என் மலர்
இந்தியா
- திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
- பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.
தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரி்நது கொள்ளுங்கள். பாஜகவின் வளர்ச்சியே முக்கியம், என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியமல்ல. என்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகிறார்.
காங்கிரஸ் போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது.
விஜய்க்கான பாதுகாப்பு வேறு, அரசியல் என்பது வேறு. விஜய், செங்கோட்டையனுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை.
'Y' பிரிவு பாதுகாப்பு- பாஜகவுக்கு, விஜய், செங்கோட்டையனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
- யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.
- ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
- ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் கோடை மழை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள போதிலும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களும் கோடை வெயில் வாட்டி எடுக்கும் என்றும் அதன் பின்னர் 2 வாரங்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. சேலத்தில் 39.8 டிகிரி செல்சியசும், வேலூரில் 39.7 டிகிரி செல்சியசும், ஈரோடடில் 39.6 டிகிரி செல்சியசும், சென்னை மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியசும், கரூர், பரமத்தி, தர்மபுரி பகுதிகளில் 39 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் நேற்று மழை பெய்யவில்லை.
இன்று முதல் 3 நாட்களுக்கு (ஏப்ரல் 2-ந்தேதி வரையில்) கடலோர மாவட்டங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 3-ந்தேதி முதல் கோடை வெப்பச்சலன மழை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடிபத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு மோடி விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாக தலைமை அலுவலகமான ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஹெட் கேவர் ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று இருந்தார். அவர் இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அங்கு சென்றார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
குடிபத்வா பண்டிகையையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நாட்டின் சிறந்த டாக்டர்களின் ஆலோசனை, முதன்மை சிகிச்சை மற்றும் கூடுதல் உதவிகளை பெற முடியும். நோய் கண்டறிதலுக்காக அவர்கள் இனி நூற்றுக்கணக்காக கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய தேவையில்லை.
நாங்கள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 3 மடங்கு உயர்த்தியுள்ளோம்.
கொரோனா தொற்று காலத்தின் போது உலகத்துக்காக இந்திய உதவியாக இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் ஆர்.எஸ். தொண்டர்கள் தன்னலமின்றி பணியாற்றுகிறார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவினார்கள்.
அடிமை மனநிலையையும் அடிமைத்தனத்தின் சின்னங்களையும் நிராகரிப்பதன் மூலம் இந்தியா இன்று முன்னேறி வருகிறது. அடிமை மனநிலையுடன் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்.
உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடையும் உலகம் ஒரு குடும்பம் என்பதே எங்கள் மந்திரமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.
- விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
- செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.
விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.
பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.
பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?
விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குவதாக இருந்த இறுதித்தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இறுதித்தேர்வை ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.
- மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 120-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
இன்று பல்வேறு மாநிலங்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சைத்ர நவராத்திரி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய புத்தாண்டும் இந்த நாளில் இருந்து தொடங்குகிறது. வரும் நாட்களில் ஈத் உள்பட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வரும் நாட்களில் கொண்டாடப்படவுள்ள பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையில் பரவியுள்ள ஒற்றுமையின் உணர்வை சுட்டிக்காட்டுகின்றன.
பள்ளிகளில் கோடை விடுமுறை சில வாரங்களில் வர உள்ளது. கோடை விடுமுறையின் நீண்ட நாட்கள், மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.
இன்று, குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய தளங்களுக்கு பஞ்சமில்லை. கோடை காலம் நெருங்கி வருவதால் ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும், 'மழையைப் பிடி' பிரசாரம் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல நகரங்களிலும் கிராமங்களிலும் தண்ணீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கடத்துவதே இதன் நோக்கமாகும். மழைத்துளிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் நிறைய தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க முடியும்.
மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இது இந்தியாவிலிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு ஆகும்.
தற்போது, பழைய துணிகளை விரைவில் களைந்து விட்டு புதிய துணிகளை வாங்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது ஜவுளிக் கழிவுகளாக மாறி வருகிறது. உலகின் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் 3-வது நாடு இந்தியா. இதனால் நாம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறோம்.
ஆனால் இந்த சவாலை சமாளிக்க நம் நாட்டில் பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியானாவில் உள்ள பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.
இதேபோல் தமிழ்நாட்டின் திருப்பூர், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமர் மோடி தனது பேச்சின் போது தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.
இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.
இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை.
- மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொகுதி சீராய்வு குறித்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஒருங்கிணைத்து கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 58 கட்சிகள் கலந்து கொண்டன.
பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது தென் மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் 23.4 சதவீதம் ஆகவும் வடமாநிலங்களின் வளர்ச்சி சதவீதம் 24.39 ஆகவும் உள்ளது.
மக்கள் தொகையை பொறுத்தவரை தென் மாநிலங்களில் 12.53 சதவீதம் கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் வட மாநிலங்கள் 21.83 சதவீதம் ஆக உள்ளது. பொருளாதார ரீதியில் தென் மாநிலங்கள் பங்களிப்பு 36 சதவீதம், வட மாநிலங்களில் பங்களிப்பு 20 சதவீதமே உள்ளது.
ஆனால் தென் மாநிலங்களில் கிடைக்கும் நிதி பகிர்வு 27 சதவீதமாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பகிர்வு தொகை 42.5 சதவீதம் ஆக உள்ளது. பட்ஜெட்டில் 100 ரூபாய்க்கு தமிழ்நாட்டுக்கு 29 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
அதைப்போல் கர்நாட காவுக்கும் 14 ரூபாய் கொடுக்கப்படுகிறது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் 100 ரூபாய்க்கு 900 ,400 ரூபாய் விகிதத்தில் ஒதுக்கப்படுகிறது.
மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை. மது விற்பனையில் பா.ஜ.க. ஆளும் மாநிலமான ராஜஸ்தான் முதலிடம் வகிக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் 2006-ல் மோடி முதல்வராக இருந்தபோது வருவாய் அதிகரிக்கும் நோக்கில் வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் மது விற்பனைக்கு உரிமம் வழங்கியது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், வெளி மாநிலையில் இருந்து வருபவர்கள் மது அருந்த அனுமதிக்கப்பட்டனர். அந்த மாநிலத்திலேயே அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது . மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.
தொகுதி மறுசீராய்வினால் மக்கள் தொகை அதிக அளவில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தென் மாநிலங்களில் எம்பிக்கள் சீட்டுகள் குறைய வாய்ப்புள்ளது.
வடமாநிலங்களில் மக்கள் தொகை கணக்குப்படி எம்.பி.க்கள் சீட்டுகள் அதிகரிக்கப்படாது என சொல்ல அமித்ஷா தயாரா? வக்பு வாரிய சொத்துக்கள் அல்லாஹவுடைய சொத்துக்கள்.
அவற்றை அபரிக்கவே தற்பொழுது வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம்.
- தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
கே.கே. நகர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலை நடந்து 13 ஆண்டு கடந்த நிலையிலும் குற்றவாளி யார்? என்று தெரியவில்லை. பெரிய தலைவர்களின் நிலை இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
அரசுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றவைகளை மூடி மறைக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அனைத்தும் தி.மு.க.வின் அலுவலகம் போன்று செயல்படுகிறது.
நான் பெரியார் குறித்து பேசியதற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் என் மீது கொடுக்கப்படும் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
என் மீது பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான எல்லா வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் நீதிமன்றம் மதிப்பை இழந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல, கருத்து திணிப்பு. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதில் உண்மை உள்ளதா இல்லையா என தெரியவில்லை. அதில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளா அல்லது குற்றத்தில் தொடர்புடையவர்களா? என்பதை அரசு கூற வேண்டும்.
சவுக்குசங்கர் வீடு தாக்குதலுக்கு உள்ளானது. குற்றத்தை யார் புரிந்தார்? என்பது வெளிப்படையாகவே தெரியும். அதற்கு எதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த குற்றச்செயல்களை செய்துள்ளனர்.
இது பூனை தன் குட்டியை கவ்வதும், எலியை பிடிப்பதற்கு உள்ள வித்தியாசமாகும். எங்களை கடிக்கும் போது எலியை கடிப்பது போல் கடிக்கிறீர்கள். கொடுமையானவர்களே குற்றச் செயல்களில் உடந்தையானவர்களை பூனை குட்டியை கவ்வதை போல் பிடிக்கிறீர்கள்.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஒப்புக்காக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களது இயலாமை. அவர்களை பிடித்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
சங்கிலி திருடர்களை சுட்டு பிடிப்பதற்கு என்ன காரணம்? கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா?
குடித்துவிட்டு பாட்டிலை திரும்பி கொடுத்தால் பத்து ரூபாய், பாடையிலே படுத்துவிட்டால் 10 லட்ச ரூபாய், இது திராவிட மாடல் பாலிசி. வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வுசெய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்;
தனியார் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவரது குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.
இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






