search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கும் குப்பை"

    • திருமங்கலம் நகராட்சியில் மக்கும் குப்பையில் உரம் தயாரித்து நகராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்.
    • 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து உரம் பதப்படுத்தப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது.

    அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

    இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டார்.
    • மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

    குப்பைகளை வகை பிரித்து, தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட உதவி செயற்பொறியாளர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் கீர்த்திவாசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உடன் இருந்தனர்.

    • திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
    • வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் ராமஜெயம் மேற்பார்வையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    இதனை நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் சாமிராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது
    • ஒரு கிலோ உரம் 1 ரூபாய்க்கு வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சில மாதங்களாக தொய்வுற்றிருந்த இப்பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

    ஒரு கிலோ சலித்தெடுத்த உரம், 5 ரூபாய்க்கும், சலித்தெடுக்காத உரம் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணியை காண்டிராக்டர் பாதியில் கைவிட்டதால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி இங்கு குவிந்துள்ள மக்காத குப்பைகள் முற்றிலும் அகற்றப்படும் பட்சத்தில் வளம் மீட்பு பூங்கா, விரைவில் நலம் பெறும்.அதேநேரம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவங்க வேண் டும் என்ற நோக்கில் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற பேரூராட்சியின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. மக்கள் பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பும் அமலுக்கு வந்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடம் பெறும் என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

    • 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
    • குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் .

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலி யார் இந்து மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் "என் குப்பை என் பொறுப்பு " என்ற தலை ப்பில் மாணவர்களுக்கு நெகிழி பையின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் போட்டித் தேர்வு நடை பெற்றது,சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் துவக்கி வைத்த இப்போட்டியில் 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் சீர்காழி நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

    நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் எனவே ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நமது சீர்காழி நகராட்சி தூய்மையான முதன்மை நகராட்சியாக மாறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • மக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    கும்பகோணம்:

    என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்துடன் திருப்பனந்தாள் பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கும்படி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    பேரூராட்சி சார்பில் தினமும், 2000 கிலோ மேல் குப்பை சேகரமாகிறது. குப்பையை ஒவ்வொரு வீடாக சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பொதுமக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என, தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை பேரூராட்சித் தலைவர் வனிதா ஸ்டாலின் துணைத் தலைவர் கலைவாணி சப்பானி தலைமையில், ஒவ்வொரு வீடாக சென்று, மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க உள்ள 15 வார்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நடன குழுவினர் கரகம் ஆடி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் தமிழக முதல்அமைச்சர் 'மீண்டும் மஞ்சள் பை' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் மஞ்சள் பையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் குருசாமி ரமேஷ் சுரேஷ் தருமதுரை கதீஜா மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • வீடு வீடாக மக்கும் குப்பையை பிரித்து வாங்கும் பணியை கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்.
    • ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என் நகரம் என் பெருமை எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் குப்பை தரம் பிரித்து பொதுமக்கள் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி கடலூர் குண்டு உப்பலவாடி பத்மாவதி நகரில் வீடு வீடாக சென்று தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்த மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். முன்னதாக கடலூர் உழவர் சந்தையில் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி முன்னிலையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மகாதேவன், மண்டலத் தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சசிகலா ஜெயசீலன், அருள்பாபு, சுபாஷ்ணிராஜா, கவிதாரகு, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ‌.

    ×