search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி"

    • தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை.
    • தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் சுமார் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் குரூப் 4 பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

    குறிப்பாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை. தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.

    எனவே தமிழக அரசு, குரூப் 4-க்கான பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் அரசுத்துறையில் பணி வழங்கவும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெ டுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு எழுதியவர்களால் கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு தி.மு.க. அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10,000 பேர் கூட தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

    நான்காம் தொகுதி பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி 761 ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது. எனவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்கவும், டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
    • காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், ஏழை, எளிய திறமையான இளைஞர்கள் அரசு வேலைக்கு வரும் வாய்ப்பு உருவாகும் என்றும், சமூக நீதி நிலை நாட்டப்படும் என்றும், இதன்மூலம் கட்சி வித்தியாசமின்றி ஊராட்சி செயலாளர்கள் செயல்படக்கூடிய நிலைமை உருவாகும் என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, பனகல் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

    காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய பணிவிதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர்.
    • கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதியம் தொடங்கிய தேர்வுக்கு சிலர் தாமதமாக வந்தனர். ஆனால் தேர்வு மைய இரும்பு கேட் மூடப்பட்டு இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தேர்வு மைய கேட் உடைக்கப்பட்டது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 147, 448,427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. இது தேர்வாணையத்திற்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது.

    ஆவின், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது. அப்போது கூட அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பணிச்சுமை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன?

    டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
    • விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும்.

    சென்னை:

    கடந்த 1996-97-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, பட்டியலினத்தவர் சாதிச்சான்று பெற்றிருந்தார்.

    பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றை சமர்ப்பிக்கும்படி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், திலகவதி அமர்வு, பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.

    அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய கூறும்.

    அதேசமயம், ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதன் மீது விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும்.

    இந்த குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.

    • முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டது.

    சென்னை:

    குரூப்-1 பதவிகளில் வரும் 18 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிக வரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

    முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. ஹால்டிக்கெட்டை வழங்கியது. இவர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டது.

    மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டனர். ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன் பிறகு, மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டது. அந்த மாதத்திலாவது தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

    அதன்படி, 92 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளமுடியும் என்றும், தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

    ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதியதில், ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அந்த பட்டியலில் 2 ஆயிரத்து 162 பேர் இடம் பெற்று இருக்கின்றனர்.

    முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களை அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் 92 பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 162 பேர் போட்டியிட உள்ளனர்.

    முதன்மை தேர்வை பொறுத்தவரையில், வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள், அதற்கடுத்தபடியாக நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறும் தேர்வர்களுக்கு தகுந்த பணியிடங்கள் வழங்கப்பட உள்ளன.

    • குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும்.
    • குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    இதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    • காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-4 நில அளவையாளர் பதவிக்கு நடத்திய தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒரே மையத்தில் 700 பேர் தேர்வானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதோடு முறைகேடு நடந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். தலைவர் முனியராஜன் (பொறுப்பு), உறுப்பினர்களுடன் பாரிமுனையில் உள்ள அலுவவலகத்தில் விவாதித்தார்.

    தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • 2011-ம் ஆண்டில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவின்போதும் பல்வேறு முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.
    • டி.என்.பி.எஸ்.சி. இன்று அல்லது நாளை வெளியிடும் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்டு உள்ளிட்ட குரூப் 4 பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு நடத்தியது.

    இந்த தேர்வு முடிவை 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 24-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய இந்த தேர்வு முடிவில் தென்காசியை சேர்ந்த ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

    அதேபோல் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை, தேர்வர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன.

    இதை ஒப்பிட்டு பார்த்தபோதுதான், சில பயிற்சி மையங்களில் படித்து தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது நிதியமைச்சர் பழனிவேல் விரிவான விளக்கம் அளித்தது மட்டுமின்றி விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் ஆணைய கூட்டம் நாளை கூடுகிறது.

    இதில் குரூப்-4 தேர்வில் எந்தெந்த தேர்வு மையங்களில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற பட்டியலை வைத்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் குரூப்-4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என கூறி ஏராளமான தேர்வர்கள் பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் கூறுகையில், எங்களுக்கு எந்தவித அடிப்படை காரணங்களும் இல்லாமல் தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஓ.எம்.ஆர்.ஷீட் மதிப்பீடு செய்ய தகுதியற்றது என ஆன்லைனில் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தேர்வாணையத்தில் விசாரித்தபோது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விதிப்படி கட்டாய தமிழ் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்பதால் அந்த வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தோல்வி அடைந்திருந்ததால் அவர்களது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று காரணம் கூறினார்கள். இதனால் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ஏராளமான தேர்வர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அரசு தரப்பிலும், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு தவறு நடந்துள்ளது என்பது தெரியவரும்.

    ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    அதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவின்போதும் பல்வேறு முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக 13 பேர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கேள்வித்தாள்கள் லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.

    எனவே இப்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியான போதும் ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் வெற்றி பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுமக்களின் சந்தேகத்திற்கான விரிவான விளக்கத்தை டி.என்.பி.எஸ்.சி. இன்று அல்லது நாளை வெளியிடும் என தெரிகிறது. அப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டு இருப்பதாக நிதி அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து இருக்கிறார்.
    • விளக்கம் கேட்பது என்பதைவிட விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரிய அளவில் என்று பார்த்தால், குரூப் 2, 2-ஏ பதவிகளுக்கான 5,500 பணியிடங்களுக்கும், குரூப் 4 பதவிகளுக்கான 10,000 பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வரவில்லை.

    இதன் தொடர்ச்சியாக, அண்மையில் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற சந்தேகம் இளைய சமுதாயத்தினரிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் முடிவுகளை அறிவித்து பணியாளர்களை நியமிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உண்டு. ஆனால் தொடர் குளறுபடிகள் நடைபெற்று வருவது வேதனைக்குரியது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டு இருப்பதாக நிதி அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து இருக்கிறார். விளக்கம் கேட்பது என்பதைவிட விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பொழுதுதான் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×