என் மலர்
இந்தியா
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
- இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
சென்னை:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
- நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி.
- வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக மம்தானி சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.
அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இருவரது சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக, சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று முதியவர் கூறினார்.
அரியானாவைச் சேர்ந்த சுஹாத் சிங் என்ற 80 வயது முதியவர்ஸ்கை டைவிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
80 வயதில் 15,000 அடி உயரத்தில் இருந்து குறித்து ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், ஸ்கை டைவிங் சாகசத்தை செய்வதற்கு முன்பு முன்பு அவர் சிரித்தது முதல் மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று சொல்வது என அந்த எல்லா தருணங்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆர்வம், தைரியம் மற்றும் சிறிது பைத்தியக்காரத்தனம் ஆகியவை வயதைப் பொருட்படுத்தாமல், மனதை இளமையாக வைத்திருக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
- ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம்.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் வரும் 28ம் தேதி 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
- அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
- 30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை.
- சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் கடந்த 16-ஆம் தேதி அங்குள்ள கடற்கரையோரம் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகளும், பௌத்த பக்தர்களும் புத்தர் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி, புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளனர். அதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்தினர்.
ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்தவாதிகள் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியதையடுத்து அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் காவலர்களின் கைகளாலேயே கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திரிகோணமலை மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் வழக்கம் போல தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருகோணமலை ராவணனால் வழிபட்ட புகழ்பெற்ற தலமாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், கி.மு. 150 ஆம் ஆண்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் எல்லாளனால் வழிபடப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.
இங்குள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம், இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்துக்கள் மற்றும் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்டதாக உள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற இந்த தலம் இந்து மதத்தை பின்பற்றும் ஈழத் தமிழ் மக்களுக்கு புனிதமான நகரமாகவும் கருதப்படுகிறது.
1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது. இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாழ்ந்த இந்நகரில் பௌத்த விகாரை நிறுவுவது என்பது தமிழர்களின் மத நம்பிக்கையையும், கடவுள் வழிபாட்டு உரிமைமையும் சீர்குலைக்கின்ற செய்கையாகும்.
திருகோணமலை துறைமுகம் ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறைமுகமாகவும், முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சிங்களர்களின் ஆதிக்கத்தை முழுமையாக நிறுவுவதற்கும், தமிழர்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகவே இதை கருத முடிகிறது.
தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே மெல்ல மெல்ல சிங்களர்களை குடியமர்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது அவற்றை உறுதி செய்யும் விதமாக தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள், சிலைகளை நிர்மாணித்து வருவதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர்.
30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை. சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர். ஆனால் அமைதியையும், அன்பையும், ஆசையை துறக்கும் தத்துவத்தையும் போதித்த புத்தரின் பெயரால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலாச்சார படையெடுப்பை நடத்தி, தமிழர்களை அப்புறப்படுத்த நினைக்கும் பேராசையுடன் சிங்கள பௌத்த இனவாதிகள் செயல்படுகின்றனர்.
மத திணிப்பின் மூலம் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை அழிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழித்த நிலையிலும் கூட, அம்மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத அளவுக்கு சிங்கள அரசாங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. எனவே இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு கூட்டாட்சி முறையிலான தன்னுரிமை கொண்ட பிரதேசமாக மலர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
- வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை,
திருச்சி:
துவாக்குடி உபகோட்டம் வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ண சமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுண் சிப்பில் சி மற்றும் டி செக்டாரின் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர்,
வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான் பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி மாநகர் கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன்.
- எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செந்தீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நுங்களும் ஏராளம்.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்ததாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம்.
மேலும், அவர் இயற்றிய கீழடியில் கேட்ட தாலாட்டுகள், நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த "மகாகவி" என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஆவான் பால் பாக்கெட்டில் "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத்திருந்த கணக்கீட்டு படிவத்தினை தங்களது வாக்காளர் நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டீர்களா" என்று வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
- HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
- ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






