search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai to Salem greenway road"

    திருவண்ணாமலையில் 8 வழிச்சாலைக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர். #Greenwayroad #Farmersstruggle

    திருவண்ணாமலை:

    சென்னை- சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் வீரப்பத்திரன் உள்பட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், வனப்பகுதிகள் கையகப்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள், பள்ளி கூடங்கள், 8 மலைகளும் உடைக்கப்படுகிறது.

    இதனால் பல ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரங்களாக உள்ள விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பை மீறி 36 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழி சாலை அமைப்பதற்கான நில அளவீடு ஜூன் மாதம் நிறைவு பெற்றது. 2-ம் கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மண் பரிசோதனை மற்றும் மலையை குடைந்து சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 8 வழி சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக விவசாய சங்கத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் பாதிக்கப்படும் விவசாயிகளும் பங்கேற்பதால் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் யாராவது போராட்டத்தை தூண்டி விடுகிறார்களா? என்று உளவுத்துறையினர் மீண்டும் கிராமங்களில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அயோத்தியாப்பட்டினத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

    தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் சேலத்தில் நேற்று மாலை நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தடையை மீறி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநில துணை தலைவர் இந்திரஜித் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு நிள அளவீடு பணிகள் நடந்த போது சேலத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. அப்போது போராட்டத்தை தூண்டியதாக சிலர் கைது செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யப்பட்டது. அதனால் போராட்டம் குறைந்தது.

    இந்தநிலையில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் உளவுத்துறை போலீசார் 8 வழி சாலை அமையும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ 3200 கோடி செலவில் சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி புலிக் குன்றம் வன்பகுதி அழிக்கப்படுகிறது. #Greenwayroad

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து சார்பில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது. விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் இந்த சாலைக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அனைத் தையும் மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை பசுமை வழிச் சாலை அமைத்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை - சித்தூருக்கு ரூ. 3,200 கோடி செலவில் பசுமை வழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 126 கிலோ மீட்டர் தூரத் துக்கு இந்த சாலை அமைக் கப்பட உள்ளது. இதற்காக புலிக்குன்றத்தில் 32 ஹெக் டேர் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 43 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலம் சித்தூரில் 83 கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப் படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை - சித்தூருக்கு பசுமை வழிச்சாலை ரூ. 3,200 கோடி செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பு பணிக்காக புலிக் குன்றம் வனப்பகுதியில் 32 ஹெக்டேர் நிலம், சாலை யோரம் உள்ள பகுதியில் 886 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.

    64 சதவீதம் விவசாய நிலம், 15 சதவீதம் தரிசு நிலம், 10 சதவீதம் வனப் பகுதி நிலம் வழியாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப் படுகிறது.

    மத்திய-மாநில அரசு களின் அனுமதியின் பேரில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

    இந்த பசுமை வழிச்சாலையால் சென்னை - ஆந்திராவுக்கு கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து எளிதில் நடைபெறும் துறை முகங்களுக்கு சரக்குகள் ஏற்றி இறக்கி செல்லும் பணிகள் விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம் என்று நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #Seeman

    சேலம்:

    சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கைது செய்து சிறைபடுத்துவதன் மூலமாக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகின்றனர். நாங்கள் மக்களை சந்திக்கத்தான் போகிறோம். அரசே கருத்து கேட்கிறது. மாவட்ட கலெக்டரிடம் மக்கள் வரிசை வரிசையாக நின்று கருத்து சொல்கிறார்கள். நாங்களும் அதுபோல பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்கள் தான் கேட்கிறோம். முதல்-அமைச்சர் 90 சதவீத மக்கள் எங்களுக்கு விரும்பி நிலத்தை தந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். 90 சதவீத மக்கள் நிலத்தை தந்து விட்ட பிறகு, நாங்கள் மக்களை சந்திக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்.

    மக்களை நாங்கள் சந்திக்கும்போது அவர்களுடைய குறைகளை கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறார்கள். இது தான் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் வைத்து என்னை கைது செய்வதன் மூலம் மக்களுக்கு அச்சுறுத்தலை விடுகிறார்கள். மறைமுக மிரட்டலை விடுகிறார்கள். நேற்று சிறைபிடித்து இன்றைக்கு பிணையில் விடுகிறார்கள் என்றால் இது அவசியமற்ற ஒரு கைது. இந்த சிறைபிடிப்பு அவசியமற்றது என்று கருதியதால் தான் நீதிபதி விடுதலை செய்தார்கள். காரணமற்ற கைது.

    ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே இவ்வளவு சாலைகள் இல்லை. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க ஏற்கனவே 6 வழி கிருஷ்ணகிரியில் இருக்கிறது. 4 வழி சேலத்தில் இருக்கிறது. ரெயில் வண்டி பயணம், விமானம் பயணம் இருக்கிறது. எனவே சேலத்திற்கு ஏன் வேக பயணமாக 8 வழி சாலை போட வேண்டும் என சிந்திக்கிறார்கள். வேகமாக போய் நாங்க என்ன செய்ய போகிறோம்.

    கேள்வி: 8-வழிச்சாலை தொழிற் வளர்ச்சிக்கு அவசியம் என்று சொல்கிறார்கள்?

    பதில்: காரை பற்றி கவலைபடுகிறார்கள். ஏன்? நீர், சோறு பற்றி கவலைப்படவில்லை. 10 ஆண்டுகள் கழித்து கார்களின் எண்ணிக்கை கூடிவிடும் என்று சொல்கிறார்கள்.130 கோடி மக்கள் இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் கழித்து மக்கள் மக்கள் தொகை கூடிவிடும். அவர்களுக்கான நீர், சோறு?. இதை பற்றி சிந்திக்கமாட்டேங்கிறிங்க.


    தொழிற்சாலையா அரிசி, பருப்பு உற்பத்தி செய்யும்?, காய்கறி விற்கும்?. இது என் நிலத்தில் இருந்து தான் வரணும். நிலத்தை எடுத்துவிட்டு பணத்தை தாறேன் என சொல்கிறீர்கள். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன். அரிசி, பருப்பு வாங்கி சாப்பிடுவேன். இது எங்கிருந்து வரும். என் நிலத்தில் இருந்து வரும். இதைத்தான் என் நிலம் கொடுக்கிறதே.

    நீங்கள் தொழில் வளர்ச்சி என்று எதை சொல்கிறீர்கள்?. தனியார் நிறுவனங்கள் கார் தயாரிக்கிறது, மொபைல் தயாரிக்கிறது. இதைத்தான் தொழில் வளர்ச்சி என்று சொல்கிறீர்களா?, ஏன் நீங்கள் பட்டுப்பூச்சி, வளர்ச்சி, நெசவு வளர்ச்சி, வேளாண்மை செய்தல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், தச்சு செய்வது, பாணை செய்வது இதெல்லாம் உங்களுக்கு தொழில் வளர்ச்சி என்று தெரியவில்லையா. விரைவு பயணம் அல்ல. விரைவு அழிவு இது.

    கே: 8-வழிசாலை போட்டு தீருவோம் என்ற முயற்சி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறதே?

    ப: அரசு முயற்சி செய்யும். ஆனால், ஒருபோதும் இந்த சாலை போடபோறதில்லை. சாலை போடவும் நாங்கள் விடப்போறதில்லை. நீங்கள் கல்லை வேண்டும் என்றால் நடலாம். நிரந்தரமாக 25 வருடம் இவர்களே ஆட்சியில் இருக்க போறதா நினைக்கிறாங்க. இதெல்லாம் கிடையாது.

    அரசு பஸ்சிக்குள்ளே நம்ம மக்கள் குடையை பிடித்து பயணிக்கிறார்கள். ஏனென்றால் மேற்கூரை ஓழுகிறது. ஓட்டுநருக்கு சரியான இருக்கை இல்லை.

    செய்யாத்துரை ஒப்பந்ததாரர் ஆட்டுத்தோல் விற்று கொண்டிருந்தவர். எங்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர். ஒரே இடத்தில் காருக்குள் 36 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம் பதுக்கி வைத்திருக்கிறார்.

    ஒரே இடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது என்றால் பல இடங்களில் எவ்வளவு பணம் இருக்கும்.

    கே: உங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் வடிவம் எப்படி இருக்கும்?

    ப: போராட்டம் நடத்த எங்ககிட்ட அனுமதி கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். அனுமதி கேட்டால் கொடுப்பார்களா?

    கே. தூத்துக்குடியில் நீங்கள் ஏன் நுழையவில்லை?

    ப: தூத்துக்குடியில் என்னை இதுவரை நுழையவே விடவில்லை. மதுரையில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள், அதுபோல் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள் என்று சொல்கிறார்கள். எனது அப்பா இறந்தால் கூட போக முடியாது. இவ்வளவு அடக்குமுறை எதுக்கு.

    மறுபடியும் நான் காவல் துறையிடம் மக்களை சந்திக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்பேன். மறுத்தால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மறுபடியும் மக்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை மத்திய அரசின் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும் போது, அதை மக்களின் நிலையிலிருந்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணுகியிருக்க வேண்டும்.

    பசுமைவழிச் சாலையால் தனியார் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை; அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15,000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.

    இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, எதிர்ப்பு நிலவுகிறதா? என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதுகுறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியிருக்கலாமே? மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அம்பானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது பொதுவாக்கெடுப்பு நடத்தி தானே அத்திட்டத்தை மராட்டிய மாநில அரசு ரத்து செய்தது.

    கேரளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை கேரளத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட போது அம்மாநில மக்களுடன் இணைந்து அரசும் எதிர்த்து தான் முறியடித்தது.

    சுற்றுசூழலுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கோக் ஆலைக்கு பிளாச்சிமடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை மதித்து அந்த ஆலையை மூட கேரள அரசு தீர்மானித்தது. இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் தெரியுமா?

    பசுமைவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது. அதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து வர வேண்டும் என்பதால், அதற்கான அழுத்தம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பசுமைச் சாலைத் திட்டத்தை பாரத்மாலா திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுக்கிறார்.

    அடுத்த 24 மணி நேரத்தில் அக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அந்நேரத்தில் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதுகுறித்தும் நிதின்கட்கரியிடம் தான் விவாதிக்க வேண்டும்;

    ஆனால், அதை முதல்வர் செய்யவில்லை. பசுமைச் சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை.

    புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது தான் நகைச்சுவையாகும். விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் சாலை யோரங்களில் இருந்த 3,321 மதுக்கடைகளை மூடியது.

    ஆனால், அடுத்த சில வாரங்களில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து சாலைகளில் அவசரமாக மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விபத்துகளை குறைப்பது குறித்தெல்லாம் பேசுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

    ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருப்பதால் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என நினைத்தால் தோல்வியடைந்து விடுவார். மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #GreenWayRoad #Ramadoss

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்காக உயிரே போனாலும் ஒருபிடி மண் எடுக்க விடமாட்டோம் என்று திருவண்ணாமலை விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், காடுகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்தால் பசுமையாக காட்சி அளிக்கும் விவசாய நிலங்கள் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது தெரியவில்லை.

    திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களும் அடிப்படையாகவே விவசாயத்தை சார்ந்தவை. பாக்கு மரங்கள், குலை குலையாய் காய் வைத்திருக்கும் தென்னை மரங்கள் என எங்கு பார்த்தாலும் 5 மாவட்டங்களும் பசுமையாகவே காட்சியளிக்கின்றன.அந்த பசுமையெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு தான்.

    இந்த பசுமையை அழித்து தான் பசுமை சாலை போடப்படுகிறது. விவசாயிகள் நிலத்தில் செருப்பு அணிந்து நடக்க மாட்டார்கள். சோறு போடற தெய்வம் என்பார்கள். சேலம் மக்களின் கொந்தளிப்பே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளம்.

    விவசாயிகளின் கோபமும், விரக்தியும் தான் விவசாய நிலங்களில் கற்களை நடவரும் அதிகாரிகளை எதிர்க்க வைக்கிறது. திட்டத்திற்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர்கள் பியூஸ் மனுஸ், வளர்மதி மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

     


    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் விவசாயிகளை விரட்டியடித்து முடித்து விட்டனர்.

    திருவண்ணாமலை தாலுகாவில் காந்திபுரம், நார்த்தாம்பூண்டி, மேப்பத்துறை, முத்தரம்பூண்டி, தென்னகரம், நெல்லிமேடு ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு பணி நடந்தது. மேப்பத்துறை கிராமத்தில் 2 ஏக்கர் நிலம், வீடு பறிபோவதால் லட்சுமி என்ற மூதாட்டி மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

    சிறுகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்த ஒருசில விவசாயிகள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கு முயன்றனர். தென்னகரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    அங்கு நடந்த நில அளவீடு பணியை தடுக்க 2 பெண்கள் பெட்ரோல் கேனுடன் வந்து ‘தீக்குளித்து சாவோம்’ என தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறுகிளாம்பாடி மற்றும் தென்னகரத்தில் நிலம் அளவீடும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    செய்யாறு அடுத்த தேத்துறை, நெடுங்கல், இளநீர் குன்றம், கீழ்கொளத்தூர் கிராமங்களில் நிலம் எடுக்க அதிகாரிகள் முகாமிட்டனர். அப்போது, தேத்துறையில் 8 வழி பசுமை சாலை திட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என வேண்டி கொண்டு அதிகாரிகள் பூமி பூஜை செய்தனர்.

    பூமிபூஜையை வெற்றிகரமாக முடித்தவுடன் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை தொடர்ந்தனர். பசுமை சாலைக்காக தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி இடமும் கையகப்படுத்தப்பட்டது. பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானமும் பறிபோகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று மாதாந்திர தேர்வு எழுதி கொண்டிருந்தனர். மாணவர்களை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்து மாணவர்களுக்கு நடுவில் கற்களை நட்டனர். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தேத்துறை கிராமத்தில் விவசாயி பெருமாள் என்பவரின் மனைவி அஞ்சலை தனது நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் புரண்டு கதறி அழுதார்.

     


    செய்யாறு அருகே உள்ள நெடுங்கல் கிராமத்தில் பசுமை சாலை அமையும் இடத்திற்கு அருகே உள்ள புறம்போக்கு நிலங்களை 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளனர். பசுமை வழி சாலை அமைந்தால், சாலையோர நிலம் மதிப்புமிக்கதாக மாறும்.

    அப்போது, அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் இரவோடு, இரவாக குடிசைகள் அமைத்திருப்பது தெரியவந்தது. எனவே, திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மொத்தத்தில், பசுமை சாலைக்காக ஒருபிடி மண் எடுக்க விட மாட்டோம் என விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்து பசுமை சாலையை அமைக்க தீவிரம் காட்டுகின்றனர்.

    விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்த மறுக்கின்றனர். ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவித்தனர். பசுமை சாலை அமைத்தே தீருவோம் என மத்திய-மாநில அரசுகள் அடம்பிடிக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் ஆட்சேபனை தெரிவித்தும் பயனில்லை.

    போலீசை வைத்து அடக்குமுறையோடு எதேட்சை அதிகாரத்துடன் ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை. பாடுபட்டு பண்படுத்தி உழுத எங்கள் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம் என்று ஆவேசமாக கூறினர். #GreenWayRoad

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை எதிராக போராட்டத்தை தூண்டிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GreenWayRoad

    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் தென் இந்தியாவின் 2-வது பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன.

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களிலும் விவசாயிகளின் நிலத்தை அளந்து கல் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது திருவண் ணாமலையில் நில அளவு பணி நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பசுமை வழிசாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    செங்கத்தை அடுத்த அயோத்தியாபட்டணம், கட்டமடுவு பகுதிகளில் விவசாயிகளின் நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் பணியை அதிகாரிகள் 2 நாட்களாக மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் நட்டு செல்லும் எல்லைக்கற்களை விவசாயிகள் உடனுக்குடன் பிடுங்கி வீசி எறிகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் 2 நாட்களாக பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

     


    சில பகுதிகளில் நில அளவீடு செய்யும் அதிகாரிகளை தங்கள் ஊருக்குள் விவசாயிகள் விடவில்லை. இதையடுத்து அயோத்தியாபட்டணம், கட்டமடுவு ஆகிய பகுதிகளில் பசுமை வழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ந்தேதி (நாளை) திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியபடி உள்ளது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் தகவல்களை பரப்புவது தெரிய வந்தது. பசுமை வழிச்சாலை திட்டம் பற்றி அவதூறு பரப்புவதோடு, மக்களை திசை திருப்பும் வகையில் அவர்கள் வதந்தி பரப்புவதாக போலீசார் கருதினார்கள்.

    இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்த விஜயகுமார், திருவண்ணாமலை அருகே உள்ள வேளுகானந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பவன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மூவரும் ‘‘8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் இளைஞர்கள் வருகிற 1-ந்தேதி ஒன்றிணைய வேண்டும்’’ என்று பேஸ்புக், வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் நேற்று மாலை மூவரிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த 3 பேரையும் வேறு யாராவது மூளை சலவை செய்து தூண்டி விட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு அதிகாரிகள் நில அளவீடு செய்யும் போது பணியை தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும், ‘பேஸ்புக், வாட்ஸ்-அப்’ ஆகிய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யான செய்தி பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அவர்களது விசாரணையில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. சேலம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரையும், பசுமை வழிச்சாலை குறித்து பொய்யான தகவலை பேஸ்புக்கில் பரப்பியதாக சேலம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. சி.நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     


    அப்போது அவர்கள், ரே‌ஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை நிலம் அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளின் முன்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முன்னதாக பெண்கள் மற்றும் விவசாயிகள் சி.நம்மியந்தல் கூட்டுரோடு பகுதியில் சாலையோரம் தரையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால், நிலம் அளவீடு பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் ‘‘நாங்கள் எங்கள் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் விளை நிலத்தில் கிணறு போன்றவை உள்ளன. நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை அமைக்கப் போவதாகவும், இதற்காக மொத்தம் 277.4 கிலோ மீட்டர் தூரம் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்கள் வழியாக சென்னை வரை சாலை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக நிலம் அளவீடும், சில இடங்களில் எல்லை கல் பதிக்கப்பட்டும் வருகிறது. நாங்கள் எங்கள் நிலங்களை 8 வழிச் சாலைக்கு தருவதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு 8 வழி பசுமைச் சாலை வேண்டாம்.

    இது தொடர்பாக எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து கொள்கிறோம்’’

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், கவர்னர், முதல்- அமைச்சர், மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் இதே கடிதத்தை அனுப்பி வைத்தனர். #GreenWayRoad

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை பற்றி கருத்து கூறினாலே கைது செய்வதா? என போலீசாருக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Thirumavalavan

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான். கடந்த ஆண்டில் 4-வது இடத்தில் இருந்து தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

    சிறுமிகள், பழங்குடியினர்,சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

    மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க சென்னையில் செப்டம்பர் முதல்வாரத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.

    8 வழி சாலை பற்றி கருத்து கூறினால் காவல் துறை மூலம் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    விதிமுறைகளுக்கு எதிராக கவர்னர் அறிக்கை வெளியிடுகிறார். 7 ஆண்டுகள் சிறை என்ற கவர்னரின் போக்கு கண்டிக்கத்தக்கது.


    இது முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? காவல்துறை தலைமையாரிடம் உள்ளது என்று தெரியவில்லை.

    கருத்து கூறியவர்களை கைது செய்த காவல் துறை தற்போது செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களை தாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தவர்களுக்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் இணைந்து 3-ந் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

    இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் பசுமை வழிச்சாலையை எதிர்த்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #Thirumavalavan

    விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து சாலை வசதி வேண்டாம் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #GreenWayRoad

    போளூர்:

    சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 1,100 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளது. போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் பசுமைச்சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்து கேட்டார். இதில் விளாப்பாக்கம், ராந்தம், பெலாசூர், பில்லூர், காம்பட்டு, ஆத்துரை, உலகம்பட்டு உள்பட பல கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகள் ‘நிலத்தை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்களது மூதாதையர் நிலம் வருமா?, நிலம் இல்லை என்றால் கூலி வேலைக்கு சென்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது. குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது. சாலை வேண்டாம், நிலம் தான் வேண்டும்’ என்று ஒட்டு மொத்தமாக கண்ணீர் மல்க தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மக்கள் கேட்கும் திட்டத்தை தான் கொண்டு வர வேண்டும். 8 வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள். சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 வழியாக சாலைகள் உள்ளன. சென்னை- சேலம் ஊளுந்தூர்பேட்டை வழியாகவும், வாணியம்பாடி வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமைச்சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் சரி, யாரிடமும் கருத்து கேட்பது இல்லை. மக்கள் சொத்தை அபகரிக்கிறது. பசுமையை அழிக்கிறது. சென்னை- சேலம் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும், புதிய பசுமைசாலை தேவையில்லை. விவசாயிகளாகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்து அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைத் துறையிடம் அளித்து நல்ல தீர்வு கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    பசுமை வழிச்சாலைக்கு புதிய நிபந்தனைகள் விதித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #GreenWayRoad

    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

    தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாக சென்று இணைகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேலம்-தர்மபுரியில் சேர்வராயன் மலைப்பகுதியில் இந்த சாலை செல்கிறது. இந்த சாலைக்காக 5 மாவட்டங்களிலும் விவசாய நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.

    இந்த சாலையில் வனப்பகுதி பாதிக்கப்படும், ஏராளமான மரங்களும் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இயற்கை விவசாயமும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஆங்காங்கே விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.


    அரசியல் கட்சிகளும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பதிலாக அந்த நிதியை கொண்டு ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றார்.

    இதற்கிடையே சேலம்- சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்- சுற்றுச்சூழல் துறை அமைச் சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளது.

    இது சம்பந்தமாக திட்டத்தின் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு இயக்குனர் ரகு குமார் கோடாலி சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை-சேலம் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம்- சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற் கொள்ளப்படும்.


    மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.

    மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை- பெங்களூர் இடையே 265 கி.மீ. தூர எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் கர்நாடகத்தில் பொது மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல் நிற்கிறது.

    இதற்கு பதிலாகத்தான் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை நிறைவேற்றப்பட்ட பின்பு 2-வது கட்டமாக கோவை வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு கேரள மாநிலம் கொச்சி வரை நீடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த திட்டத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பொதுமக்கள் கருத்து கேட்ட பின்பே நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
    #GreenWayRoad

    சென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை -சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

    மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    காவல்துறையினரை ஏவி, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, வீடு வீடாக சென்று மிரட்டுவது, காவல்துறை பாதுகாப்புடன் நில அளவை மேற் கொள்வது போன்ற அனைத்து வகையான அடக்கு முறைகளிலும் பினாமி அரசு ஈடுபட்டு வருகிறது.

    மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை-சேலம் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும், அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    மற்றொரு புறம் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை முறியடித்து சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

    சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும் போது நான்காவதாக பசுமை சாலைத் திட்டத்திற்கான தேவை என்ன? மக்கள் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அவர்கள் துடிப்பது ஏன்? என்பன உள்ளிட்ட மக்களின் வினாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும்.

    சென்னையிலிருந்து சேலத்திற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டியது வளர்ச்சிக்கு அவசியம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சேலம் செல்லப்பயன்படுத்தப்படும் இரு தேசிய நெடுஞ்சாலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை.


    உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள புறவழிச் சாலைகள் இன்னும் 4 வழிப் பாதைகளாக மாற்றப்படாததால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

    அதேபோல், சென்னைபெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா வரையிலான சாலை ஆறு வழிப்பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழியாகவே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சேலம் செல்லப்பயன்படும் மற்றொரு சாலையான திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 8 ஆண்டுகளாகியும் அமைக்கப்படாமல் ஒட்டுச்சாலையாகவே காட்சியளிக்கிறது. இந்த மூன்று சாலைகளையும் சீரமைக்கும்படி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பலமுறை நேரிலும், தொலை பேசியிலும் வலியுறுத்தியுள்ளேன். எனது சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் பலமுறை பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

    ஆனால், அதை செய்யாமல் ரூ.10,000 கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி புதிய பசுமை சாலை அமைப்பது திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இரும்புத்தாது கொள்ளையடிக்கவுள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறுக்க முடியுமா?

    ஒரே ஒரு நிறுவனத்தின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறித்து அமைக்கப்படும் சாலையை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றால், மக்களின் பயன்பாட்டுக்கான இரு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்களை எப்படி அழைப்பது? இது பெருந்துரோகம் அல்லவா?

    சென்னை - சேலம் பசுமைச் சாலைக்காக 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் உட்பட மொத்தம் 1900 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்திற்காக தேவைப்படுவதாகவும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்று முதல்-அமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதவாதம் ஆகும்.

    புறம்போக்கு நிலங்கள் தவிர 1500 ஹெக்டேர் நிலங்கள், அதாவது 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் என்பதால் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதையும் இழந்து வாழ்வாதார மற்றவர்களாக மாறுவார்கள்.

    மொத்தம் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வனப்பகுதிகள் சீரழிக்கப்படும். இதனால் மக்களுக்கும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை யாராலும், எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது.

    இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தி அமைக்கப்படும் பசுமை சாலை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்கு பயன் படுவதாகவும் அமையுமா? என்றால் அதுவும் இல்லை. இது முழுக்க, முழுக்க ஒரு தனியார் நிறுவன நலனுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது.

    பினாமி ஆட்சியாளர்கள் வேண்டுமானால் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முழக்கம் எழுப்பலாம். ஆனால், தங்களின் நலனுக்கு எதிரான இத்திட்டத்தை பொதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான யோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் எனப்படுபவை மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

    இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GreenWayRoad #Ramadoss

    சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தீக்குளிப்பதாகவும் அறிவித்துள்ளனர். #GreenWayRoad
    சேலம்:

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். எனவே பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வந்தனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்றும், இதற்கான இறுதி கட்ட முகாம் 14-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி, பத்மபிரியா, பெலிக்ஸ்ராஜா, செம்மலை, வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.

    இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், எங்கள் விவசாய நிலத்தை எடுக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர். மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம் தலைமையில் பூலாவரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனு கொடுத்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும் போது, 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்துக்கான முழு வரைபடம், எப்படி செயல்படுத்த உள்ளார்கள்?, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் என்று கேட்டு இருந்தோம். ஆனால் இந்த முகாமில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி ஆகும். ஆனால் அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 கோடி இழப்பீடு வழங்கினாலும் நிலத்தை அளிக்க மாட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தினால் விவசாயத்தையே நம்பி இருக்கிற மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.

    ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுக்க ஏராளமான விவசாயிகள் வந்ததாலும், இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர், துணை கமி‌ஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #GreenWayRoad
    ×