search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மீனவர்கள்"

    • 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி சிறைபிடிப்பதும், பல முறை விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 5 விசைபடகுகளையும் சிறை பிடித்தது. கைதான மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைதானது ராமேசுவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில், இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகிறார்கள். மேலும் நமது மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் படகுகளையும் அந்நாடு அரசுடமையாக்கி வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

    கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும் என்பதால் மத்திய அரசை தமிழக அரசும், மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது எழும் கோரிக்கைகளும், கோஷங்களும் பின்னர் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் இன்று யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, ஏப்ரல் 8-ந்தேதி ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் தினந்தோறும் நடைபெறும் கோடிக்கணக்கான அளவிலான மீன்பிடி தொழில் வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் இதேபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், உண்ணாவிரதமும் இருந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணமும் மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மற்றும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறை பிடித்து வருகின்றனர். மேலும் படகுகளை பறிமுதல் செய்வதுடன் மீனவர்களுக்கும் தண்டணை விதித்து வருகின்றனர்.

    இதனால் வாழ்வாதாரம் இழந்த ஏராளமான மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கானோரும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

    மீனவர்கள் சிறை பிடிப்பதை கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக ராமேசுவரத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளது. பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. இலங்கை கடற்படையை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 28-ந்தேதி முதல் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த நிலையில், வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற் போல் ராமேசுவரம் கடல் பகுதி இன்று காலை வழக்கத்தைவிட மாறுபட்ட நிலையில் காணப்பட்டது.

    இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலும், நடுக்கடலில் நங்கூரமிட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய நிலையில் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் சென்ற அவர்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    8 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் சூறைக் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர்.

    • மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
    • அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
    • மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 3 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது" என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.

    எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி காலை 492 விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட் (வயது 40), பெஸ்கர் உள்பட 23 பேரை சிறைப்பிடித்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று 23 மீனவர்களும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் மீதமுள்ள 3 பேரில் ராபர்ட், பெஸ்கர் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், மற்றொருவர் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அதேபோல் விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ராமேசுவரம் வருகை தந்தார். 20-ந்தேதி பிற்பகலில் வந்த அவர் அன்று இரவு ராமேசுவரத்திலேயே தங்கினார். மறுநாள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பிரதமரின் பயணம் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.

    ஆனாலும் விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக் கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து, இரண்டு விசைப்படகுகளுடன் 6 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் தவிக்கும் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர்.
    • தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. இதில், ராமேசுவரத்தில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது.

    நகராட்சி அலுவலகம் அருகே முனியசாமி கோவில் தெரு, நகராட்சி பொது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்துடன் வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று வங்க கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும். மேலும் புதன்கிழமை கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுங்களில் பாதுகாப்புடன் படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி 41, வாலி நோக்கம் 53 , கமுதி 53, பல்ல மோர்குளம் 12.20, முதுகுளத்தூர் 25.10, பரமக்குடி 28.30, ஆர்,எஸ்.மங்கலம் 21.40, மண்டபம் 45.60, ராமநாதபுரம் 88, பாம்பன் 63.90, ராமேசுவரம் 68.00, தங்கச்சிமடம் 91.00, தீர்த்ததாண்டதானம் 15.90, திருவாடானை 10.20, தொண்டி 14.60, வட்டாணம் 15.20 பதிவாகி உள்ளது.

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது.
    • விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்திலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக்கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் தற்போது மழை, காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக கடலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×