search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panneerselvam"

    • நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.
    • தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2006-ஆம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அம்மா. ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது, நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும், அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாலாற்றில் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அம்சம் என்னாச்சு, இதற்கு முன்பு ஆந்திர அரசிடம் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, இப்போது தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டியப் பிறகும், நிதி ஒதுக்கிய பிறகும் தமிழக அரசின் நிலை என்ன என பல கேள்விகளுக்கு பதில் என்னவென்றால் தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
    • காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், ஏழை, எளிய திறமையான இளைஞர்கள் அரசு வேலைக்கு வரும் வாய்ப்பு உருவாகும் என்றும், சமூக நீதி நிலை நாட்டப்படும் என்றும், இதன்மூலம் கட்சி வித்தியாசமின்றி ஊராட்சி செயலாளர்கள் செயல்படக்கூடிய நிலைமை உருவாகும் என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, பனகல் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் பணிவிதிகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

    காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய பணிவிதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதம் இந்திய தேர்தல் கமிஷன் வழங்கிய முகவரியின் அடிப்படையில் தான் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க. இரு அணியாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வை வழிநடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போதுவரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம், தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனையும் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக 'ரிமோட்' வாக்குசாதனம் குறித்து விளக்குவதற்காக தேர்தல் கமிஷன் வரும் 16-ந்தேதி அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி உள்ளது. இதில் பங்கேற்கும் படி 2 பிரதிநிதிகளை அனுப்பும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.

    இதுபற்றி தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததும் அந்த கடிதத்தை வாங்க வேண்டாம் என்றும் அதை மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கூறிவிட்டார். அதன்பேரில் தலைமை கழக நிர்வாகிகள் அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

    இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கருத்து கேட்டபோது, 'இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அரசியல் பின்னணி காரணமாக யாரையோ திருப்திபடுத்த இப்படி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்றும் இல்லாத பதவியை குறிப்பிட்டு கடிதம் வந்தால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அதை வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையை தமிழக தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து இருப்பது தெளிவாக உறுதியாகி இருக்கிறது.

    இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார்கள்.

    • அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.
    • அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.

    சென்னை:

    சட்ட சபை கூட்டத்தில் இன்று பங்கேற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட சபை கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சட்ட விதிகளை திருத்தியதை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. ஜனநாயக கடமையாற்ற நான் சட்டமன்றத்திற்கு வந்தேன் சட்டமன்ற இருக்கைகள் மாற்றப் படாமல் உள்ளது குறித்து கடிதம் எழுதியவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அலுவல் ஆய்வுக்குழுவில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்.

    சட்ட சபையில் எதிர்க் கட்சி துணைத் தலைவராக என்னை அங்கீகாரம் செய்துள்ளதை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன். அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.

    இந்த விதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தற்போது விதிகள் மாற்றப் பட்டுள்ளன. தலைமை பதவிக்கு வர 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இது 1.5 கோடி தொண்டர்கள் மனதிலும் நீங்காத வடுவாக உள்ளது. இந்த மாற்றங்களை செய்தவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில், பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்தது இந்த இயக்கம்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அ.தி.மு.க. சட்ட விதியை மாசு படாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம். அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும் கட்டி காப்பாற்றும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம். அ.தி.மு.க. சட்ட விதி அபாயகரமான சூழலாகும். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK

    தேனி:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய - மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எதுவும் கூற முடியாது. கூட்டணி குறித்து உடன்பாடு ஏற்பட்டவுடன் அறிவிக்கப்படும். எங்களிடம் பல்வேறு கட்சியினர் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திரும்ப வர வேண்டும். இதற்கான ஞானம் அவர்களுக்குத்தான் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் கூறாமல் சென்று விட்டார்.

    முன்னதாக தேனியில் நடந்த அரசு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழகத்தில் 14 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. தற்போது 6 லட்சம் வீடுகளை கட்டிடங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேனி மாவடடத்தில் 4 ஆயிரம் குடிசை வீடுகள் ஒரு வருடத்தில் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றித்தரப்படும்.

    ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.11 லட்சம் ஆகும். பயனாளி மற்றும் மத்திய அரசின் பங்கு தலா ரூ.1.50 லட்சம் தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் வழங்கப்படும். நீண்ட நாட்கள் பயனளிக்கும் வகையில் தமிழகத்தில் பெண்கள் ஒவ்வொருவருக்கும் நலத்திட்ட உதவிகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அதே வழியில் தற்போது அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பெண்கள் ஆதரவு எப்போதும் தமிழக அரசுக்கு உண்டு.

    இவ்வாறு அவர் பேசினார். #OPS #ADMK

    மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக்கூட்டம் கண்துடைப்பு நாடகம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPS #MKStalin

    மதுரை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு கட்சியை தொடங்கி 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். அவரது ஆட்சியை அகற்ற முடியவில்லை. அவருக்குபின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 16 வருடம் முதல்-அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் 28 வருடம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. இது எப்படி திடீர் ஆட்சி என்று கூற முடியும்.

    தற்போது மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தி, மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

    ஆனால் இன்று திடீரென கிராம சபை கூட்டம் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வர், அமைச்சர் பதவி வகித்தபோது ஏன் நடத்தவில்லை. இது ஒரு கண்துடைப்பு நாடகம். தேர்தலை மனதில் கொண்டு மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முறைப்படி பேசி வருகிறோம். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPS #MKStalin

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். #EdappadiPalaniswami #OPanneerselvam

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன் பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அ.தி.மு.க. என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு வரலாற்றுச் சிறப்புகளைச் சேர்த்திடும் வகையில், கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சாதனைத் திட்டங்கள் பலவற்றைப் படைத்தவர் நம் அம்மா.

    அம்மாவின் நம்பிக்கையை, கழக உடன் பிறப்புகளின் பூரண நல்லாசியோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எதிரிகளின் சூழ்ச்சிகளையும், துரோகிகளின் சதிகளையும் உடைத்தெறிந்து, அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எவராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

    அம்மா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். புரட்சித் தலைவரைப் போல, அம்மாவைப் போல, விசுவாசத் தொண்டர்களாகிய நாமும் தமிழக மக்களுக்காக நம்மை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடுதான் இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000/ ரூபாய் பொங்கல் பரிசாக அம்மாவின் அரசு வழங்கியது.

    புரட்சித் தலைவர் வாரி வாரிக் கொடுத்தவர். அம்மா அள்ளி அள்ளிக் கொடுத்தவர். நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள். அதனால் தான் நாமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த் தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம்.

    எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத் தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழ் நாட்டில் தொடர்ந்து கழக ஆட்சிதான் என்பதை உண்மையாக்கிக் காட்ட வேண்டும்.

    தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. மட்டும் தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நம் கண் முன்னே பாராளுமன்றப் பொதுத் தேர்தல் என்ற களம் தெரிகிறது.

    புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், அம்மா வகுத்துத் தந்த வெற்றிப் பாதையில் எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம்.

    அதற்காக அனைவரும் அயராது உழைப்போம்; ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். வெற்றிக்கனி பறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்கள் என்றுமே வெற்றி வீரர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். இதையே புரட்சித் தலைவரின் பிறந்த நாள் சபதமாக எடுப்போம்; நினைத்ததை முடிப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #OPanneerselvam

    ஓ.பன்னீர்செல்வம் தம்பி கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார். #ADMK #OPSbrother #MinisterJayakumar
    சென்னை:

    சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதற்கு காரணமான ரத்த வங்கி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கலெக்டர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மருத்துவ தொழில்நுட்பம் மூலம் எச்.ஐ.வி. கிருமியின் தாக்கம் அந்த பெண்ணின் உடலில் முழுமையான அளவு பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சிக்கல்கள் மீண்டும் வராமல் இருக்க ரத்த வங்கிகளில் உள்ள அனைத்து ரத்தமும் மறுபரிசோதனை செய்யப்பட்டு, எச்.ஐ.வி. கிருமி கலக்காத ரத்தம் என்று குறிப்பிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஒருவரை கட்சியில் இருந்தும் நீக்கம் செய்த மறுநாளே அவர் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கி, அது கட்சிக்கு திருப்தி அளித்தால் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார். இதில் காலக்கெடு எதுவும் கிடையாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் காலையில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாலையில் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்திருக்கிறது. இதேபோல் எம்.ஜி.ஆர். காலத்திலும் நடைபெற்று இருக்கிறது.

    ஒருவர் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் போது, அண்ணா சொன்னது போல் “மன்னிப்போம், மறப்போம்” என்ற அடிப்படையில் எதுவும் மன்னிக்கக்கூடியதும், மறக்கக்கூடியதும் தான். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா வருத்தம் தெரிவித்ததை அடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் எதற்காக நீக்கம் செய்யப்பட்டார் என்பது உட்கட்சி விவகாரம். எல்லா கட்சியினரும் பின்பற்றுவதை தான் நாங்களும் பின்பற்றினோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றியதை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.



    உயர் மின்கோபுரம் அமைக்கும் விஷயத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் முக்கியம். எல்லோருக்கும் மின்சாரம் வழங்குவதும் முக்கியம். எனவே பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நல்ல முடிவை அரசு எடுக்கும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகளாக ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர். ஜெயலலிதாவின் வீட்டுப்பக்கமும், நாடாளுமன்றம் பக்கமும் போகக்கூடாது என்று கூறி விரட்டப்பட்டார்.

    எதற்காக டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டார் என்பதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரிய நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். டி.டி.வி.தினகரன் அன்றைய காலத்தில் ஜெயலலிதாவையே ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்து ராஜதுரோகம் கூட செய்து இருக்கலாம். இது போன்ற அரசியல் துரோகிகளுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPSbrother #MinisterJayakumar
    தினகரனை ரகசியமாக சந்தித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    சென்னை:

    டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டி.டி. வி.தினகரனை பார்த்ததில் தவறு கிடையாது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் வந்து பார்த்ததுதான் தவறு என்கிறோம்.

    ஏனென்றால் டி.டி.வி. தினகரன் எங்களோடு கலந்து பேசிய பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தன்னோடு இருந்த கே.பி. முனுசாமி, மைத்ரேயன், பி.எச். பாண்டியன் ஆகியோரிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

    அதுமட்டுமல்ல இந்த விசயத்தை இதுவரையிலும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இது தெரியாமல் கே.பி.முனுசாமி நேற்று மதியம் வரை தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். அது கட்டுக்கதை என்று அப்பாவித்தனமாக கூறி வந்தார். அவரது முகத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் கரியை பூசி விட்டார்.


    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    அவரை நம்பிய மத்திய மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இனிமேல் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கமாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தோடு தர்மயுத்தம் நடத்துவதாக வெளியில் பேசிக் கொண்டு உள்ளுக்குள் ரகசியமாக வந்து சந்தித்து பேசுவதால் அவரது இரட்டை வேடத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே டி.டி.வி.தினகரன் இந்த விசயத்தை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #ADMK #MLABose #EPS #OPS
    மதுரை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ். உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் ஆபரேசன் செய்து கொண்டார். கடந்த வாரம் மதுரை திரும்பிய ஏ.கே.போஸ் ஜீவாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஏ.கே.போசுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர மாரடைப்பு காரணமாக ஏ.கே.போஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 70.

    ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிற்பகல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்; கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர்; தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



    அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன், நீதிபதி, கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஏ.கே.போஸ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

    ஜெயலலிதாவால் பாராட்டப்பட்ட ஏ.கே.போஸ் கடந்த 2006 முதல் 2011 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்ந் தெடுக் கப்பட்டார்.

    இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன், சங்கர் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். #ADMK #MLABose #EPS #OPS
    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #Panneerselvam

    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ராமேசுவரம் வந்தார்.

    அப்துல்கலாம் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வருவேன். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    அப்துல்கலாம் நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம் என உறுதியேற்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நியாயமான தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு கவிழும். அது விரைவில் நடக்கும். அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Panneerselvam

    எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இப்போது தர்மயுத்தம் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #OPS #EPS
    மதுரை:

    மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வினர் பேசுகின்ற போது பா.ஜ.க. மட்டும்தான் பரிசுத்தமான கட்சி, அதில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் முதல் பெரிய பதவியில் உள்ளவர்கள் வரை தேவதூதர்கள் போன்று, விவாதத்தின்போதும், பொது மேடைகளில் பேசுகின்ற போதும் பார்க்கலாம். அவர்களுக்கு மட்டும்தான் கொள்கை சித்தாந்தம் இருப்பது போன்றும், மற்ற கட்சிகளுக்கு எல்லாம் சாக்கடைகளில் இருந்து வந்தது போன்றும் பேசுகிறார்கள்.

    ஒரு அமைச்சரின் உறவினருக்கு ராணுவ ஹெலிகாப்டர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு நிர்மலா சீதாராமன் தான் பதில் சொல்ல வேண்டும்.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில்தான் டெல்லி போனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    எடப்பாடி பழனிசாமிக்கும்- ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இப்போது தர்மயுத்தம் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    பதவி இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. முதலமைச்சர் பதவி வழங்கியவர்களுக்கே துரோகம் செய்தவர்கள், மற்றவர்களுக்கு துரோகம் செய்திட எவ்வளவு நாளாகும்.

    அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொது நலத்திற்கு சொன்னதை, சுயநலத்திற்காக பயன்படுத்தும் அளவுக்கு போயிருப்பதுதான் இன்றைய நிலை. இந்த ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் பா.ஜ.க. வேறு வழியின்றி மழுப்பல்தான் சொல்ல முடியும். ஏர் ஆம்புலன்சை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்? அது தவறு அதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 6, 7 மாதத்தில் தேர்தல் வரும்போது இதற்கான விடைகள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

    பா.ஜ.க.விற்கு பயந்து பொதுச்செயலாளரையும், என்னையும் கட்சியை விட்டு ஒதுக்கினார்கள். நான் யாரையும் மிரட்டும் சுபாவம் கிடையாது. இவர்கள் சோதனை பயத்தினால் என்னை ஒதுங்க சொன்னார்கள். அவர்களுக்குதான் இப்போது இந்த நிலைமை வந்திருக்கிறது.

    ஆர்.கே.நகர் தேர்தலில் என்னோடு ஆட்டோவில் தொங்கிக் கொண்டு ஓட்டு கேட்டவர்கள், தேர்தல் ஆணையத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்று அபிடவிட் வழங்கியவர்கள் திடீர் என்று மாற வேண்டிய அவசியம் என்ன?

    இனி இவர்கள் நிலைமை போணியாகாது என்பதால் இவர்களை பா.ஜ.க.வினர் கழட்டி விடுகின்றனர்.



    எங்களை மக்கள்தான் கைதூக்கி விட வேண்டுமே தவிர, வேறுயாரும் எங்களை கைதூக்கி விட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அம்மா வழி வந்த உண்மைத் தொண்டர்கள், கட்சித் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தால்தான் அதுதான் எங்களுக்கு நிரந்தர ஆதரவு. மாயக்கரங்கள் எல்லாம் உதவி செய்தால் மக்கள் எங்களை நிராகரித்து விடுவார்கள்.

    18 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பில் நீதி எங்களுக்கு கிடைக்கும். நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

    பாராளுமன்றத்தில் 28 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதற்காகத்தான் கவனிப்பதற்காக தங்கமணியும், வேலுமணியும் டெல்லி சென்று வந்தார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    இதுபோன்றதொரு அரசு தமிழகத்திற்கு தேவையா? இதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? அம்மா போன்ற எவ்வளவு பெரிய ஆளுமை. தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்காத ஆளுமை பெற்ற ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இதுபோல் நடந்து கொள்வதற்கு பெயர் என்ன? இது துரோகம். அதனால்தான் இந்த ஆட்சி போக வேண்டும் என்கிறேன்.

    நான் முதலமைச்சர் ஆவதற்காக அல்ல. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பு அலைகள் இருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

    ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற முடியாது என்று சொன்னவர்கள், தினகரன் பின்னால், கட்சியில்லை, எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்று சொன்னவர்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் யோசித்தார்கள். எங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைத்தார்கள். துரோகத்திற்கு எதிராக எங்களுக்கு வாக்களித்தார்கள்.

    சட்டமன்றத் தேர்தல் வந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நான் சொல்வது நடக்கும். டி.டி.வி.தினகரன் என்கிற நபரின் ஆயுட்காலம் இருக்கின்றவரை என்னால் அந்த கட்சியோடு (பா.ஜ.க.) செல்ல முடியாது. காரணம் தமிழகத்தில் மதவாதத்திற்கு இடமில்லை. தனிப்பட்ட முறையில் விரோதம் எல் ம் கிடையாது. எங்கள் கொள்கைக்கும், அவர்களது கொள்கைக்கும் ஒத்துவராது.

    எந்த பலன் கருதியும், வெற்றி, தோல்வியை வைத்து அரசியல் ஆதாயத்திற்காக கூட்டு செல்பவன் அல்ல என்று தெளிவாக சொல்லி விட்டேன்.

    உண்மையிலேயே மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால், இங்கு நடக்கும் ஆட்சியை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருகிறார்களோ, அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக அமையும். எந்த மாயக்கரங்களும் எங்களுக்கு தேவையில்லை. மக்களின் ஆதரவு இருந்தால் போதும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDinakaran #OPS #EPS
    ×