search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்- துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டல்
    X

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்- துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டல்

    • அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.

    இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    Next Story
    ×