search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம் வாபஸ்"

    • மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    கடந்த 14-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

    படகுகளை பறிமுதல் செய்த அவர்கள் மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்து மன்னார் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு வவுனியா மற்றும் யாழ்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினர் செயலை கண்டித்தும், மீனவர்கள் படகுகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினசரி ரூ.1 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறிய ரக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 12 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இதனால் அவர்கள் நவம்பர் 8-ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையிலும் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரவும் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் அச்சமின்றி கடலில் மீன்பிடித்து வரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    ×