என் மலர்
இந்தியா
- தங்கம் நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு எட்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு எட்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
- விஜய் இப்போது தான் வந்து இருக்கிறார்.
- ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை கட்டி முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் புதுச்சேரியில் த.வெ.க. கூட்டத்தின்போது விஜய், புதுச்சேரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது தான் அவர் வந்து இருக்கிறார். ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் கற்றுக்கொள்ள வேண்டியதே நிறைய இருக்கிறது.
கரூர் மக்கள் அளித்த பாடத்தில் கற்றுக்கொண்டு, இப்போது அவர் டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியாக போகிறார் என்றால் இப்போது தான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டு உள்ளார். விஜய் எல்.கே.ஜி. படிச்சிட்டு இருக்காரு. வரட்டும் அவர் வரும்போது பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்
- நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது முழு திருப்தி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள அரசு ஆதரவாக உள்ளது. நடிகைக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி இருந்தது. இனியும் அது தொடரும் என்றார். அப்போது அவரிடம், ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் நடிகர் திலீப்புக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது ஜனநாயக முன்னணியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நடிகர் திலீப் மீது சதி திட்டம் தீட்டி குற்றம் சுமத்தப்பட்டதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால், அதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.
- நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
- ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதுகுறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.
பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள கோட்ரி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் ஜக்தாப்(வயது36). இவர் திருமணத்துக்கு பெண் தேடிவந்தார். சமீபத்தில் திருமண தரகர் ஒருவர் நாகேஷ் ஜக்தாப்புக்கு அறிமுகம் ஆனார். அந்த தரகர் மூலம் அவருக்கு பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. பெண் தேடி கொடுத்ததற்காக திருமண தரகர் நாகேஷ் ஜக்தாப்பிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக வாங்கிக்கொண்டார். பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு காய்ஜ் தாலுகாவில் உள்ள கோவிலில் நாகேஷ் ஜக்தாப்புக்கும், பிரித்தி ராவத்துக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமண கோஷ்டியினர் கோட்ரியில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர்.
இந்தநிலையில் பிரித்தி ராவத் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு நைசாக தப்பினார். திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணமகளை தேடி சென்ற மணமகன் வீட்டார் திக்கோல் அம்பா பஸ் நிறுத்தத்தில் அவரை பிடித்தனர். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பிரித்தி ராவத் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்து கழுத்தை நீட்டிய சில மணி நேரத்தில் தப்பியோட முயற்சித்தது தெரியவந்தது.
மேலும் இந்த மோசடியில் திருமண தரகர், பெண்ணின் அத்தை உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோசடியில் தொடர்புடைய பிரித்தி ராவத்தின் அத்தை, திருமண தரகர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
- தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
- வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதில், '9-ந்தேதி(நேற்று)வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.
அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.
சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.
சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.
சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.
சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.
சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






