search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை மழை"

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    • களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும், மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதில் தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 2.6 சென்டி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 1.9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 1.8 சென்டிமீட்டரும், ஊத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும் இன்றும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாநகர பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
    • கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால் அங்குள்ள அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    நீலகிரியில் கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பெய்ய வேண்டிய கோடைமழை தொடங்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சடசடவென கோடைமழை பெய்ய தொடங்கியது. இது சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

    இது அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலம் காரணமாக வனப்பகுதிகள் வறண்டு காணப்படுவதால் அங்கு தற்போது அடிக்கடி வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டியில் கோடைமழை காரணமாக அங்கு தற்போது குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான காலநிலையும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
    • மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    திருச்சி:

    வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 61.2 சென்டி மீட்டர் மழை பதிவானது. நேற்று மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. திருச்சி மாநகரில் நேற்று இரவு இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. இந்த நிலையில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக திருச்சி டவுன் பகுதியில் 58.3 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 42, ஏர்போர்ட் பகுதியில் 19.6,பொன்மலையில் 39.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கிராமப்புறங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மணச்சநல்லூர் தாலுகாவில் வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 11.2 மில்லி மீட்டர், மணப்பாறையில் 7.6, முசிறியில் 20 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் 9.5, துவாக்குடி 5.1,துறையூர் தென்பர நாடு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    கடந்த 2 நாட்களில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே மானாவாரி நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறுகளீல் நீர் இருப்பு குறைவாக இருந்தது.

    தற்போது பெய்த மழையால் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதியிலும் மழை பெய்துள்ளதால் சம்பா பயிர்களுக்கு இதமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக வழக்கமாக சம்பா, குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சாகுபடி பரப்பை குறைத்தனர். அதேபோல் பயிரிட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலையும் உருவானது.

    இந்தநிலையில் கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதற்கிடையே இன்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, பசும்பொன், ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, திருவாடானை, தேவிப்பட்டினம் மற்றும் கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். காற்றின் தாக்கம் அதிகம் இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணியை மீண்டும் தொடங்கி அதற்கான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சென்னை மாநகர பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, கோயம்பேடு, அண்ணாநகர், சூளைமேடு, அரும்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    மாதவரத்தை அடுத்துள்ள வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்காடு பாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போன்று ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், கோவிலம்பாக்கம், பரங்கிமலை, போரூர், மதுரவாயல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    இதனால் இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாறியது. காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர். அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்த படியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததையும் காண முடிந்தது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பெய்த மழையால் காலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் மழையில் நனைந்தபடியே பொருட்களை வாங்கி சென்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்கள் மழை காரணமாக பாதிப்பையும் சந்தித்தனர்.

    • வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சோழவந்தான் ஆர்.சி. பள்ளி எதிரில் உள்ள வண்ணான் தெருவில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் அங்கு தனியாக வசித்து வந்த யோசனை (வயது 60), அவரது மனைவி சித்ரா (55) ஆகியோரது வீட்டின் மதில் சுவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மடமடமென்று இடியும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். மேலும் இடிந்து விழுந்த வீட்டின் சுவர் பழமையானது. உடனடியாக தாமதிக்காமல் மீதமுள்ள பகுதியையும் இடித்து அகற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் நிஷா கௌதமராஜா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின.
    • சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும் சில இடங்களில் மட்டும் மழை சாரல் போல பெய்து விட்டு நின்று விடும். இது மதுரையில் கடந்த சில நாட்களாக காணப்படும் நிகழ்வாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலையும் மதுரையில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் இடி முழக்கங்கள் கேட்டாலும் மழை வருமா? என்று சந்தேகமே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே மதுரை சிம்மக்கல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி அளவில் சாரல் போல மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில் 9 மணி அளவில் மதுரையில் பெரும்பாலான இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அலைகள் தோன்றி கடல் போல் காட்சியளித்தது.

    இதில் குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதி குளம் போல வெள்ளக்காடாக மாறியது. சிம்மக்கல், தெற்கு வாசல், மாசி வீதிகள், ஆவணிமூல வீதிகள், நேதாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் அண்ணா நகர், காளவாசல், அரசரடி, கூடல் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆங்காங்கே சாலை ஓரங்களில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.

    இரவு 9 மணிக்கு தொடங்கிய மழையால் நகர் பகுதி மற்றும் வணிகப் பகுதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மழை ஓரளவுக்கு குறைந்த உடன் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.

    ஆனால் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பைக், மொபட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அவற்றை இயக்குவதில் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். வாகன பழுது காரணமாக இருசக்கர வாகனங்களுடன் நள்ளிரவில் சாலைகளில் காத்திருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    மேலும் கர்டர் பாலம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் கேரளா மாநில சுற்றுலா பஸ் ஒன்று சிக்கியது. உடனே அதிலிருந்த சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை பேருந்து மீட்கப்பட்டு பயணிகள் புறப்பட்டனர்.

    பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், தத்தனேரி சுரங்க பாலங்களில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் அந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தெப்பக்குளம் உள்ளிட்ட சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இன்று காலை வரை மழை நீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 2 மணி நேரம் மதுரையில் வருணபகவான் வானத்தை திறந்து ஊற்றிய கனமழையால் நேற்று இரவு மதுரையின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.

    மதுரை நகர் மற்றும் வடக்கு பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
    • மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிழலை தேடி ஓடினர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் உஷ்ணத்தால் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.

    சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சேலம் 4 ரோடு, சங்கர் நகர், புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகப்பட்டி, ஜங்சன், பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்த படியே சென்றனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு 11 மணியளவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழையாக கொட்டியது. நள்ளிரவு வரை பெய்த இந்த மழையால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கிச்சிப்பாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அத்வைத ஆசிரம ரோடு, சங்கர் நகர், சூரமங்கலம், ஜங்சன் உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஆறாக ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 82.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனைமடுவு 52, ஓமலூர் 24, கரியகோவில் 5, மேட்டூர் 2.2, பெத்தநாயக்கன்பாளையம் 1.5, ஏற்காடு 1.4, சங்ககிரி 1.3, எடப்பாடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 171.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×