search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி சலோ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப்- அரியானா எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான மோதலின்போது சுப்கரண் சிங் மரணம்.
    • அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் "டெல்லி சலோ" என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

    இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு போலீசாரும் காயம் அடைந்தனர்.

    சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்றிரவு போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கனாரி ஜிந்து மாவட்டம் அருகில் உள்ளது. சுப்கரண் சிங் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்கரண் சிங் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது. மேலும், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

    விவசாயிகள் சங்கங்கள் டெல்லி சலோ பேரணியை தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் எல்லையில் அமர்ந்துள்ளனர். இன்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்.
    • பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானாவில் இருந்து டிராக்டர்கள் மூலம் புறப்பட்டனர். ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    அவர்கள் டெல்லி நோக்கி செல்வதை போலீசார் தடுத்ததால், போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர்.

    கடந்த புதன்கிழமை 21 வயதேயான விவசாயி சுப்கரண் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு போலீசார்தான் காரணம். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி வரை டெல்லி சலோ பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில் பஞ்சாப்- அரியானா எல்லைகளான ஷம்பு மற்றும் கனாரி ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

    மரணம் அடைந்த 21 வயதான சுப்கரண் சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
    • விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்படி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயத்தமாகினர்.

    டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. அதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயமுற்ற விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ஒரு விவசாயி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

    பஞ்சாப்-அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு சில கருத்துகளை பரிந்துரை செய்தது.
    • விவசாயிகள் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை நிராகரித்துள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டனர். இதற்காக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.

    அவர்களை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் போன்றவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு ஏஜென்சிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்வதற்கு அளவு நிர்ணயம் கிடையாது என மத்திய அரசு பரிந்துரை செய்தது.

     இது தொடர்பான ஆலோசனை நடத்தி முடிவை சொல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகிறது. பேரணி தொடரும் என விவசாயிகள் அறித்துள்ளனர்.

    இதனால் டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயற்சி மேற்கொள்வார்கள். அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

    • விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
    • தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால்தான் தீர்வு காணப்படும்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாப்-அரியானா, டெல்லி- பஞ்சாப், அரியானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

    விவசாயிகள் முன்னேற முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்கு பேரணி நடத்தும் வகையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இதனால் 2020-21 போராட்டம் போன்று நீடித்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது.

    இதனால் அவர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரிகளுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக சட்டம் நிறைவேற்றிட முடியாது என மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையும் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது, உக்ரைன்- ரஷியா போரின்போது 27 ஆயிரம் இந்தியர்கள் கங்கா ஆபரேசன் நடவடிக்கையின் கீழ் இந்தியா அழைத்து வந்தது, கோடிக்கணக்கான இந்தியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வந்தது என இதுபோன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள்தான். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதுதான்.

    மத்திய மந்திரிகள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் தொடரவில்லை.

    பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

    உலக வணிக அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா இருக்க அவர்கள் விரும்பவில்லை. இலவச வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார திருத்த மசோதாவிற்குள் கொணடு வரக்கூடாது என்கிறார்கள்.

    இதுதொடர்பாக நாங்கள் கமிட்டி அமைப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இல்லையெனில் வேளாண் மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியும் என்றோம். மாநிலங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். உங்களுடைய அதிகப்படியான கோரிக்கைகளை நாங்கள் சந்திக்கும்போது, பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும்.

    நாட்டிற்கு இழப்பிற்கு ஏற்படும் வகையில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பிரதமர் மோடி அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். எம்.எஸ்.பி. சட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    • டெல்லியில் பேரணி நடத்த அரியானாவில் இருந்து விவசாயிகள் புறப்பட்டுள்ளனர்.
    • அரியானா-பஞ்சாப் எல்லை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

    நேற்று அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், ஃபடேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பவும் தடைவிதிக்கப்படுகிறது.

    வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து நெட்வொர்க் தொடர்பான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது.
    • வேளாண்மை என்பது மாநில விவகாரம். மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

    விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.

    இந்நிலையில், இதுகுறித்து விவசாய சங்கங்களுடன் இரண்டு சுற்று போராட்டம் நடத்திய மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம். அவற்றை நிர்வாகமட்டத்தில் செய்து விடலாம். சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கிறது.

    வேளாண்மை என்பது மாநில விவகாரம். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் நாளைக்கு இதே நபர்கள், மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

    எனவே, அவசரகதியில் மத்திய அரசு சட்டம் கொண்டு வராது. என்ன மாதிரி சட்டம் கொண்டு வரலாம், அதன் சாதக, பாதகங்கள் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். அவசரகதியில் சட்டம் கொண்டு வந்தால், அது தோல்வியில் முடிந்து விடலாம்.

    எனவே, முதிர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் தேதியை சொல்ல வேண்டும். அப்போது பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

    அதை விடுத்து பிரச்சினை செய்வதுதான் தங்களது குறிக்கோள் என்று விவசாயிகள் செயல்பட்டால், அவர்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். விவசாயிகளுக்கிடையே சமூக விரோதிகள் கலந்து, அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. அவர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எல்லையில் கூடிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு.
    • நேற்று பேரணியை நிறுத்திய விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழைய முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

    விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

    அதன்படி நேற்று பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியை தொடங்கினர். ஆனால், 2020-21-ல் நடந்ததை போன்று நடந்து விடக்கூடாது என்பதால் பஞ்சாப், அரியானா எல்லையில் டெல்லி போலீசார் கடுமையான தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

    பேரணிக்கு புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டி அடித்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதும் விவசாயிகள் கலைந்து ஓடினர்.

    அத்துடன நேற்றைய பேரணி நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இந்த நிலையில் இன்று டெல்லி நோக்கி புறப்படுவோம். டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆறு மாத உணவு பொருட்கள் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பேரணி ஒன்றிரண்டு நாட்களில் முடிவடைய வாய்ப்பு இல்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திரும்பமாட்டோம் என அறிவித்துள்ளர்.

    கடந்த முறை 13 மாதங்கள் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • "டெல்லி சலோ" எனும் முழக்கத்துடன் விவசாயிகள் தலைநகருக்குள் செல்ல உள்ளனர்
    • மத்திய அமைச்சர்களுடன் விவசாய பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்

    புது டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் குறைந்த ஆதார விலை (Minimum Support Price) உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகள் பேரணியை நடத்தி, பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

    நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும்  காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர்.

    ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி.
    • நேற்று அரசுடன் நடைபெற்ற 6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் டெல்லியில் இன்று பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    அதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்றிரவு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அறிவித்தபடி பேரணி தொடங்கும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. அதனடிப்படையில் விவசாயிகள் ஷம்பு (பஞ்சாப்-அரியானா) எல்லையில் பேரணியை தொடங்கியுள்ளனர்.

    அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் ஃபட்டோகார்ஹ் சாஹிப் என்ற இடத்தில் இருந்து அம்ாபலா அருகில் உள்ள ஷம்பு எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

    திக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஷம்பு எல்லையில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.
    • டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர்.

    சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி நாளை (13- ந்தேதி) டெல்லியில் நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் இந்த விவசாயிகள் நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி போலீசார் சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்களை நகருக்குள் நுழைவதைத் தடுக்க ஆணிகள் மற்றும் தடுப்புகளை அமைத்து உள்ளனர். 

    மேலும், சாலைகளில் கிரேன், ஜேசிபி எந்திரங்கள் மூலம் பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். விவசாயிகளின் வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீசார் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×