search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மீனவர்கள்"

    • ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
    • விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    ராமேசுவரம்:

    கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    தென்மேற்கு வங்ககடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடற்பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ளது.

    இதன்காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையொட்டி மீன் வளத்துறை இன்று (சனிக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும் வரை ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பதாக அறிவித்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர், தேவி பட்டணம், சோளியக்குடி, தொண்டி ஆகிய துறை முகங்களில் இருந்து 1,650 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. கனமழை பெய்வதால் சாலையில் மழை நீர் தேங்காதவாறு ராமேசுவரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனுஷ்கோடி பகுதியில் இன்று வழக்கத்தை விட கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டதால் மணல்கள் சாலைகளில் பரவின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு இடையே மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறோம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் கடலுக்கு சென்று வந்த நிலையில் தற்போது மீன்பிடிக்க செல்வது குறைந்து வருகிறது. இதனால் மாதத்தில் 15 நாட்கள் வேலையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் வானிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    • 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

    அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ந்தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அடுத்ததாக கடந்த 9-ந்தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 பேரும் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் காத்திருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
    • தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இதேபோன்று தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வளைகுடா கடலோர பகுதியிலும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    அதில் குறிப்பாக சாயல்குடி, தாமரைக்குளம், உச்சிப்புளி, புதுமடம், பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சுந்தரமுடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த 8-ந்தேதி கடலுக்கு சென்றுவிட்டு 9-ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத்தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    • மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    கடந்த 14-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

    படகுகளை பறிமுதல் செய்த அவர்கள் மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்து மன்னார் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு வவுனியா மற்றும் யாழ்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினர் செயலை கண்டித்தும், மீனவர்கள் படகுகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினசரி ரூ.1 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறிய ரக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 12 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இதனால் அவர்கள் நவம்பர் 8-ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையிலும் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரவும் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் அச்சமின்றி கடலில் மீன்பிடித்து வரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    • ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது

    ராமேசுவரம்:

    இந்தியாவின் 2-வது நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.

    இங்கிருந்து விலையுயர்ந்த மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தொழிலால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களும் மற்றும் பலர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    தென் தமிழகத்தில் உள் கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    மற்ற கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இல்லாத சிக்கலை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி எதிர்கொண்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து அண்டை நாடான இலங்கை சில நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சில மணி நேரங்கள் கடலில் பயணித்தாலே சர்வதேச கடல் எல்லையை அடைந்துவிட முடியும்.

    சர்வதேச கடற்பகுதி என்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் இந்திய-இலங்கை கடல் எல்லையில் இருநாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வருவார்கள். இந்த சூழலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதும் அல்லது அவர்களை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை.

    ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம, மண்டபம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கை ராமேசுவரம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவிக்கின்றனர். ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீனவர்கள் ராஜா, எடிசன் ஆகியோர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மீன்பிடிக்க ஏற்ற ஒரே இடமாக ராமேசுவரம் இருந்து வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் தொந்தரவால் பாரம்பரிய இடத்தில் கூட மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீன்பிடிக்க ஏற்ற சூழல் இல்லாத நிலையில் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறோம்.

    மீன்பிடிக்க முடியாமலும், படகை இயக்க முடியாமலும் முடங்கிப்போய் உள்ளோம். ஒருமுறை கடலுக்கு சென்றால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும். அதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். தற்போது நடந்துவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் குடும்பம் நடத்த கடன் வாங்கும் சூழலில் இருக்கிறோம்.

    மேலும் மீன்பிடி தொழிலின் சார்பு தொழில்கள் அனைத்தும் முடங்கி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே கடலுக்கு செல்லும் எங்களுக்குரூ.5 வரை கிடைத்தது. தற்போது அந்த வருவாய் இன்றி தவிக்கிறோம். மறுபுறம் கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி இழப்புடன் தான் கரை திரும்பும் நிலை உள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களை போன்று குத்தகை அடிப்படையில் பாரம்பரிய இடத்தில் சிரமமின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீன்பிடி தொழிலை முறைப்படுத்தும் வகையில் படகுகளின் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை மீன்வளத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்.
    • மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று வீசியதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஒரு வாரமாக அந்தந்த துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார். இந்நிலையில் வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரம் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து நிலையில் இன்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகளவில் இறால் மீன்கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை உள்ளது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மீன்பிடி அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடலில் சூறைக்காற்று வீசுவதாலும், கடல் சீற்றம் குறையாததாலும் 2-வது நாளாக இன்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

    தடை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
    • கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து வாரத்தின் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்த பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இரவும் இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டினர். இன்று காலையும் ராமேசுவரம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசியது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசியது.

    இதையடுத்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.

    திடீர் தடை காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    திடீர் தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
    • பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திங்கட்கிழமை மீன்பிடிக்க செல்ல 412 படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்றனர். ஆனால் 250-க்கும் குறைவான படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.

    காற்றின் வேகம் அதிகளவில் இருந்த நிலையில் மீன்பாடு மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளதாக இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன் வரத்து குறைந்துள்ளதால் பல ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

    மேலும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும். மீன்பிடித்து விட்டு கரைக்கு வரும் நாட்களில் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் இன்று காலை வெறிச்சோடியே காணப்பட்டது.

    • அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.

    இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    ×