்பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    கழிப்பறை வசதி மற்றும் பஸ் நிலைய பணியாளர்கள் ஓய்வறை, பஸ்களை நிறுத்தும் நடைமேடை உட்பட நவீன கூடுதல் வசதிகளுடன் ரூ.427 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.


    புதிய பஸ்நிலையம் 2 மாடி கட்டிடத்தில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் 36 மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 163 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,800 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன

    தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் வேகம் எடுத்து சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறும்போது, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்ற பஸ் நிலையத்தில் விடுபட்ட அனைத்து நவீன வசதிகளுடனும் இந்த பஸ்நிலைய பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    திருமழிசை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாய்பேட்டை:

    திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ருக்மணியம்மாள் (வயது 60). இன்று காலைஅவர் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்கு வந்து நின்றார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ருக்மணியம்மாள் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ருக்மணியம்மாள் உயிரிழந்தார். வெள்ளவேடு போலீசார் ருக்மணியம்மாளின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய துணை பொறியாளர் விஜயசங்கர் தலைமையில் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை அப்புறப்படுத்தினர்.

    ×