search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவேண்டும் - ராமதாஸ்
    X

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவேண்டும் - ராமதாஸ்

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை மத்திய அரசின் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும் போது, அதை மக்களின் நிலையிலிருந்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணுகியிருக்க வேண்டும்.

    பசுமைவழிச் சாலையால் தனியார் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை; அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15,000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.

    இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, எதிர்ப்பு நிலவுகிறதா? என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதுகுறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியிருக்கலாமே? மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அம்பானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது பொதுவாக்கெடுப்பு நடத்தி தானே அத்திட்டத்தை மராட்டிய மாநில அரசு ரத்து செய்தது.

    கேரளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை கேரளத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட போது அம்மாநில மக்களுடன் இணைந்து அரசும் எதிர்த்து தான் முறியடித்தது.

    சுற்றுசூழலுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கோக் ஆலைக்கு பிளாச்சிமடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை மதித்து அந்த ஆலையை மூட கேரள அரசு தீர்மானித்தது. இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் தெரியுமா?

    பசுமைவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது. அதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து வர வேண்டும் என்பதால், அதற்கான அழுத்தம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பசுமைச் சாலைத் திட்டத்தை பாரத்மாலா திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுக்கிறார்.

    அடுத்த 24 மணி நேரத்தில் அக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அந்நேரத்தில் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதுகுறித்தும் நிதின்கட்கரியிடம் தான் விவாதிக்க வேண்டும்;

    ஆனால், அதை முதல்வர் செய்யவில்லை. பசுமைச் சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை.

    புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது தான் நகைச்சுவையாகும். விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் சாலை யோரங்களில் இருந்த 3,321 மதுக்கடைகளை மூடியது.

    ஆனால், அடுத்த சில வாரங்களில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து சாலைகளில் அவசரமாக மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விபத்துகளை குறைப்பது குறித்தெல்லாம் பேசுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

    ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருப்பதால் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என நினைத்தால் தோல்வியடைந்து விடுவார். மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #GreenWayRoad #Ramadoss

    Next Story
    ×