என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 10 ஆயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
- ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
- கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து வாரத்தின் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்த பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே ராமேசுவரம் தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இரவும் இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டினர். இன்று காலையும் ராமேசுவரம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசியது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசியது.
இதையடுத்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.
திடீர் தடை காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
திடீர் தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.






