search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பேரணி"

    • இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    ரேசன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப்- அரியானா எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான மோதலின்போது சுப்கரண் சிங் மரணம்.
    • அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் "டெல்லி சலோ" என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

    இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு போலீசாரும் காயம் அடைந்தனர்.

    சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்றிரவு போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கனாரி ஜிந்து மாவட்டம் அருகில் உள்ளது. சுப்கரண் சிங் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்கரண் சிங் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது. மேலும், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

    விவசாயிகள் சங்கங்கள் டெல்லி சலோ பேரணியை தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் எல்லையில் அமர்ந்துள்ளனர். இன்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்.
    • பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானாவில் இருந்து டிராக்டர்கள் மூலம் புறப்பட்டனர். ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    அவர்கள் டெல்லி நோக்கி செல்வதை போலீசார் தடுத்ததால், போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர்.

    கடந்த புதன்கிழமை 21 வயதேயான விவசாயி சுப்கரண் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு போலீசார்தான் காரணம். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி வரை டெல்லி சலோ பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில் பஞ்சாப்- அரியானா எல்லைகளான ஷம்பு மற்றும் கனாரி ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

    மரணம் அடைந்த 21 வயதான சுப்கரண் சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.

    போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.

    • 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற பெயரில் டெல்லி நகரில் பேரணி செல்ல முயன்றனர்.

    ஆனால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்களை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மத்திய அரசு விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்ட பருப்பு வகைகள், காட்டன், சோளம் உள்ளிட்டவைகளுக்கு ஐந்தாண்டுகள் குறைந்தபட்ச ஆதாய விலை வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

    ஆனால், விவசாயிகள் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை. நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எம்.எஸ்.பி.-க்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை விவசாயிகள் பட்ஜெட்டின் சுமையாக உருவாக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ஜிடிபி வளர்ச்சியின் உந்து சக்தியாக இருப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் "மோடியின் பிரசார இயந்திரங்கள், அவருக்கு சாதகமாக ஊடகங்களும் எம்.எஸ்.பி. குறித்து பொய்களை பரப்பி விட்டன. மத்திய அரசின் பட்ஜெட்டில் எம்.எஸ்.பி.க்கான சட்ட உத்தரவாதத்திற்கு சாத்தியமில்லை என்பது பொய்.

    CRISIL-ன் கருத்துப்படி 2022-23-ல் விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி. அளித்திருந்தால், கூடுதலாக 21 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சுமையைாக இருந்திருக்கும். இது மொத்த பட்ஜெட்டில் 0.4 சதவீதம்தான். இது உண்மை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான இந்த சிறிய அளவிலான செலவை மத்திய செய்ய மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    விவசாயத்துறையில் முதலீடு அதிகரிக்கும். கிராமப் பகுதிகளில் தேவை அதிகரிக்கும். விதவிதமான பயிர்களை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும். இது நாட்டின் செழிப்பிற்கு உத்தரவாதம். வதந்தி பரப்புவது டாக்டர் சுவாமிநாதன் மற்றும் அவரது கனவை இழிவுப்படுத்துவதாகும் என்றார்.

    • நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு சில கருத்துகளை பரிந்துரை செய்தது.
    • விவசாயிகள் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை நிராகரித்துள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டனர். இதற்காக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.

    அவர்களை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் போன்றவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு ஏஜென்சிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்வதற்கு அளவு நிர்ணயம் கிடையாது என மத்திய அரசு பரிந்துரை செய்தது.

     இது தொடர்பான ஆலோசனை நடத்தி முடிவை சொல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகிறது. பேரணி தொடரும் என விவசாயிகள் அறித்துள்ளனர்.

    இதனால் டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயற்சி மேற்கொள்வார்கள். அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

    • மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
    • நேற்றிரவு நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு, கருத்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். கடந்த வாரம் டெல்லியை நோக்கி செல்ல முடிவு செய்தனர்.

    ஆனால் விவசாயிகள் அரியானா, பஞ்சாப் மாநிலத்திலேயே நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கம் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடியும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு 8.15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றதாக தெகவல் வெளியாகியுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், சோளம் மற்றும் கதர் விளைபொருட்கள் அரசாங்க ஏஜென்சிகளால் குறைந்தபட்ச ஆதாய விலைக்கு வாங்கப்படும். கொள்முதல் செய்வதற்கான அளவுகோல் எதுவும் கிடையாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரிந்துரைத்துள்ளார்.

    ஆனால், விவசாயிகள் உடனடியாக அந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுடைய விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த இரண்டு நாட்களில் முடிவை சொல்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தேர் இதுகுறித்து கூறுகையில் "நாங்கள் இதுகுறித்து 19 மற்றும் 20-ந்தேதிகளில் வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்துவோம். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்றார்.

    • ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.
    • மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

    அவுரங்காபாத்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வருகிறார். ஒருநாள் ஓய்வுக்கு பிறகு, நேற்று பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் அவரது யாத்திரை நடந்தது.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கேட்டு டெல்லி நோக்கி செல்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக போராட்டத்தை மோடி அரசு நசுக்கி வருகிறது.

    போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கண்ணீர்புகை குண்டுகளை வீசுகிறார்கள். ரப்பர் தோட்டாக்களால் சுடுகிறார்கள். ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.

    ''நாட்டை காக்க எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களை போல், நீங்களும் எல்லையில் போராடுகிறீர்கள்'' என்று அவரிடம் சொன்னேன்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவோம்.

    அதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக எக்ஸ்ரே போன்றது. நாட்டின் சமூக, பொருளாதார நிலையை படம்பிடித்து காட்டும். நாட்டில் 70 சதவீதம்பேர், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    ஆனால், மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். 650 ஐகோர்ட்டு நீதிபதிகளில் 100 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.

    ஆகவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.

    மோடி அரசு பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், கிராமப்புற ஏழைகளுக்கான 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். சாமானியர்களை பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு.
    • டெல்லிக்கு செல்ல விடாமல் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக கடந்த 13-ந்தேதி (திங்கட்கிழமை) அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா மாநில அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.

    பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்ட நடத்திய நிலையில் டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே இரண்டு முறை (பிப்ரவரி 8-ந்தேதி மற்றும் பிப்ரவரி 12-ந்தேதி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அரியானாவில் நடைபெற்றது. இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 18-ந்தேதி (நாளைமறுநாள்) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது.
    • டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 13-ந்தேதி) புறப்பட்டனர்.

    விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் டீசல் உடன் புறப்பட்டனர். இதனால் டெல்லி எல்லையில் கடந்த 2020-2021-ல் ஏற்படுத்தியது போன்று இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதி அரியானா அரசு விவசாயிகள் டிராக்டரில் செல்லாத வண்ணம் சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-

    கோரிக்கைகளை எழுப்புவதற்கும், டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டும். கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை நான் அனைவரும் பார்த்தோம். விவசாயிகள் பல்வேறு எல்லைகளை ஆக்கிரமித்து பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.

    அவர்கள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும். விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும்.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
    • தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால்தான் தீர்வு காணப்படும்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாப்-அரியானா, டெல்லி- பஞ்சாப், அரியானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

    விவசாயிகள் முன்னேற முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்கு பேரணி நடத்தும் வகையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இதனால் 2020-21 போராட்டம் போன்று நீடித்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது.

    இதனால் அவர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரிகளுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக சட்டம் நிறைவேற்றிட முடியாது என மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையும் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது, உக்ரைன்- ரஷியா போரின்போது 27 ஆயிரம் இந்தியர்கள் கங்கா ஆபரேசன் நடவடிக்கையின் கீழ் இந்தியா அழைத்து வந்தது, கோடிக்கணக்கான இந்தியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வந்தது என இதுபோன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள்தான். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதுதான்.

    மத்திய மந்திரிகள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் தொடரவில்லை.

    பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

    உலக வணிக அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா இருக்க அவர்கள் விரும்பவில்லை. இலவச வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார திருத்த மசோதாவிற்குள் கொணடு வரக்கூடாது என்கிறார்கள்.

    இதுதொடர்பாக நாங்கள் கமிட்டி அமைப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இல்லையெனில் வேளாண் மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியும் என்றோம். மாநிலங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். உங்களுடைய அதிகப்படியான கோரிக்கைகளை நாங்கள் சந்திக்கும்போது, பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும்.

    நாட்டிற்கு இழப்பிற்கு ஏற்படும் வகையில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பிரதமர் மோடி அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். எம்.எஸ்.பி. சட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    • டெல்லியில் பேரணி நடத்த அரியானாவில் இருந்து விவசாயிகள் புறப்பட்டுள்ளனர்.
    • அரியானா-பஞ்சாப் எல்லை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

    நேற்று அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், ஃபடேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பவும் தடைவிதிக்கப்படுகிறது.

    வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து நெட்வொர்க் தொடர்பான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×