search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமை சாலை"

    சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், வனப்பகுதிகள் கையகப்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள், பள்ளி கூடங்கள், 8 மலைகளும் உடைக்கப்படுகிறது.

    இதனால் பல ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரங்களாக உள்ள விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பை மீறி 36 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழி சாலை அமைப்பதற்கான நில அளவீடு ஜூன் மாதம் நிறைவு பெற்றது. 2-ம் கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மண் பரிசோதனை மற்றும் மலையை குடைந்து சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 8 வழி சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக விவசாய சங்கத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் பாதிக்கப்படும் விவசாயிகளும் பங்கேற்பதால் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் யாராவது போராட்டத்தை தூண்டி விடுகிறார்களா? என்று உளவுத்துறையினர் மீண்டும் கிராமங்களில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அயோத்தியாப்பட்டினத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

    தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் சேலத்தில் நேற்று மாலை நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தடையை மீறி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநில துணை தலைவர் இந்திரஜித் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு நிள அளவீடு பணிகள் நடந்த போது சேலத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. அப்போது போராட்டத்தை தூண்டியதாக சிலர் கைது செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யப்பட்டது. அதனால் போராட்டம் குறைந்தது.

    இந்தநிலையில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    நடை பயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசும் மாநில அரசும் 8 வழி பசுமை சாலையை சென்னையிலிருந்து சேலம் வரை அமைக்க உள்ளது. இந்த சாலை தேவையற்றது. சாலை அமைப்பதற்காக நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக ஆண்களையும் பெண்களையும் விரட்டுகின்றனர். தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பை நடத்துகின்றனர். இந்த சாலைக்காக மலைவளம், நிலவளம், வன வளம் மற்றும் மரங்கள் எல்லாம் அழித்து எதற்காக சாலை அமைக்க வேண்டும்.

    வனங்களை அழித்து இந்த சாலையை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சாலையால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட போவதில்லை. தொழிற்சாலைகளும் புதிதாக அமையப் போவதில்லை.

    தமிழகத்தில் 50,000 சாலைகள் போடப்பட்டுள்ளதாக சட்ட மன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். சாலை போட்டால் தொழிற்சாலை வந்துவிடும் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்று சொல்லுவது ஏமாற்று வேலை. தவறான கருத்துக்களை சொல்லி மக்களை ஏமாற்றி சாலைகளை போடுகின்றனர்.

    இந்த சாலை திட்டத்திற்காக ஒரு கிலோ மீட்டருக்கு சராசரியாக 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த அளவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு சாலை எங்கும் அமைக்கப்படவில்லை. இந்த சாலை தங்கத்திலா அமைக்கபட உள்ளது.

    மத்திய மாநில அரசுகளின் இந்த மோசமான போக்கை கண்டித்து இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் அறிவித்து உள்ளோம். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கின்றது ஏன் என்று தெரியவில்லை.

    போலீசாரின் உத்தரவுக்கு உட்பட்டு அமைதியாக சாலை ஓரத்தில் நடக்கிறோம். அமைதியான முறையில் மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் வகையில் நடைபெறும் இந்த நடை பயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    திருவண்ணாமலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். #GreenWayRoad #Farmersprotest

    திருவண்ணாமலை:

    சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கு விவசாயிகள் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறிகொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் நடைப்பயணம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் அங்கு திரண்டனர்.

    நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. தடையை மீறி கம்யூனிஸ்டு கட்சியினர் நடை பயணயத்துக்கு ஆயத்தமாகினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, ஏ.டி.எஸ். பிக்கள் அசோக்குமார், வனிதா, டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

     

    நடைபயணம் சென்ற கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

    நடை பயண தொடக்க விழா பகுதியை சுற்றிலும் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். நடைபயண குழுவினர் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு அமைக்கப்பட்ட மேடையில் சென்னை, மதுரை, சேலம், கன்னியாகுமரி கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன அதில் 8 வழிச்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் பாடப்பட்டன.

    இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நடைபயணத்துக்கு புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி இல்லை இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

    இதனால் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட 500க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #GreenWayRoad #Farmersprotest

    8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #GreenWayRoad #Farmersuicide

    செங்கம்:

    ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் அழிக்கப்படுகிறது. பசுமையை அழித்து பசுமை சாலையா? என விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

    5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு குறியீடு கற்கள் நடப்பட்டன. சோறு போடும் நிலத்தை கொடுக்க விரும்பாமல் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் அடக்குமுறையால் விவசாயிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு சின்ன பாப்பா என்ற மனைவி, ஆனந்த், அன்பழகன் என்ற 2 மகன்கள், சங்கீதா என்ற ஒரு மகள் இருக்கிறார்கள். சேகருக்கு வீடு, பாசன கிணற்றுடன் 3 ஏக்கர் நிலம் உள்ளது.

    பசுமை வழி சாலைக்கு சேகரின் விவசாய நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் பறிபோனதால் அவர் மனமுடைந்தார். என் உயிரே போனாலும் விளை நிலத்தை விட்டு தரமாட்டேன் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி வேதனைப்பட்டார். நேற்று மாலை திடீரென வி‌ஷம் குடித்து சேகர் தற்கொலை செய்து கொண்டார்.

    மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenWayRoad #Farmersuicide

    ரூ 3200 கோடி செலவில் சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி புலிக் குன்றம் வன்பகுதி அழிக்கப்படுகிறது. #Greenwayroad

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து சார்பில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது. விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் இந்த சாலைக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அனைத் தையும் மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை பசுமை வழிச் சாலை அமைத்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை - சித்தூருக்கு ரூ. 3,200 கோடி செலவில் பசுமை வழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 126 கிலோ மீட்டர் தூரத் துக்கு இந்த சாலை அமைக் கப்பட உள்ளது. இதற்காக புலிக்குன்றத்தில் 32 ஹெக் டேர் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 43 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலம் சித்தூரில் 83 கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப் படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை ரூ. 3,200 கோடி செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பு பணிக்காக புலிக் குன்றம் வனப்பகுதியில் 32 ஹெக்டேர் நிலம், சாலை யோரம் உள்ள பகுதியில் 886 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.

    64 சதவீதம் விவசாய நிலம், 15 சதவீதம் தரிசு நிலம், 10 சதவீதம் வனப் பகுதி நிலம் வழியாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப் படுகிறது.

    மத்திய-மாநில அரசு களின் அனுமதியின் பேரில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

    இந்த பசுமை வழிச்சாலையால் சென்னை - ஆந்திராவுக்கு கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து எளிதில் நடைபெறும் துறை முகங்களுக்கு சரக்குகள் ஏற்றி இறக்கி செல்லும் பணிகள் விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம் என்று நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #Seeman

    சேலம்:

    சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கைது செய்து சிறைபடுத்துவதன் மூலமாக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகின்றனர். நாங்கள் மக்களை சந்திக்கத்தான் போகிறோம். அரசே கருத்து கேட்கிறது. மாவட்ட கலெக்டரிடம் மக்கள் வரிசை வரிசையாக நின்று கருத்து சொல்கிறார்கள். நாங்களும் அதுபோல பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்கள் தான் கேட்கிறோம். முதல்-அமைச்சர் 90 சதவீத மக்கள் எங்களுக்கு விரும்பி நிலத்தை தந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். 90 சதவீத மக்கள் நிலத்தை தந்து விட்ட பிறகு, நாங்கள் மக்களை சந்திக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்.

    மக்களை நாங்கள் சந்திக்கும்போது அவர்களுடைய குறைகளை கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறார்கள். இது தான் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் வைத்து என்னை கைது செய்வதன் மூலம் மக்களுக்கு அச்சுறுத்தலை விடுகிறார்கள். மறைமுக மிரட்டலை விடுகிறார்கள். நேற்று சிறைபிடித்து இன்றைக்கு பிணையில் விடுகிறார்கள் என்றால் இது அவசியமற்ற ஒரு கைது. இந்த சிறைபிடிப்பு அவசியமற்றது என்று கருதியதால் தான் நீதிபதி விடுதலை செய்தார்கள். காரணமற்ற கைது.

    ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே இவ்வளவு சாலைகள் இல்லை. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க ஏற்கனவே 6 வழி கிருஷ்ணகிரியில் இருக்கிறது. 4 வழி சேலத்தில் இருக்கிறது. ரெயில் வண்டி பயணம், விமானம் பயணம் இருக்கிறது. எனவே சேலத்திற்கு ஏன் வேக பயணமாக 8 வழி சாலை போட வேண்டும் என சிந்திக்கிறார்கள். வேகமாக போய் நாங்க என்ன செய்ய போகிறோம்.

    கேள்வி: 8-வழிச்சாலை தொழிற் வளர்ச்சிக்கு அவசியம் என்று சொல்கிறார்கள்?

    பதில்: காரை பற்றி கவலைபடுகிறார்கள். ஏன்? நீர், சோறு பற்றி கவலைப்படவில்லை. 10 ஆண்டுகள் கழித்து கார்களின் எண்ணிக்கை கூடிவிடும் என்று சொல்கிறார்கள்.130 கோடி மக்கள் இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் கழித்து மக்கள் மக்கள் தொகை கூடிவிடும். அவர்களுக்கான நீர், சோறு?. இதை பற்றி சிந்திக்கமாட்டேங்கிறிங்க.


    தொழிற்சாலையா அரிசி, பருப்பு உற்பத்தி செய்யும்?, காய்கறி விற்கும்?. இது என் நிலத்தில் இருந்து தான் வரணும். நிலத்தை எடுத்துவிட்டு பணத்தை தாறேன் என சொல்கிறீர்கள். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன். அரிசி, பருப்பு வாங்கி சாப்பிடுவேன். இது எங்கிருந்து வரும். என் நிலத்தில் இருந்து வரும். இதைத்தான் என் நிலம் கொடுக்கிறதே.

    நீங்கள் தொழில் வளர்ச்சி என்று எதை சொல்கிறீர்கள்?. தனியார் நிறுவனங்கள் கார் தயாரிக்கிறது, மொபைல் தயாரிக்கிறது. இதைத்தான் தொழில் வளர்ச்சி என்று சொல்கிறீர்களா?, ஏன் நீங்கள் பட்டுப்பூச்சி, வளர்ச்சி, நெசவு வளர்ச்சி, வேளாண்மை செய்தல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், தச்சு செய்வது, பாணை செய்வது இதெல்லாம் உங்களுக்கு தொழில் வளர்ச்சி என்று தெரியவில்லையா. விரைவு பயணம் அல்ல. விரைவு அழிவு இது.

    கே: 8-வழிசாலை போட்டு தீருவோம் என்ற முயற்சி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறதே?

    ப: அரசு முயற்சி செய்யும். ஆனால், ஒருபோதும் இந்த சாலை போடபோறதில்லை. சாலை போடவும் நாங்கள் விடப்போறதில்லை. நீங்கள் கல்லை வேண்டும் என்றால் நடலாம். நிரந்தரமாக 25 வருடம் இவர்களே ஆட்சியில் இருக்க போறதா நினைக்கிறாங்க. இதெல்லாம் கிடையாது.

    அரசு பஸ்சிக்குள்ளே நம்ம மக்கள் குடையை பிடித்து பயணிக்கிறார்கள். ஏனென்றால் மேற்கூரை ஓழுகிறது. ஓட்டுநருக்கு சரியான இருக்கை இல்லை.

    செய்யாத்துரை ஒப்பந்ததாரர் ஆட்டுத்தோல் விற்று கொண்டிருந்தவர். எங்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர். ஒரே இடத்தில் காருக்குள் 36 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம் பதுக்கி வைத்திருக்கிறார்.

    ஒரே இடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது என்றால் பல இடங்களில் எவ்வளவு பணம் இருக்கும்.

    கே: உங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் வடிவம் எப்படி இருக்கும்?

    ப: போராட்டம் நடத்த எங்ககிட்ட அனுமதி கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். அனுமதி கேட்டால் கொடுப்பார்களா?

    கே. தூத்துக்குடியில் நீங்கள் ஏன் நுழையவில்லை?

    ப: தூத்துக்குடியில் என்னை இதுவரை நுழையவே விடவில்லை. மதுரையில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள், அதுபோல் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள் என்று சொல்கிறார்கள். எனது அப்பா இறந்தால் கூட போக முடியாது. இவ்வளவு அடக்குமுறை எதுக்கு.

    மறுபடியும் நான் காவல் துறையிடம் மக்களை சந்திக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்பேன். மறுத்தால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மறுபடியும் மக்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    காஞ்சீபுரத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Greenwayroad

    காஞ்சீபுரம்:

    பசுமை வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்தது.

    காஞ்சீபுரம் அடுத்த மணல்மேடு பகுதியில் நேற்று நிலம் அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வந்தனர்.

    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நேரு, மற்றும் நிர்வாகிகள் மோகனன், சங்கர், கனகராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திர சேகரன் ஒருமையில் பேசுவதாகவும் நில எடுப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவில் போலீசாரை குவித்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களை அடைத்து வைத்திருந்த மாகரல் காவல் நிலையத்தினை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். #Greenwayroad

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை எதிராக போராட்டத்தை தூண்டிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் தென் இந்தியாவின் 2-வது பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன.

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களிலும் விவசாயிகளின் நிலத்தை அளந்து கல் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது திருவண் ணாமலையில் நில அளவு பணி நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பசுமை வழிசாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    செங்கத்தை அடுத்த அயோத்தியாபட்டணம், கட்டமடுவு பகுதிகளில் விவசாயிகளின் நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் பணியை அதிகாரிகள் 2 நாட்களாக மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் நட்டு செல்லும் எல்லைக்கற்களை விவசாயிகள் உடனுக்குடன் பிடுங்கி வீசி எறிகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் 2 நாட்களாக பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

     


    சில பகுதிகளில் நில அளவீடு செய்யும் அதிகாரிகளை தங்கள் ஊருக்குள் விவசாயிகள் விடவில்லை. இதையடுத்து அயோத்தியாபட்டணம், கட்டமடுவு ஆகிய பகுதிகளில் பசுமை வழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ந்தேதி (நாளை) திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியபடி உள்ளது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் தகவல்களை பரப்புவது தெரிய வந்தது. பசுமை வழிச்சாலை திட்டம் பற்றி அவதூறு பரப்புவதோடு, மக்களை திசை திருப்பும் வகையில் அவர்கள் வதந்தி பரப்புவதாக போலீசார் கருதினார்கள்.

    இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்த விஜயகுமார், திருவண்ணாமலை அருகே உள்ள வேளுகானந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பவன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மூவரும் ‘‘8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் இளைஞர்கள் வருகிற 1-ந்தேதி ஒன்றிணைய வேண்டும்’’ என்று பேஸ்புக், வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் நேற்று மாலை மூவரிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த 3 பேரையும் வேறு யாராவது மூளை சலவை செய்து தூண்டி விட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு அதிகாரிகள் நில அளவீடு செய்யும் போது பணியை தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும், ‘பேஸ்புக், வாட்ஸ்-அப்’ ஆகிய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யான செய்தி பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அவர்களது விசாரணையில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. சேலம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரையும், பசுமை வழிச்சாலை குறித்து பொய்யான தகவலை பேஸ்புக்கில் பரப்பியதாக சேலம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. சி.நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     


    அப்போது அவர்கள், ரே‌ஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை நிலம் அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளின் முன்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முன்னதாக பெண்கள் மற்றும் விவசாயிகள் சி.நம்மியந்தல் கூட்டுரோடு பகுதியில் சாலையோரம் தரையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால், நிலம் அளவீடு பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் ‘‘நாங்கள் எங்கள் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் விளை நிலத்தில் கிணறு போன்றவை உள்ளன. நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை அமைக்கப் போவதாகவும், இதற்காக மொத்தம் 277.4 கிலோ மீட்டர் தூரம் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்கள் வழியாக சென்னை வரை சாலை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக நிலம் அளவீடும், சில இடங்களில் எல்லை கல் பதிக்கப்பட்டும் வருகிறது. நாங்கள் எங்கள் நிலங்களை 8 வழிச் சாலைக்கு தருவதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு 8 வழி பசுமைச் சாலை வேண்டாம்.

    இது தொடர்பாக எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து கொள்கிறோம்’’

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், கவர்னர், முதல்- அமைச்சர், மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் இதே கடிதத்தை அனுப்பி வைத்தனர். #GreenWayRoad

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை பற்றி கருத்து கூறினாலே கைது செய்வதா? என போலீசாருக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Thirumavalavan

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான். கடந்த ஆண்டில் 4-வது இடத்தில் இருந்து தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

    சிறுமிகள், பழங்குடியினர்,சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

    மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க சென்னையில் செப்டம்பர் முதல்வாரத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.

    8 வழி சாலை பற்றி கருத்து கூறினால் காவல் துறை மூலம் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    விதிமுறைகளுக்கு எதிராக கவர்னர் அறிக்கை வெளியிடுகிறார். 7 ஆண்டுகள் சிறை என்ற கவர்னரின் போக்கு கண்டிக்கத்தக்கது.


    இது முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? காவல்துறை தலைமையாரிடம் உள்ளது என்று தெரியவில்லை.

    கருத்து கூறியவர்களை கைது செய்த காவல் துறை தற்போது செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களை தாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தவர்களுக்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் இணைந்து 3-ந் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

    இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் பசுமை வழிச்சாலையை எதிர்த்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #Thirumavalavan

    பசுமை வழி சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #GreenWayRoad

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை பறிப்பதற்காக அரசே பொய்களை அவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடீஸ்வரர்களாகி விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன.

    உள்ளூர் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் மக்களை அணுகும் ஆட்சியாளர்கள், நிலத்திற்கு கோடிகளில் இழப்பீடு வழங்கப்படும்; இழப்பீடு தேவையில்லை என்றால் செழிப்பான பகுதிகளில் மாற்று நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டுதலும், மிரட்டலும் கலந்து மக்கள் மனதை கரைக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் பசுமைச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்திய பின்னர் ஆட்சியாளர்களின் அணுகு முறை எவ்வாறு மாறும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இன்றைய நிலையில் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான முதன்மை சாலை உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சாலை தான். இந்த 4 வழிச் சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி.

    உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமண அரங்குகள், கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன.


    கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம், கிணறுக்கு ரூ.10 லட்சம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில், அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசி, இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று ஆசைக் காட்டினர்கள்.

    அதை உண்மை என்று நம்பிய மக்களும் தேசிய நெடுஞ்சாலை அமைப்ப தற்காக தங்களின் நிலங்களை வழங்கினார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது. நியாயமான இழப்பீடு வழங்கக் கோரியவர்கள் மிரட்டப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது தான் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். ஆனால், அந்ததீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை இன்று வரை அரசு நிறைவேற்ற வில்லை.

    சென்னை-சேலம் பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.9 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களை வெளியிடும்படி முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சவால் விடுத்திருந்தேன்.

    ஆனால், இருவர் தரப்பிலிருந்துமே இதுவரை எந்த பதிலும் இல்லை. மற்ற மாவட்ட ஆட்சியர்களாலும் இதுதொடர்பாக விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்க முடிய வில்லை.

    இத்தகைய சூழலில் பசுமை வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை அரசு மீண்டும் பெற வேண்டுமானால், உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னைசேலம் பசுமைவழிச் சாலை சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #GreenWayRoad

    தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர் என்று திருச்செந்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #GreenWayRoad

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதைத் தொடர விடக்கூடாது. இது நல்லதல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நாத்திகம் பேசும் கொள்கை கொண்ட அவருக்கு கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது தொடர்பாக அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வளர்ச்சி மற்றும் விவசாயத்தை பற்றி அறியாத அப்பாவி மக்களை தூண்டி விட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர். டெல்லியில் 14 வழிச்சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு இத்தகைய எதிர்ப்பு ஏற்பட வில்லை.

    காஷ்மீரில் பா.ஜ.க. 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவில்லை. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #GreenWayRoad

    சேலம்-சென்னை 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. #GreenWayRoad

    சேலம்:

    சேலம்-சென்னைக்கு 8 வழி விரைவு சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் 277 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது. 70 அடி அகலத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைய உள்ள இந்த சாலைக்கு 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    அதிகாரிகள் நில அளவீடு செய்த போது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆச்சாங் குட்டப்பட்டி, குப்பனூர், உடையாப்பட்டி எருமாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் நேற்று வீடியோ எடுக்கப்பட்டது.

     


    இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று ஆள் இல்லாத குட்டி விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் சொல்லாததால் அந்த பகுதி விவசாயிகளும், பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் எவ்வளவு தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் மாமரங்கள் உள்ளது என்பது குறித்தும், விவசாய பயிர்கள், தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் வீடியோ எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இந்த வீடியோ பதிவுகள் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் இந்த இடங்களில் எவ்வளவு மரங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.

    ×