என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தேர்வு மைய கேட்டை உடைத்து புகுந்த 60 பேர் மீது வழக்கு
- தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர்.
- கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதியம் தொடங்கிய தேர்வுக்கு சிலர் தாமதமாக வந்தனர். ஆனால் தேர்வு மைய இரும்பு கேட் மூடப்பட்டு இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தேர்வு மைய கேட் உடைக்கப்பட்டது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 147, 448,427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






